தமிழ் - tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் - tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 ஜனவரி, 2012

தமிழ் எழுத்துரு தகுதரம்

1997 வாக்கில் டிஸ்கி என்று தமிழ் எழுத்துருக்களில் இட அமைவை வெளிநாட்டுத் தமிழர்கள் உருவாக்கியிருந்தார்கள். அப்போது இருந்த 8 பிட் எழுத்து அமைப்பு முறையில் மொத்தம் 256 இடங்கள்தான். முதல் 7 பிட்டுகளுக்கான 128 இடங்கள் அஸ்கி எனப்படும் அமெரிக்க எழுத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. மற்ற மொழிகள் ஒவ்வொன்றும் அடுத்த 128 இடங்களில் தமது எழுத்துக்களை பொருத்திக் கொள்ள முடியும். தமிழ் எழுத்துக்களை அப்படி மேல் 128 இடங்களில் பொருத்தியது tscii என்ற டிஸ்கி தகுதரம்.

அதை ஏற்றுக் கொள்ளாமல் 1999 மாநாட்டில் tab, tam என்று இரண்டு தகுதரங்களை அறிவித்தார்கள். டேப் என்பது தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஒரே எழுத்துருவில் அடிக்க வேண்டி உருவானது. 128 இடங்களில் அஸ்கியும் அடுத்த 128 இடங்களில் தமிழ் எழுத்துக்களுக்கான ஒதுக்கீடும். இதற்கும் டிஸ்கிக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. டேம் என்பது 256 இடங்களையும் தமிழ் எழுத்துக்களுக்காக பயன்படுத்துவது. டேம் மூலம் தமிழ் அச்சுத் துறைக்கான எழுத்துக்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு பிட் அதிகரிக்கும் போது எழுத்துக்களுக்கான இடம் இரண்டு மடங்காகும்.
2 பிட் - 4 இடங்கள்
3 பிட் - 8 இடங்கள்
4 பிட் - 16 இடங்கள்
5 பிட் - 32 இடங்கள்
6 பிட் - 64 இடங்கள்
7 பிட் - 128 இடங்கள்
8 பிட் - 256 இடங்கள்

8 பிட் முறையிலான டிஸ்கி, டேப் அல்லது பிற மொழிகளுக்கான அமைப்பில் இருந்த மிகப்பெரிய சிக்கல் அவற்றை பல மொழிகளுக்கு ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாது என்பதுதான். உதாரணமாக தமிழ் எழுத்துருவில் 142வது இடம் க என்ற எழுத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். அதே இடம் இந்தியில் இந்தி கவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இதனால் ஒரே எழுத்துருவைப் பயன்படுத்தி பல மொழிகளை எழுத முடியாமல் இருந்தது.

டிஸ்கி உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்த வெளிநாட்டுத் தமிழர்களின் முகாமில் நான் இருந்தேன். இந்த புதிய தகுதரங்களுக்கு முன்பாகவே நாங்கள் டிஸ்கியின் அடிப்படையில் அமைந்த எழுத்துருக்களையும், விசைப்பலகை இயக்கிகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டு கணினி அறிஞர்கள் வேண்டுமென்றே இந்த பயன்பாட்டை புறக்கணித்து விட்டார்கள் என்று நீண்ட விவாதங்கள் நடந்தன. இணையத்தில் நடந்த விவாதங்களில் இயல்பாகவே டிஸ்கிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. கடைசி வரை நான் டிஸ்கி எழுத்துக்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். டேப் எழுத்துருக்கள் தமிழ் இணையதளங்களை சிலவற்றைப் பயன்படுத்த மட்டுமே நிறுவிக் கொண்டேன்.

இந்த சச்சரவுக்கு வெளியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தீர்வு/முடிவு வந்தது. இஸ்கி என்று இந்திய மொழிகளுக்கான தகுதரம் ஒன்று இந்தி மொழியின் அடிப்படையில் எல்லா இந்திய மொழிகளுக்கும் உருவாக்கப்பட்டிருந்தது. யூனிகோட் உருவாக்கப்பட்ட போது மத்தியிலிருந்து இந்திய மொழிகளுக்கு அந்த ஒதுக்கீட்டை அனுப்பி விட்டார்கள். டேப், டிஸ்கி என்று அடித்துக் கொண்டிருந்த தமிழ்ச்சூழல் அதில் கவனம் செலுத்தவேவில்லை. யூனிகோட் தகுதரம் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகுதான் விழித்துக் கொண்டார்கள்.

