செவ்வாய், 31 ஜனவரி, 2012

தமிழ் எழுத்துரு தகுதரம்

1997 வாக்கில் டிஸ்கி என்று தமிழ் எழுத்துருக்களில் இட அமைவை வெளிநாட்டுத் தமிழர்கள் உருவாக்கியிருந்தார்கள். அப்போது இருந்த 8 பிட் எழுத்து அமைப்பு முறையில் மொத்தம் 256 இடங்கள்தான். முதல் 7 பிட்டுகளுக்கான 128 இடங்கள் அஸ்கி எனப்படும் அமெரிக்க எழுத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. மற்ற மொழிகள் ஒவ்வொன்றும் அடுத்த 128 இடங்களில் தமது எழுத்துக்களை பொருத்திக் கொள்ள முடியும். தமிழ் எழுத்துக்களை அப்படி மேல் 128 இடங்களில் பொருத்தியது tscii என்ற டிஸ்கி தகுதரம்.

அதை ஏற்றுக் கொள்ளாமல் 1999 மாநாட்டில் tab, tam என்று இரண்டு தகுதரங்களை அறிவித்தார்கள். டேப் என்பது தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஒரே எழுத்துருவில் அடிக்க வேண்டி உருவானது. 128 இடங்களில் அஸ்கியும் அடுத்த 128 இடங்களில் தமிழ் எழுத்துக்களுக்கான ஒதுக்கீடும். இதற்கும் டிஸ்கிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. டேம் என்பது 256 இடங்களையும் தமிழ் எழுத்துக்களுக்காக பயன்படுத்துவது. டேம் மூலம் தமிழ் அச்சுத் துறைக்கான எழுத்துக்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பிட் அதிகரிக்கும் போது எழுத்துக்களுக்கான இடம் இரண்டு மடங்காகும்.
2 பிட் - 4 இடங்கள்
3 பிட் - 8 இடங்கள்
4 பிட் - 16 இடங்கள்
5 பிட் - 32 இடங்கள்
6 பிட் - 64 இடங்கள்
7 பிட் - 128 இடங்கள்
8 பிட் - 256 இடங்கள்

8 பிட் முறையிலான டிஸ்கி, டேப் அல்லது பிற மொழிகளுக்கான அமைப்பில் இருந்த மிகப்பெரிய சிக்கல் அவற்றை பல மொழிகளுக்கு ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பதுதான். உதாரணமாக தமிழ் எழுத்துருவில் 142வது இடம் க என்ற எழுத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அதே இடம் இந்தியில் இந்தி கவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரே எழுத்துருவைப் பயன்படுத்தி பல மொழிகளை எழுத முடியாமல் இருந்தது.

டிஸ்கி உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்த வெளிநாட்டுத் தமிழர்களின் முகாமில் நான் இருந்தேன். இந்த புதிய தகுதரங்களுக்கு முன்பாகவே நாங்கள் டிஸ்கியின் அடிப்படையில் அமைந்த எழுத்துருக்களையும், விசைப்பலகை இயக்கிகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டு கணினி அறிஞர்கள் வேண்டுமென்றே இந்த பயன்பாட்டை புறக்கணித்து விட்டார்கள் என்று நீண்ட விவாதங்கள் நடந்தன. இணையத்தில் நடந்த விவாதங்களில் இயல்பாகவே டிஸ்கிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. கடைசி வரை நான் டிஸ்கி எழுத்துக்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். டேப் எழுத்துருக்கள் தமிழ் இணையதளங்களை சிலவற்றைப் பயன்படுத்த மட்டுமே நிறுவிக் கொண்டேன்.

இந்த சச்சரவுக்கு வெளியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தீர்வு/முடிவு வந்தது. இஸ்கி என்று இந்திய மொழிகளுக்கான தகுதரம் ஒன்று இந்தி மொழியின் அடிப்படையில் எல்லா இந்திய மொழிகளுக்கும் உருவாக்கப்பட்டிருந்தது. யூனிகோட் உருவாக்கப்பட்ட போது மத்தியிலிருந்து இந்திய மொழிகளுக்கு அந்த ஒதுக்கீட்டை அனுப்பி விட்டார்கள். டேப், டிஸ்கி என்று அடித்துக் கொண்டிருந்த தமிழ்ச்சூழல் அதில் கவனம் செலுத்தவேவில்லை. யூனிகோட் தகுதரம் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகுதான் விழித்துக் கொண்டார்கள்.

