வெள்ளி, 6 ஜூலை, 2012

பில் கேட்ஸின் தான தருமங்கள் - ஒரு விமர்சன பார்வை


"பில் கேட்ஸ் கணினி துறையில் தொழில் ரீதியாக சில கஷ்டங்களை கொடுத்தாலும் அவரது தான தருமங்களால் அவை அனைத்துக்கும் ஈடு கட்டி விடுகிறார் என்பதுதான் ஸ்லாஷ்டாட்டில் பொதுவான கருத்தாக இருக்கிறது. அவரது தரும காரியங்கள் சுயநலமற்றவை என்று சொல்ல முடியாது. வழக்கமாக கேட்ஸூக்கு ஆதரவான எட்வீக், கேட்ஸின் அறக்கட்டளையின் செயல்பாடுகளை பற்றியும் பலன் பெறுபவர்கள் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியடையாதது பற்றியும் ஒரு கட்டுரைத் தொடரை வெளியிடுகிறது"

ஸ்லாஷ்டாட் விவாதம்

புதன், 4 ஜூலை, 2012

பில் கேட்ஸ் : பாரம்பரிய மேசைக் கணினி மாறி விட்டது


சார்லி ரோஸூடனான நேர்முகத்தில் பில் கேட்ஸ் விண்டோஸ்-8 இடைமுகத்தை மெட்ரோ மயமாக்குவதை ஆதரித்து பேசினார். குளிகைக் கணினியில் பயன்படுவதை இலக்காக வைத்திருப்பதை அவர் நியாயப்படுத்தினார். (வீடியோ சுட்டி - குளிகை கணினி பற்றிய பேச்சு 28வது நிமிடத்தில் ஆரம்பமாகிறது). பாரம்பரிய மேசைக்கணினி பயனர்கள் என்ன சொல்வார்கள் என்று கேட்ட போது, உலகமே குளிகை கணினிகளுக்கு மாறிக் கொண்டிருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார். ஒரு புதிய கணினியில் இரண்டு பயன்பாட்டு அனுபவங்களும் ஒருங்கிணைந்திருக்க வேண்டும்.

போட்டியாளர்களுக்கு விண்டோஸ் 8ஐ விலைக்கு விற்கும் அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கருவியை உற்பத்தி செய்வதையும் அவர் நியாயப்படுத்தினார். பயனர்கள் மைக்ரோசாப்டின் கருவி அல்லது மற்ற நிறுவனங்களின் கருவியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இது மேசைக்கணினி இறந்து கொண்டிருப்பதன் அறிகுறியா? கேட்ஸ் பாரம்பரிய மேசைக்கணினியின் எதிர்காலம் பற்றிய கேள்விகளை தவிர்த்தார். கடந்த காலங்களில் அவர் முன் வைத்த நிலைப்பாட்டிலிருந்து இது பெரிய விலகல் ஆகும். 


ஸ்லாஷ்டாட் விவாதம்

செவ்வாய், 3 ஜூலை, 2012

வேலைக்கு தகுதியுள்ளவனாக தொடர என்ன செய்ய வேண்டும்?


ஸ்லாஷ்டாட்டை கேளுங்கள்:வேலைக்கு தகுதியுள்ளவனாக தொடர நான் என்ன செய்ய வேண்டும்?

"ஹாய், எனக்கு 40 வயதாகிறது. மிகப்பெரிய முதலீட்டு வங்கிகளில் ஒன்றில் நான் மூத்த மென்பொருள் உருவாக்குனராக வேலை பார்க்கிறேன். இதுவரை முழு நேர வேலைகள்தான் செய்து வந்திருக்கிறேன். கடந்த 5-6 ஆண்டுகளாக அலுவலக அரசியல், அவுட் சோர்சிங், பொருளாதாரச் சூழல் இவற்றின் காரணமாக நிலைமை மிகவும் மோசமாகி இருக்கிறது.

நிதித் துறை தத்தளித்துக் கொண்டிருக்கிறது, இன்னொரு சுற்று வேலை நீக்கங்களை நாம் சீக்கிரமே எதிர் கொள்ளப் போகிறோம். என் குடும்பமோ வளர்ந்து கொண்டிருக்கிறது, என் வாழ்க்கைத் துணை வேலைக்குப் போகவில்லை, எனக்கு இன்னமும் சொந்த வீடு இல்லை.