யூனிகோட் என்பது 16 பிட் என்கோடிங்.
16 பிட் எழுத்துருவில்
9 பிட் - 512 இடங்கள்
10 பிட் - 1024 இடங்கள்
11 பிட் - 2048 இடங்கள்
12 பிட் - 4096 இடங்கள்
13 பிட் - 8192 இடங்கள்
14 பிட் - 16384 இடங்கள்
15 பிட் - 32768 இடங்கள்
16 பிட் - 65536 இடங்கள்

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட விளக்கம். முழு விபரங்களையும் இங்கு பார்த்துக் கொள்ளலாம். http://en.wikipedia.org/wiki/Unicode

இந்த இடங்கள் உலகின் எல்லா மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டன. ஒரு மொழிக்கான இடத்தில் இன்னொரு மொழிக்கான எழுத்துக்கள் தலையிடுவதில்லை. அதனால் கணினியின் ஒரே ஆவணத்தில் எல்லா மொழிகளையும் எழுதுவதற்கான சாத்தியம் ஏற்படுத்தப்பட்டது. யூனிகோடை பெரிய மென்பொருள் நிறுவனங்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டன. விண்டோஸ் எக்ஸ்பி வெளியீட்டில் தமிழுக்கான யூனிகோடு ஆதரவு முழுமையாக இருந்தது. லதா என்ற எழுத்துருவையும் மைக்ரோசாப்டு உருவாக்கியிருந்தது.

அது வரை உருவாக்கியிருந்த டிஸ்கி, டேப் எழுத்துருக்கள் சீக்கிரமே வழக்கு ஒழிந்து அல்லது குறைந்து போயின. இப்போது இணையத்தில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா தமிழ் இணைய தளங்களும் ஒருங்குறி எனப்படும் யூனிகோடு தகுதரத்தில்தான் எழுத்துக்களை காண்பிக்கின்றன. மதுரைத் திட்டம் தளத்துக்குப் போனால், ஆரம்ப கால புத்தகங்களை டிஸ்கி எழுத்துரு வடிவத்தில் பெற்றுக் கொள்ள முடியும். சுஜாதாவின் வழிகாட்டலில் ஆரம்பித்திருந்த அம்பலம் மின் பத்திரிகையில் டேப் எழுத்துக்கள் பயன்பட்டன.

டேப், டிஸ்கி எழுத்துருக்கள் அடிப்படையிலான மோதல்கள் நெருங்கிய நண்பர்களுக்கிடையே கூட இருந்தது. அது பெரும்பாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த கணினியாளர்களுக்கும் இணையத்தில் செயல்பட ஆரம்பித்திருந்த சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா வாழும் தமிழ் கணினியாளர்களுக்கும் இடையிலானதாகவே இருந்தது. இந்த போட்டியும், சச்சரவும் தமிழ்க் கணிமைக்கு பெருமளவு பின்னடைவைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல், யூனிகோடு தகுதரத்தில் தமிழின் இயல்புக்கு முற்றிலும் பொருந்தாத இந்தி எழுத்துக்களின் அடிப்படையிலான ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தது. அந்தச் சுமையை தமிழ் இன்று வரை சுமந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் கண்ணுக்கெட்டும் தூரம் வரை அதை சுமக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.

அது என்ன சுமை?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் என்று நமக்கெல்லாம் தெரியும். மற்ற குறியூடுகளுக்கும் சேர்த்து 256 இடங்கள் வாங்கியிருந்தால் தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் பொருத்திக்கொண்டிருக்கலாம். முதலாவதாக தமிழ் மொழிக்கு 128 இடங்கள்தான் ஒதுக்கப்பட்டது. அதனால் உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 இடம் ஒதுக்கினார்கள். உயிர்மெய் எழுத்துக்களை கூட்டெழுத்துக்களாக எழுத்துருக்கள் கையாள வேண்டும். இரண்டாவதாக, இப்படிப்பட்ட கூடுதல் சுமையிலும் ஒதுக்கீட்டை இந்தி எழுத்துக்களின் அடிப்படையில் அமைத்திருந்தார்கள். இந்தியில் க உச்சரிப்புக்கு 4 எழுத்துக்கள் இருந்தன. தமிழ் க வை இந்தி க இருக்கும் இடத்தில் வைத்து விட்டு அடுத்த 3 இடங்களை காலியாக விட்டு வைத்தார்கள். (http://unicode.org/charts/PDF/U0B80.pdf)

இப்படி தமிழுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு ஒதுக்கீட்டை செய்திருந்தார்கள். இதை சரி செய்வது என்பது இப்போதைக்கு சாத்தியமில்லைதான். இதற்குள் நூற்றுக்கணக்கான பயன்பாடுகள், ஆயிரக்கணக்கான எழுத்துருக்கள், லட்சக்கணக்கான இணைய தளங்கள், கோடிக்கணக்கான ஆவணங்கள் ஒருங்குறி முறையில் உருவாகியிருக்கின்றன. இவற்றை எல்லாம் மாற்றும் முயற்சி, நாள் போகப் போக கடினமாகிக் கொண்டேதான் போகும்.
இதைப்பற்றிய விவாதங்களின் இரண்டு பக்கங்கள்
http://www.kanithamizh.in/unicode-il-tamil.htm (யூனிகோடு ஒதுக்கீட்டை குறை சொல்லி)
http://ezilnila.com/archives/769 (யூனிகோடு ஒதுக்கீட்டை ஆதரித்து)