யூனிகோட் என்பது 16 பிட் என்கோடிங்.
16 பிட் எழுத்துருவில்
9 பிட் - 512 இடங்கள்
10 பிட் - 1024 இடங்கள்
11 பிட் - 2048 இடங்கள்
12 பிட் - 4096 இடங்கள்
13 பிட் - 8192 இடங்கள்
14 பிட் - 16384 இடங்கள்
15 பிட் - 32768 இடங்கள்
16 பிட் - 65536 இடங்கள்

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம். முழு விபரங்களையும் இங்கு பார்த்துக் கொள்ளலாம். http://en.wikipedia.org/wiki/Unicode

இந்த இடங்கள் உலகின் எல்லா மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டன. ஒரு மொழிக்கான இடத்தில் இன்னொரு மொழிக்கான எழுத்துக்கள் தலையிடுவதில்லை. அதனால் கணினியின் ஒரே ஆவணத்தில் எல்லா மொழிகளையும் எழுதுவதற்கான சாத்தியம் ஏற்படுத்தப்பட்டது. யூனிகோடை பெரிய மென்பொருள் நிறுவனங்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டன. விண்டோஸ் எக்ஸ்பி வெளியீட்டில் தமிழுக்கான யூனிகோடு ஆதரவு முழுமையாக இருந்தது. லதா என்ற எழுத்துருவையும் மைக்ரோசாப்டு உருவாக்கியிருந்தது.

அது வரை உருவாக்கியிருந்த டிஸ்கி, டேப் எழுத்துருக்கள் சீக்கிரமே வழக்கு ஒழிந்து அல்லது குறைந்து போயின. இப்போது இணையத்தில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா தமிழ் இணைய தளங்களும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு தகுதரத்தில்தான் எழுத்துக்களை காண்பிக்கின்றன. மதுரைத் திட்டம் தளத்துக்குப் போனால், ஆரம்ப கால புத்தகங்களை டிஸ்கி எழுத்துரு வடிவத்தில் பெற்றுக் கொள்ள முடியும். சுஜாதாவின் வழிகாட்டலில் ஆரம்பித்திருந்த அம்பலம் மின் பத்திரிகையில் டேப் எழுத்துக்கள் பயன்பட்டன.

டேப், டிஸ்கி எழுத்துருக்கள் அடிப்படையிலான மோதல்கள் நெருங்கிய நண்பர்களுக்கிடையே கூட இருந்தது. அது பெரும்பாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த கணினியாளர்களுக்கும் இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்த சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா வாழும் தமிழ் கணினியாளர்களுக்கும் இடையிலானதாகவே இருந்தது. இந்த போட்டியும், சச்சரவும் தமிழ்க் கணிமைக்கு பெருமளவு பின்னடைவைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், யூனிகோடு தகுதரத்தில் தமிழின் இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத இந்தி எழுத்துக்களின் அடிப்படையிலான ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது. அந்தச் சுமையை தமிழ் இன்று வரை சுமந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அதை சுமக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அது என்ன சுமை?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் என்று நமக்கெல்லாம் தெரியும். மற்ற குறியூடுகளுக்கும் சேர்த்து 256 இடங்கள் வாங்கியிருந்தால் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் பொருத்திக்கொண்டிருக்கலாம். முதலாவதாக தமிழ் மொழிக்கு 128 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டது. அதனால் உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 இடம் ஒதுக்கினார்கள். உயிர்மெய் எழுத்துக்களை கூட்டெழுத்துக்களாக எழுத்துருக்கள் கையாள வேண்டும். இரண்டாவதாக, இப்படிப்பட்ட கூடுதல் சுமையிலும் ஒதுக்கீட்டை இந்தி எழுத்துக்களின் அடிப்படையில் அமைத்திருந்தார்கள். இந்தியில் க உச்சரிப்புக்கு 4 எழுத்துக்கள் இருந்தன. தமிழ் க வை இந்தி க இருக்கும் இடத்தில் வைத்து விட்டு அடுத்த 3 இடங்களை காலியாக விட்டு வைத்தார்கள். (http://unicode.org/charts/PDF/U0B80.pdf)