எனது பணி பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது. 65 வயதானால்தான் மெடிக்கேர் கிடைக்கும் என்பதை வைத்துப் பார்க்கும் போது குறைந்தது இன்னும் 25 ஆண்டுகள் நான் வேலை செய்தாக வேண்டும். வரும் காலங்களில் வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கிறார் இல்கார்.

கமாண்ட் லைன் இடைமுகத்தின் காலம் முடிந்து விட்டதா?


"கமாண்ட் லைன் இடைமுகத்திற்கு சில பயன்பாடுகள் இருக்கின்றன என்பதில் கேள்வியில்லை. ஆனால், சராசரி பயனர்களுக்கான எந்த ஒரு கருவியிலும் கமாண்ட் லைன் மூலமாக எதையும் செய்யத் தேவை இருக்கக் கூடாது என்கிறார் மொபைல் ரேப்டர் பதிவர் ராபர்டோ லிம். ஒரு விருப்பத் தேர்வாக வைத்திருக்கலாம் அல்லது முற்றாக நீக்கி விடலாம். வைத்திருந்தால், அது தொழில்நுட்ப ஊழியர்களின் பராமரிப்பு பணிக்காக மட்டுமே பயன்படுவதாக இருக்க வேண்டும்"


மேலும் விவாதங்களுக்கு ஸ்லாஷ்டாட்.

வியாழன், 28 ஜூன், 2012

சிலிக்கன் பள்ளத்தாக்கும் சுரண்டலைஆரம்பித்து விட்டது


"பில் டேவிடோ சிலிக்கன் பள்ளத்தாக்கின் பழம் பெரும் பார்வையாளர். சிலிக்கன் பள்ளத்தாக்கு எப்படி மாறி வந்திருக்கிறது என்பதைப் பற்றி எழுதும் போது, டேவிடோ பெருமைப்படும்படியாக எதுவும் இல்லை என்கிறார். பேஸ்புக், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களை கடும் சொற்களால் தாக்குகிறார். 


'ஜெயித்தவனுக்குத்தான் எல்லாமே என்ற சூழலில் மேலும் மேலும் பணத்தைத் துரத்தும் நிறுவன உரிமையாளர்கள், ஏற்றுக் கொள்ளப்படும் நடத்தையின் விளிம்பில் நடனமாடுகிறார்கள். அவர்கள் விளிம்பிற்கு கொண்டு போகவில்லை என்றால் போட்டியாளர் அதைச் செய்து ஆதிக்கம் செலுத்த ஆரம்பிப்பார். ஏகபோகம் போட்டியாளர் கையில் போய் விடும். இப்படிக் கிடைப்பதுதான் பயனரை சுரண்டி கிடைக்கும் மதிப்பு"



இப்போது ஏன் இந்த மாற்றம் என்று ஆராயும் போது 'முன்பெல்லாம் பெரிய, கறாரான பெரு நிறுவனங்களுடன் உறவாடும் போது சப்ளையர்கள் நேர்மையாக இருந்தார்கள். சிலிக்கன் பள்ளத்தாக்கின் ஆரம்ப கட்டங்களில் பெரும்பான்மையான நிறுவனங்கள் பெருநிறுவனங்களுக்கு அல்லது அரசாங்கத்துக்கு விற்றார்கள். வாங்கும் மேலாளர்கள் அதிகாரமும், மறந்து விடாத நினைவுத் திறனும் கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரின் நம்பிக்கையை பொய்ப்பித்தால், கடுமையாக தண்டிக்கப்பட்டு வியாபாரத்திலிருந்தே வெட்டி விடப்படுவார்கள். அதுதான் அவர்களை நேர்மையாக நடக்க வைத்தது' என்கிறார் டேவிடோ.

இப்போது நிலைமை மாறி விட்டது. தனிநபர் நுகர்வோரை சுரண்டுவதால் எதிர்மறை பின்விளைவுகளை விட ஆதாயம் அதிகம் கிடைக்கிறது.


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

'உங்கள் மின்னஞ்சல் @Facebook முகவரிதான்'


உங்கள் மின்னஞ்சல் @Facebook முகவரிதான் என்கிறது பேஸ்புக்

"பேஸ்புக்  வெளியில் சொல்லாமல் பயனர்களின் கொடாநிலை மின்னஞ்சல் முகவரியை @facebook.com என்ற முகவரியாக மாற்றி வருகிறது. பயனர்களை பாதுகாக்கவும், ஒரே மாதிரி தன்மையை உருவாக்கவும்தான் இந்த நடவடிக்கை என்கிறது பேஸ்புக். ஆனால் தனது மின்னஞ்சல் சேவையை பயனர்கள் மீது சுமத்துவதாக வலைப்பதிவர்களும் செய்தி நிறுவனங்களும் பேஸ்புக்கை தாக்குகின்றன. 