இப்படி தமிழுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு ஒதுக்கீட்டை செய்திருந்தார்கள். இதை சரி செய்வது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லைதான். இதற்குள் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள், ஆயிரக்கணக்கான எழுத்துருக்கள், லட்சக்கணக்கான இணைய தளங்கள், கோடிக்கணக்கான ஆவணங்கள் ஒருங்குறி முறையில் உருவாகியிருக்கின்றன. இவற்றை எல்லாம் மாற்றும் முயற்சி, நாள் போகப் போக கடினமாகிக் கொண்டேதான் போகும்.
இதைப்பற்றிய விவாதங்களின் இரண்டு பக்கங்கள்
http://www.kanithamizh.in/unicode-il-tamil.htm (யூனிகோடு ஒதுக்கீட்டை குறை சொல்லி)
http://ezilnila.com/archives/769 (யூனிகோடு ஒதுக்கீட்டை ஆதரித்து)

யூனிகோடுக்கு அடுத்த தகுதரம் உருவாக்கப்படும் போது உறுதியாக தமிழுக்கான தனித்தன்மையான ஒதுக்கீடு கோரப்படுவது ஒரு வழி.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வேலூரில் தகவல் தொழில் நுட்ப சாத்தியங்கள் கருத்தரங்கின் பரிந்துரைகள்.

  1. வேலூரில் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்குத் தேவையான மூன்று அடிப்படை காரணிகள் - மனித வளம், கட்டமைப்பு வசதிகள், செயல்திட்டம்

    a.  தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரியும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை திரட்டித் தொகுக்க வேண்டும்.
    b.  மாவட்டத்தில் செயல்படும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் படிக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை தொகுத்து பராமரிக்க வேண்டும்.
  2. வேலூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத் துறைக்கான 20 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் ஒன்றை தயாரித்து செயல்படுத்த வேண்டும்.

    a. பெருநகரங்களில் இருக்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் வேலூருக்கு வர வைக்கலாம்.
    b. நகரத்தில் ஒரு தகவல் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஏற்படுத்த வேண்டும்.
  3. தகவல் தொழில் நுட்ப மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். விஐடி இந்த அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

    a. வேலூரில் அலுவலகம் ஏற்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் ஆரம்ப அலுவலக வசதி, வழிகாட்டல் சேவைகள் கிடைக்க வேண்டும்.
    b. மாவட்டத்தில் செயல்படும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு பொது அமைப்பு இருக்க வேண்டும்.
    c. அரசாங்கத் திட்டங்களை தொழில் முனைவோருக்குக் கொண்டு சேர்க்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.
  4. வேலூர் மாவட்டத்தின் சிறப்புப் பண்புகளை அடையாளம் கண்டு அதன் மூலம் நிறுவனங்களை ஈர்க்கலாம்.

    a. வேலூர் மாவட்டத்தில் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தகவல் தொழில் நுட்பச் சேவைகள் வழங்கும் வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும். தோல் துறை நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.
    b. சிறிய நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 500 சிறு நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல் திட்டம் வகுக்கலாம்.
    c. சிறு நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த வேண்டும்.
  5. அரசு கொள்கைகள் ஆதரவும் ஊக்குவிப்பும் அளிப்பவையாக இருக்க வேண்டும்.

    a. சிறு நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போடுவதற்க அரசு அங்கீகாரம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
    b. மாவட்ட தொழில் மையத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி வசதிகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும்.
    c. வேலூர் நகராட்சி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க சேவை மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் (விஐடியின் நிறுவன உருவாக்கச் சேவையைப் போன்று)
ஆங்கிலத்தில்

Recommendations of panel on Vellore as IT destination. 

1. Three necessary factors to enable IT sector in Vellore
a. Human Resources
b. Physical Infrastructure
c. Action plan

Collect and compile database of professionals from Vellore district working in different parts of the world. 
Prepare a database of Engineering colleges in the district and maintain details of students studying and passing out each year.

2. Prepare a 20 years vision document for IT sector in the district. 
a. Encourage Tier II units of companies operating in larger cities to locate in Vellore
b. Establish an IT SEZ in the city.

3. Set up a IT facilities center to help companies looking to establish base in Vellore. VIT can play a major role in this.
a. Soft landing option for companies by providing office infrastructure and initial guidance for setting up base here. 
b. A forum for IT companies in the district to meet and discuss development issues
c. Co-ordinating with government departments to make funds available to entrepreneurs. 

4. Identify unique selling points of Vellore district to promote as an IT destination. 
a. Information Technology needs of industry in the district should be identified and served. Leather sector, Self Help Groups, Educational Institutions can be the target markets
b. Focus on encouraging and facilitating small companies. Set a target of setting up 500 small companies in the city in 5 years time. 
c. Set up the IT SEZ targetting small and medium companies. 

5. A supportive and encouraging government policy is to be prepared and implemented. 
a. Provide recognition to small companies to enable them compete globally.
b. Create an IT division in the District Industrial Center to provide guidance and support with available schemes
c. Encourage new initiatives in the sector through industry forums. 
d. Establish a technology business incubation center by the municipal government (similar to VIT technology incubator)

வேலூர் கருத்தரங்கு பேச்சுகள்

இந்து நாளிதழில் செய்தி

வேலூரில் தகவல் தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் என்ற கருத்தரங்கு கோட்டை மைதானத்தில் நடந்து வரும் நூலாறு 2010 புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறப்பாகவும் செறிவாகவும் நடந்தது.

சென்னை கேர்வாயன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு ஏ ஜே பாலசுப்ரமணியன் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு போன்று, இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு போன்று தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிற நகரங்களைப் பற்றி விளக்கினார்.

மனிதத் திட்டமிடலில் ஒரு பூங்காவை உருவாக்கலாம், ஆனால் காடு ஒன்று இயற்கையாகத்தான் உருவாக முடியும்.

  • பெங்களூருவில் 1950-60களில் பாதுகாப்புத் துறை சார்ந்த பல ஆராய்ச்சி நிறுவனங்கள் அப்போதைய பிரதம மந்திரி நேருவினால் உருவாக்கப்பட்டன. 
  • 1980களில் டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம் பெங்களூருவில் நிறுவப்பட்டது. 
இப்படி உருவான ஒரு தொழில் நுட்பச் சூழலில் பின்னர் ஒவ்வொரு நிறுவனங்களாகச் சேர்ந்து கொண்டார்கள். இவற்றுடன் பெங்களூருவின் கட்டமைப்புகளும் காலநிலைகளும் இளைஞர்களுக்கு விருப்பமாக அமைந்திருந்தன.

தகவல் தொழில் நுட்பத் துறைக்கான சூழல் உருவாக மூன்று காரணிகள் தேவை:

  1. மனிதவளம்
  2. கட்டமைப்பு
  3. வாழ்க்கைத் தரம்

பெங்களூருவில் ஆரம்பித்த இந்த வளர்ச்சியினால் அந்த நகரத்தின் வசதிகள் சிக்கலாகி வந்தன. வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் போவதற்கு இரண்டு மூன்று மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசலில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த நிறுவனங்கள் பெங்களூருக்கு அருகில் இருந்த சென்னையை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

இப்போது சென்னையும் அத்தகைய நெருக்கடிகளை சந்திக்கிறது. வேலூரைப் பொறுத்த வரை வாழ்க்கைத் தரம் வாழ்க்கைச் செலவு இரண்டுமே ஆதாயமாக இருக்கின்றன. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல ஊர்களில் சென்று பணி புரிகிறார்கள்.

  • இது போன்று வேலூர் பகுதியிலிருந்து தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி புரிபவர்களின் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும்.
  • இந்தப் பகுதியில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தரவுத்தளம் தயாரிக்கப்பட வேண்டும்.
  • வேலூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வரும் போது வெளியூரிலிருந்து பல நிபுணர்கள் வல்லுனர்கள் வர வேண்டியிருக்கும். அவர்களை ஏற்றுக் கொள்ளும், அவர்களுக்கு சௌகரியமான வாழ்க்கைச்சூழல் இருக்க வேண்டும்.
  • குழந்தைகள் படிப்பதற்கு நல்ல கல்லூரிகள், பள்ளிகள் இருக்க வேண்டும்.
  • சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களின் இரண்டாம் நிலை அலுவலகங்கள் இங்கு ஏற்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
  • கருத்துக்களும் பேச்சுக்களும் செயல்திட்டமாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். 
  • 15 முதல் 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கில் திட்டம் வகுத்து தொலைநோக்குடன் செயல்பட்டால் சாத்தியமாகும்.

சிறிய அளவில் செயல்பட்டாலும்உலகத் தரத்தில் செயல்பட வேண்டும். உள்ளூர் வல்லமைகளைப் பயன்படுத்தி சிறப்படைய வேண்டும்.