இது பயனர்களின் சொந்த தகவல் பரிமாற்றத்தில் மேன்-இன்-த-மிடில் (நடுவில் இருக்கும் ஆசாமி) தாக்குதலைப் போன்றது என்று கூடச் சொல்கிறார்கள். 2010ல் அறிவிக்கப்பட்ட அதன் மின்னஞ்சல் சேவையை புகுத்துவதற்கான முரட்டு நடவடிக்கையாக பல கட்டுரைகள் இதை பார்க்கின்றன. அந்த நேரத்தில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், பேஸ்புக் சாட் என பல வழிகளில் நடக்கும் உரையாடல்களை ஒன்று சேர்ப்பதுதான் தனது குறிக்கோள் என்று பேஸ்புக் சொல்லியிருந்தது. 

இந்த எதிர்வினைகள் பேஸ்புக் எதிர்பாராதவையான இருக்கின்றன. 'இதை அறிமுகப்படுத்தும் போது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக பேஸ்புக் மின்னஞ்சல் முகவரியை கொடாநிலையாக மாற்றினோம். பேஸ்புக் முகவரியை மட்டும் பயன்படுத்தும்படி பயனர்களை கட்டாயப்படுத்தும்படியாக நாங்கள் இதை செய்யவில்லை. எது எளிதாக இருக்கிறதோ, அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும்' என்கிறார் பேஸ்புக்கின் தகவல் தொடர்பு மேலாளர் மெரிடித் சின்.

(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன).

புதன், 27 ஜூன், 2012

அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு


ஆப்பிள் விற்பனை முனையம் ஈரானைச் சேர்ந்த அமெரிக்க சிறுமிக்கு ஐ-பேட் விற்க மறுப்பு.

"அமெரிக்க வர்த்தகத் தடைகளை மீறுவதாக தோன்றுவதால் அவளுக்கு ஐ-பேட் விற்க முடியாது என்று ஆப்பிள் விற்பனை முனையத்தின் விற்பனையாளர் ஒரு இரானிய-அமெரிக்க சிறுமியிடம் சொன்னார். உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தின் காமிரா குழுவினரை அழைத்துக் கொண்டு அவள் திரும்பி வந்த போது மீண்டும் அவளுக்கு விற்பனை மறுக்கப்பட்டது.

அவள் பார்சியில் பேசிக் கொண்டிருப்பதை ஆப்பிள் ஊழியர் கேட்டிருக்கிறார். அவரும் ஈரானிலிருந்து வந்தவராதலால் அந்த மொழியை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் ஐ-பேட் விற்பதற்கு மறுத்திருக்கிறார்."

செவ்வாய், 26 ஜூன், 2012

மைக்ரோசாப்ட் சர்பேஸ் - கணினி நிறுவனங்கள் அதிர்ச்சி


"மைக்ரோசாப்டின் சர்பேஸ் கணினி ஐபேடின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கான முயற்சியும் சொந்தமாக வடிவமைக்கும்   முயற்சியும் மட்டுமல்ல. 
பல ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் கூட்டாளிகளாக இருந்து மேசைக் கணினி ஒரு விலை உயர்ந்த பொருள் என்ற நினைப்பை தகர்த்த கணினி நிறுவனங்களுக்கு அது ஒரு மிரட்டலாக வெளியாகியிருக்கிறது. இந்த பகைமையின் வேர்கள் ஆழமாக இருக்கின்றன. மைக்ரோசாப்டு தனது கூட்டாளிகளுக்கு சர்பேஸ் பற்றிய விபரங்களை அது வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் தெரிவித்தது. அப்போதும் குறைந்த பட்ச விபரங்களைத்தான் தெரிவித்தது. பெரிய நிறுவனங்களுக்கு மட்டும்தான் நேரடி தொலைபேசி அழைப்பு வந்தது. 
உலக அளவில் 4வது 5வது கணினி நிறுவனங்களான ஆசுஸ், ஏசர் இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு சர்பேஸ் போல ஒன்று வருவதைப் பற்றிய தகவலே இல்லை என்கிறார்கள். பல ஆண்டுகளாக ரெட்மாண்டுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டிருந்த இந்த கணினி நிறுவனங்களுக்கு இது மிகவும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. "

(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

சனி, 23 ஜூன், 2012

கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் இணையதளங்களின் மீதான இந்திய தடை நீங்குகிறது


பைரட்பே உள்ளிட்ட பல பிரபல இணையவழி   கோப்பு பகிர்ந்து கொள்ளும் சேவைகள்  இந்தியாவில் சென்ற மாதம் தடை செய்யப்பட்டன.  இப்போது  சென்னை உயர்நீதி மன்றம் தனது முந்தைய தீர்ப்பை மாற்றியிருக்கிறது


"முந்தைய நீதிமன்ற உத்தரவு, பதிப்புரிமை வைத்திருப்பவர் குறிப்பிட்ட இணைய தளம் அல்லது இணைய சேவை நிறுவனத்தை மட்டும் குறிப்பிடாமல்,  பரவலான தடையை கோரும் படி அனுமதித்தது. பயனர்களும், 'முகமிலி' குழுக்களும் விரும்பா விட்டாலும், நீதி மன்ற ஆணையை நடைமுறைப் படுத்துவதைத் தவிர இணைய சேவை நிறுவனங்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது." 


இப்போதைய ஆணையின்படி, ஒரு கோப்பு பகிர்ந்து கொள்ளப்படுவதை தடுக்க குறிப்பிட்ட சுட்டியை  மட்டும் தடுத்தால் போதுமானது. "இணைய சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு பதிவு செய்த மேல் முறையீட்டை தொடர்ந்து இந்த புதிய ஆணை வழங்கப்பட்டது."


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக விவாதங்கள்  நடக்கின்றன). 

வெள்ளி, 22 ஜூன், 2012

என்வீடியாவும் லினக்சும்


லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பராமரிக்கும் லினஸ் தோர்வால்ட்ஸ் லினக்ஸில் அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் என்வீடியாவின் பங்களிப்பை குறை கூறி தாக்கினார்

"லினக்ஸ் இயங்கு தளத்தில் அவரது பங்களிப்புக்காக வழங்கப்பட்ட ஆயிரமாண்டு பரிசை பெற்றுக் கொள்வதற்காக பின்லாந்து போயிருந்த லினஸ் தோர்வால்ட்ஸூடன் ஆல்டோ பல்கலைக் கழகம் ஒரு உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

கேள்வி நேரத்தின் போது ஒருவர் லினக்சில் 'என்வீடியா ஏன் சரியாக வேலை செய்வதில்லை' என்று கேட்டார். 'லினக்ஸ் உருவாக்கத்தில் பங்குபெறும் நிறுவனங்களில் மிக மோசமானவற்றில் ஒன்று என்வீடியா' என்று லினஸ் கருத்து சொன்னார். ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு (அவற்றின் உள்ளே இருப்பது லினக்ஸ்தான்) என்வீடியா பெரும் எண்ணிக்கையிலான சிப்புகளை வழங்குவது நிலவரத்தை இன்னும் மோசமாக்குகிறது. 


லினக்சில் என்வீடியா இயக்கிகளைப் பற்றி உங்கள் அனுபவம் என்ன?"


இப்படி ஒரு செய்தி ஜூன் 17ம் தேதி ஸ்லாஷ்டாட்டில் விவாதிக்கப்பட்டது


ஜூன் 20ம் தேதி என்வீடியா நிறுவனம் லினஸ் டோர்வால்ட்சுக்கு பதில் சொல்கிறது. 

"என்வீடியாவின் மக்கள் தொடர்பு பிரிவு லினஸ் டோர்வால்ட்சின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தான் சேர்ந்து பணியாற்றிய நிறுவனங்களிலேயே மோசமானது என்றும், லினக்சில் ஆப்டிமசை பயன்படுத்த உதவ மறுப்பதற்காகவும், மற்ற விஷயங்களுக்காகவும் லினஸ் என்வீடியாவை  தாக்கியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் அறிக்கை சுருக்கமாக, அவர்களது தனிவுரிமை இயக்கியை லினக்ஸ் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதாகவும், அந்த இயக்கி பல்வேறு இயங்குதளங்களுக்கும் ஒரே மாதிரியானது என்பதால்,  உடனுக்குடன் முழுமையான ஓப்பன் ஜிஎல் செயல்படுத்தலுடன் லினக்ஸில் ஆதரவு அளிப்பதை அது உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளது. டேக்ராவுக்கு ஏஆர்ம் லினக்சில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், லினக்சில் பல வகையான கணினிகளில் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் சொல்கிறார்கள். லினக்சில் ஆப்டிமஸ் பயன்பாட்டுக்கு இன்னும் சிறப்பான உதவி தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காததோடு, நோவோ குழுவினருக்கு தொழில் நுட்ப உதவி வழங்குவதையும் குறிப்பிடாவிட்டாலும், 'எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பலவகையான இயங்குதளங்களிலும் ஒரே மாதிரியான ஜிபியு அனுபவத்தை வழங்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது' என்று நமக்கு உறுதி அளிக்கிறது என்வீடியா. 