வேலூர் விஐடி தொழில்நுட்ப நிறுவன உருவாக்க மையத்தின் பொது மேலாளர் திரு பாலச்சந்திரன் பேசும் போது கோயம்புத்தூரின் வளர்ச்சியைப் பற்றி விளக்கினார். லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் ஆரம்பித்த பிறகு அதைச் சார்ந்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள்  உருவாயின. அதிலிருந்து ஒரு தொழில் முனைவு கலாச்சாரம் ஏற்பட்டது. இது போன்று எந்த ஒரு தொழில் வளர்ச்சிக்கும் முனைவுதான் அடிப்படை.

ஏற்கனவே பிற நகரங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு வேலூரில் செலவு குறைவு ஆதாயம் இருக்கிறது.

சென்னை, பெங்களூருவில் இயங்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் இழப்பு 12% முதல் 15% வரையாக இருக்கிறது. ஹனிவெல் நிறுவனம் சோதனை முயற்சியாக மதுரையில் 500 பொறியியல் பட்டதாரிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்தில், ஊழியர் இழப்பு வீதம் 5%த்தை விடக் குறைவாக இருக்கிறதாம்.
இது போன்று வேலூரிலும் சிறு நகர வாழ்க்கையில் நல்ல சம்பளமும் குடும்பத்துடன் வசிக்கும் வாய்ப்பும் இருந்தால் ஊழியர்கள் நிறைவுடனும் ஊக்கத்துடனும் பணி புரிவார்கள்.

பெரிய நிறுவனம் ஒன்று வேலூருக்கு வரும் போது அவர்களுக்கு soft landing என்ற குறைந்த செலவில் அலுவலகம் ஏற்படுத்தும் வசதி இருப்பது பெரிய ஆதாயமாக இருக்கும்.

விஐடியின் தொழில்நுட்ப உருவாக்க மையத்தை அப்படி தொடர்பு கொண்டு கிரான்ஸ்கி மோல்டிங் அண்ட் ஸ்டாம்பிங் என்ற ஜெர்மன் நிறுவனம், விஐடி மையத்தில் தனது பணிகளை செய்ய ஆரம்பித்து அப்போது பள்ளிகொண்டா அருகில் தனது தொழிற்சாலையை ஏற்படுத்தி செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்களைப் போலவே டாக்ஸ் பிரெஸ்ஸோடெக்னிக் என்ற நிறுவனமும் விஐடி மையத்தில் செயல்பாடுகளை ஆரம்பித்து இப்போது தொழிற்சாலைக்கான நிலம் வாங்கி தயார் நிலையில் இருக்கிறார்கள். வீலன்ட் என்ற மூன்றாவது ஜெர்மன் நிறுவனம் தொழில் சாதக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  • இது போன்று நிறுவனங்கள் soft landing ஆவதற்கான கட்டமைப்புகள் அரசாங்கத்தால் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • விஐடி மையம் அரசாங்கத் திட்டங்களின் மூலம் தொழில் முனைவோருக்குப் பண உதவி செய்து வருகிறது. இது வரை ஒரு கோடியே 20 லட்சம் வரை முதலீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரியும் ஒவ்வொரு ஊழியரும் சுற்றுப் புறப் பகுதிகளில் 4 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறு நிறுவனங்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கலாம். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தொழில் ஆதாயங்களைப் பயன்படுத்தி தொழில் வளத்தை உருவாக்க வேண்டும். ரிஸ்க் எடுக்கும் மனோபாவத்தை ஊக்குவிக்க வேண்டும். சமூகத்தில் அதற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

அரசுத் திட்டங்களையும் பண உதவிகளையும் பயன்படுத்த விஐடி உதவி புரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புது நிறுவன உதவி மையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. மொத்தம் 1000 மையங்கள் என்று இலக்கு ஏற்படுத்தப்பட்டு அது வரை சிறு எண்ணிக்கையிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1 $ முதலீடு அரசாங்கத்துக்கு 4$ வருமானம் தருகிறது. வேலூர் நகராட்சி கூட ஒரு இன்குபேட்டர் ஏற்படுத்தலாம்.


மைக்ரோசாப்ட் இந்திய ஆராய்ச்சி மையத்தில் பன்மொழி அமைப்பு ஆராய்ச்சியின் தலைவராக பணிபுரியும் முனைவர் குமரன் மனிதவளம், கட்டமைப்பு, செயல்திறன் என்ற மூன்றும் அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றைத் தாண்டி நிறுவனங்களை வர வைக்க துணிந்து முயற்சி எடுக்கும் (ரிஸ்க் எடுக்கும்) மனோபாவம் உருவாக வேண்டும்.