இது தொடர்பான விவாதம்.

(இந்தச் செய்திகள் ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது).

ஆரக்கிளின் காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் $0 கொடுக்க வேண்டும்


"ஆரக்கிளின் காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் $0 கொடுக்க வேண்டும்  என்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பு அளித்தது. வழக்கு செலவுகளை ஆரக்கிளிடமிருந்து வாங்குவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய (போலியான வழக்குகளில் செய்வதைப் போல) கூகுளுக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 


இருந்தாலும், கூகுளுக்கு 'இனி எல்லாம் சுகமே' என்று ஆகி விடவில்லை, இந்தத் தீர்ப்பை மேல் முறையீட்டுக்கு எடுத்து செல்ல ஆரக்கிள் திட்டமிட்டுள்ளது. 

(இந்தச் செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன)

நல்ல ஊழியர்களுக்கு ஏன் மோசமான வேலைகள் கிடைக்கின்றன (அல்லது வேலையே கிடைப்பதில்லை)


"நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்கள் ஏன் கிடைப்பதில்லை" என்ற கட்டுரை வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கடந்த அக்டோபரில் (2011) வெளியானது. மூன்று தலைமுறைகளில் பார்த்திராத பொருளாதார நெருக்கடியின் காரணமாக கோடிக்கணக்கான படித்த, அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வேலை இல்லாமல் இருக்கும் சூழலிலும் நிறுவனங்கள் திறமை படைத்த ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சொல்கின்றன. 

பொருத்தமான கல்வியை வழங்காத கல்வி நிலையங்களையும், புலம் பெயரும் ஊழியர்களை போதுமான அளவு அனுமதிக்காத அரசாங்கத்தையும் பழிப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல சம்பளத்துடனான நல்ல வேலைகளில் சேர மறுக்கும் ஊழியர்களையும் குறை சொல்கின்றன நிறுவனங்கள்.

அந்தக் கட்டுரையை எழுதியவர் வேலை வாய்ப்பு மற்றும் மேலாண்மை துறைகளில் நிபுணரான பீட்டர் கேப்பல்லி. 'நிறுவனங்கள் அனைத்தும் திறமைக் குறைவு பற்றி ஒத்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அதற்கான ஆதாரங்கள்  இல்லை' என்று முடித்திருந்தார்.  


'உண்மையில் குறை சொல்லப்பட வேண்டியவை வேலை கொடுக்கும் நிறுவனங்கள்தான்' என்பது அவரது முடிவு. 

அவருடனான ஒரு நேர்முகத்தை இங்கு படிக்கலாம்.  திறமை குறைவுகள் என்று சொல்லப்படுவதைப் பற்றிய ஒரு புத்தகத்தை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன). 

செவ்வாய், 31 ஜனவரி, 2012

தமிழ் எழுத்துரு தகுதரம்

1997 வாக்கில் டிஸ்கி என்று தமிழ் எழுத்துருக்களில் இட அமைவை வெளிநாட்டுத் தமிழர்கள் உருவாக்கியிருந்தார்கள். அப்போது இருந்த 8 பிட் எழுத்து அமைப்பு முறையில் மொத்தம் 256 இடங்கள்தான். முதல் 7 பிட்டுகளுக்கான 128 இடங்கள் அஸ்கி எனப்படும் அமெரிக்க எழுத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. மற்ற மொழிகள் ஒவ்வொன்றும் அடுத்த 128 இடங்களில் தமது எழுத்துக்களை பொருத்திக் கொள்ள முடியும். தமிழ் எழுத்துக்களை அப்படி மேல் 128 இடங்களில் பொருத்தியது tscii என்ற டிஸ்கி தகுதரம்.

அதை ஏற்றுக் கொள்ளாமல் 1999 மாநாட்டில் tab, tam என்று இரண்டு தகுதரங்களை அறிவித்தார்கள். டேப் என்பது தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஒரே எழுத்துருவில் அடிக்க வேண்டி உருவானது. 128 இடங்களில் அஸ்கியும் அடுத்த 128 இடங்களில் தமிழ் எழுத்துக்களுக்கான ஒதுக்கீடும். இதற்கும் டிஸ்கிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. டேம் என்பது 256 இடங்களையும் தமிழ் எழுத்துக்களுக்காக பயன்படுத்துவது. டேம் மூலம் தமிழ் அச்சுத் துறைக்கான எழுத்துக்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பிட் அதிகரிக்கும் போது எழுத்துக்களுக்கான இடம் இரண்டு மடங்காகும்.
2 பிட் - 4 இடங்கள்
3 பிட் - 8 இடங்கள்
4 பிட் - 16 இடங்கள்
5 பிட் - 32 இடங்கள்
6 பிட் - 64 இடங்கள்
7 பிட் - 128 இடங்கள்
8 பிட் - 256 இடங்கள்

8 பிட் முறையிலான டிஸ்கி, டேப் அல்லது பிற மொழிகளுக்கான அமைப்பில் இருந்த மிகப்பெரிய சிக்கல் அவற்றை பல மொழிகளுக்கு ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பதுதான். உதாரணமாக தமிழ் எழுத்துருவில் 142வது இடம் க என்ற எழுத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அதே இடம் இந்தியில் இந்தி கவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரே எழுத்துருவைப் பயன்படுத்தி பல மொழிகளை எழுத முடியாமல் இருந்தது.

டிஸ்கி உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்த வெளிநாட்டுத் தமிழர்களின் முகாமில் நான் இருந்தேன். இந்த புதிய தகுதரங்களுக்கு முன்பாகவே நாங்கள் டிஸ்கியின் அடிப்படையில் அமைந்த எழுத்துருக்களையும், விசைப்பலகை இயக்கிகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டு கணினி அறிஞர்கள் வேண்டுமென்றே இந்த பயன்பாட்டை புறக்கணித்து விட்டார்கள் என்று நீண்ட விவாதங்கள் நடந்தன. இணையத்தில் நடந்த விவாதங்களில் இயல்பாகவே டிஸ்கிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. கடைசி வரை நான் டிஸ்கி எழுத்துக்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். டேப் எழுத்துருக்கள் தமிழ் இணையதளங்களை சிலவற்றைப் பயன்படுத்த மட்டுமே நிறுவிக் கொண்டேன்.

இந்த சச்சரவுக்கு வெளியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தீர்வு/முடிவு வந்தது. இஸ்கி என்று இந்திய மொழிகளுக்கான தகுதரம் ஒன்று இந்தி மொழியின் அடிப்படையில் எல்லா இந்திய மொழிகளுக்கும் உருவாக்கப்பட்டிருந்தது. யூனிகோட் உருவாக்கப்பட்ட போது மத்தியிலிருந்து இந்திய மொழிகளுக்கு அந்த ஒதுக்கீட்டை அனுப்பி விட்டார்கள். டேப், டிஸ்கி என்று அடித்துக் கொண்டிருந்த தமிழ்ச்சூழல் அதில் கவனம் செலுத்தவேவில்லை. யூனிகோட் தகுதரம் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகுதான் விழித்துக் கொண்டார்கள்.

யூனிகோட் என்பது 16 பிட் என்கோடிங்.
16 பிட் எழுத்துருவில்
9 பிட் - 512 இடங்கள்
10 பிட் - 1024 இடங்கள்
11 பிட் - 2048 இடங்கள்
12 பிட் - 4096 இடங்கள்
13 பிட் - 8192 இடங்கள்
14 பிட் - 16384 இடங்கள்
15 பிட் - 32768 இடங்கள்
16 பிட் - 65536 இடங்கள்

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம். முழு விபரங்களையும் இங்கு பார்த்துக் கொள்ளலாம். http://en.wikipedia.org/wiki/Unicode

இந்த இடங்கள் உலகின் எல்லா மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டன. ஒரு மொழிக்கான இடத்தில் இன்னொரு மொழிக்கான எழுத்துக்கள் தலையிடுவதில்லை. அதனால் கணினியின் ஒரே ஆவணத்தில் எல்லா மொழிகளையும் எழுதுவதற்கான சாத்தியம் ஏற்படுத்தப்பட்டது. யூனிகோடை பெரிய மென்பொருள் நிறுவனங்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டன. விண்டோஸ் எக்ஸ்பி வெளியீட்டில் தமிழுக்கான யூனிகோடு ஆதரவு முழுமையாக இருந்தது. லதா என்ற எழுத்துருவையும் மைக்ரோசாப்டு உருவாக்கியிருந்தது.