கலிஃபோர்னியாவில் இருந்த அதே சூழல் போஸ்டனில் இருந்தாலும், கலிஃபோர்னியர்களின் ரிஸ்க் எடுக்கும் மனப்போக்குதான் சிலிக்கான் பள்ளத்தாக்கின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்தது. அதே போன்று வேலூருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை ஈர்ப்பதற்கு ஒரு சிறப்பு கவர்ச்சி ஒன்று அடையாளம் காணப்பட வேண்டும்.

15-20 ஆண்டுகளுக்கான நீண்ட காலத் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் செயல்பட்டால் வெற்றி அடையலாம்.

நாராயண்

தொடக்க நிலை நிறுவனங்கள் வெற்றி பெற தொழில் முனைவர்களின், சமூகத்தின் மனப்பாங்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. படிப்பை முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனத்தில் உயர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்காமல் சிறிய நிறுவனத்தில் பணி புரியும் மனப்போக்கு வேண்டும்.

சென்னையில் வாகன உற்பத்தித் துறை வளர்ந்ததற்கான முக்கிய ஒரு காரணி பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான சிறு நிறுவனங்கள் உருவாகி செயல்படுவதுதான். அதைப் போல வேலூரிலும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சிறு நிறுவனங்கள் வளர்வது தகுந்த சூழல் உருவாக உதவியாக இருக்கும்.

தொழில் முனைவர்களைப் பொறுத்த வரை, இணையம் மூலமாக cloud computing என்ற கோட்பாட்டின் மூலமாக சேவை வழங்குவதற்கு இருப்பிடம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய ஊர்களிலிருந்து கூட அவற்றை உருவாக்கி உலகமெங்கும் விற்பனை செய்யலாம்.

விஐடி வேலூரில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கிறது. செலவு குறைவாக இருப்பது இன்னொரு காரணம். இந்த ஊரில் இருக்கும் தேவைகளுக்கு சேவைகள் உருவாக்கி வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயல்படலாம்.

செந்தில்நாதன்

1. சிங்கப்பூரின் லீகுவான் யூ போன்று உறுதியான நேர்மையான தலைமையும் தனிநபர் முயற்சிகளும் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கின்றன. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும், ஈடுபாடும், முனைவும் இருந்தால்தான் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியும்.

2. பெங்களூரு சென்னை நகரங்களின் நிழலில் அந்நகரங்களுக்கு மனித வளத்தை அளிக்கும் பகுதியாக விளங்குகிறது வேலூர் மாவட்டம்.

3. இன்னொரு பெங்களூரு சென்னையாக உருவாகாமல், வேலூரின் தனிச் சிறப்புகளைப் பயன்படுத்தி தகவல் தொழில் நுட்பச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

4. 500 சிறு நிறுவனங்களை வேலூருக்குக் கொண்டு வர வேண்டும் என்று இலக்கு அமைத்துச் செயல்படலாம்.

நாச்சியப்பா
ஆம்பூர் வர்த்தக மையத்தைப் போன்று ஒரு தகவல் தொழில் நுட்ப மையம் வேலூரில் உருவாக வேண்டும். இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வும், நிறுவனங்களுக்கு வசதியும் கிடைக்கும். தொழில் முனைவர்கள் சந்தித்து உரையாட ஒரு பொது இடமும், தகவல் பரிமாறும் வசதியும் கிடைக்கும்.

தோல் துறை, கல்வி நிறுவனங்கள், வியாபாரிகள் இவர்களுக்குத் தேவையான மென்பொருள் சேவை வாய்ப்புகள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன.

பாலாஜி கம்பியூட்டர்சைச் சேர்ந்த திரு குமரன் 

அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தவும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும்படியான அரசு அமைப்புகள் ஏற்படுத்தவும் முன்முயற்சி தேவை என்று கருத்து தெரிவித்தார்.

வேலூரில் மனிதவளம், தொழில் முனைவு இருக்கிறது. அரசு அங்கீகாரமும், உதவிகளும், வழிகாட்டலும் தேவையாக இருக்கிறது.


விஐடி இது போன்று மென்பொருள் தகவல் மையம் ஒன்றை உருவாக்க முன்வரலாம். ஏற்கனவே 50-60 பிபிஓ நிறுவனங்கள் இந்த மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.