அது வரை உருவாக்கியிருந்த டிஸ்கி, டேப் எழுத்துருக்கள் சீக்கிரமே வழக்கு ஒழிந்து அல்லது குறைந்து போயின. இப்போது இணையத்தில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா தமிழ் இணைய தளங்களும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு தகுதரத்தில்தான் எழுத்துக்களை காண்பிக்கின்றன. மதுரைத் திட்டம் தளத்துக்குப் போனால், ஆரம்ப கால புத்தகங்களை டிஸ்கி எழுத்துரு வடிவத்தில் பெற்றுக் கொள்ள முடியும். சுஜாதாவின் வழிகாட்டலில் ஆரம்பித்திருந்த அம்பலம் மின் பத்திரிகையில் டேப் எழுத்துக்கள் பயன்பட்டன.

டேப், டிஸ்கி எழுத்துருக்கள் அடிப்படையிலான மோதல்கள் நெருங்கிய நண்பர்களுக்கிடையே கூட இருந்தது. அது பெரும்பாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த கணினியாளர்களுக்கும் இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்த சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா வாழும் தமிழ் கணினியாளர்களுக்கும் இடையிலானதாகவே இருந்தது. இந்த போட்டியும், சச்சரவும் தமிழ்க் கணிமைக்கு பெருமளவு பின்னடைவைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், யூனிகோடு தகுதரத்தில் தமிழின் இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத இந்தி எழுத்துக்களின் அடிப்படையிலான ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது. அந்தச் சுமையை தமிழ் இன்று வரை சுமந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அதை சுமக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அது என்ன சுமை?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் என்று நமக்கெல்லாம் தெரியும். மற்ற குறியூடுகளுக்கும் சேர்த்து 256 இடங்கள் வாங்கியிருந்தால் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் பொருத்திக்கொண்டிருக்கலாம். முதலாவதாக தமிழ் மொழிக்கு 128 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டது. அதனால் உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 இடம் ஒதுக்கினார்கள். உயிர்மெய் எழுத்துக்களை கூட்டெழுத்துக்களாக எழுத்துருக்கள் கையாள வேண்டும். இரண்டாவதாக, இப்படிப்பட்ட கூடுதல் சுமையிலும் ஒதுக்கீட்டை இந்தி எழுத்துக்களின் அடிப்படையில் அமைத்திருந்தார்கள். இந்தியில் க உச்சரிப்புக்கு 4 எழுத்துக்கள் இருந்தன. தமிழ் க வை இந்தி க இருக்கும் இடத்தில் வைத்து விட்டு அடுத்த 3 இடங்களை காலியாக விட்டு வைத்தார்கள். (http://unicode.org/charts/PDF/U0B80.pdf)

இப்படி தமிழுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு ஒதுக்கீட்டை செய்திருந்தார்கள். இதை சரி செய்வது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லைதான். இதற்குள் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள், ஆயிரக்கணக்கான எழுத்துருக்கள், லட்சக்கணக்கான இணைய தளங்கள், கோடிக்கணக்கான ஆவணங்கள் ஒருங்குறி முறையில் உருவாகியிருக்கின்றன. இவற்றை எல்லாம் மாற்றும் முயற்சி, நாள் போகப் போக கடினமாகிக் கொண்டேதான் போகும்.
இதைப்பற்றிய விவாதங்களின் இரண்டு பக்கங்கள்
http://www.kanithamizh.in/unicode-il-tamil.htm (யூனிகோடு ஒதுக்கீட்டை குறை சொல்லி)
http://ezilnila.com/archives/769 (யூனிகோடு ஒதுக்கீட்டை ஆதரித்து)

யூனிகோடுக்கு அடுத்த தகுதரம் உருவாக்கப்படும் போது உறுதியாக தமிழுக்கான தனித்தன்மையான ஒதுக்கீடு கோரப்படுவது ஒரு வழி.