யூனிகோடுக்கு அடுத்த தகுதரம் உருவாக்கப்படும் போது உறுதியாக தமிழுக்கான தனித்தன்மையான ஒதுக்கீடு கோரப்படுவது ஒரு வழி.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

லினக்சு தமிழாக்கம்

  • நான் லினக்சு பயன்படுத்துவதில்லையே!
  • எனக்கு தொழில் நுட்பம் தெரியாதே!
  • இதற்கு சிறப்புக் கருவிகள் தேவைப்படுமோ?
  • பிற வேலைகளுக்கிடையே நேரம் இருக்காதே!

ஒருங்குறி (unicode) எழுத்துருக்கள் நிறுவப்பட்டு, தமிழில் தட்டச்சிட முடியும் கணினி பயன்படுத்துபவர் யாரும் இந்தப் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.

உங்கள் விருப்பப்படி வசதிப் படி, வாரத்துக்கு ஒரு மணி நேரம் செலவளித்தால் கூட போதும்.

உங்களுக்குப் பிடித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஆர்வத்தைத் தெரிவித்தால், ஒரு உரைக்கோப்பு (text file) அனுப்பி வைப்பார்கள்.

அதை poedit என்ற உரைத் தொகுப்பியைப் (text editor) பயன்படுத்தி விண்டோசு கணினிகளிலும், KBabel என்ற மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி லினக்சு கணினிகளிலும் மொழி பெயர்க்கலாம்.

சாளரத்தின் மேற்பகுதியில் ஆங்கில சொல் வரும், கீழ் பகுதியில் தமிழ்ச் சொல்லை உள்ளிட்டால் வேலை முடிந்தது.

இது போல ஒவ்வொரு கோப்பிலும் நூற்றுக் கணக்கான சொற்றொடர்கள் இருக்கலாம். முடிந்தவற்றை மொழி மாற்றி கோப்பை சேமித்து ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி விட்டால்
  • உங்கள் பங்களிப்பு ஆரம்பித்து விட்டது
  • உங்களால் மொழி மாற்றம் செய்யப்பட்ட சொற்கள் பல்லாயிரக் கணக்கான கணினிகளுக்குப் போய்ச் சேர்ந்து பயன்படுத்தப்படும்.
  • மொழிபெயர்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் சேர்ந்து கொள்ளும்.
  • சில கோடி தமிழர்களுக்கு கணினி உலகிற்கான பலகணியைத் திறக்கும்முயற்சியில் உங்கள் கையும் சேர்ந்து விட்டது.
லினக்சு கணினி பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் உங்கள் கைவண்ணத்தை நீங்களே பயன்படுத்தி மகிழலாம்.

யாரைத் தொடர்பு கொள்வது?

தமிழ்க் கணிமை - நிலைமை

சொன்னது போல பல முயற்சிகள் நடந்து வந்தாலும் கணினிகளும், அவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் இணைய உறவுகளும் பெரும்பான்மை தமிழருக்கு எட்டாக் கனிகளாகவே இருக்கின்றன.

ஆங்கிலம் தெரிந்த படித்த ஒருவர் கணினி வாங்கி, தனது தமிழ் பற்றைக் காட்ட, தமிழ் தாகத்தைத் தணித்துக் கொள்ள எழுத்துருக்களையும் (fonts), உள்ளீட்டு கருவிகளையும் (input tools), இடைமுகங்களையும் (interfaces) தனது கருவியில் நிறுவிக் கொண்டு மகிழ்வதற்கு இதுவரை செய்த தன்னார்வலர் பணிகள் வழி வகுத்திருக்கின்றன.

ஆங்கில புலமை இல்லாத தமிழ மட்டுமே பேச, எழுத, படிக்க முடியும் ஒருவர் தனது தொழிலுக்காக, வணிகத்துக்காக, பிற பணிகளுக்காக கணினி வாங்கத் துணியும் அளவுக்குக் கருவிகள் இல்லை.

கடைக்குப் போய் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கணினி வாங்கினால்
  • நமக்குப் புரிந்த மொழியில் படிக்கலாம்
  • கருவிகளை இயக்கிப் பாட்டுக் கேட்கலாம்,
  • இணையத்தில் இணைந்து படம் பார்க்கலாம்,
  • உலகின் மூலைகளில் எல்லாம் உள்ள தமிழ் மக்களுடன் கருத்துப் பரிமாறலாம்,
  • பொருளாதாரப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம்

    என்று வருவதற்கு இன்னும் கொஞ்சம் வேலை மீதியிருக்கிறது.
அப்படி ஒரு பொருள் கடைகளில் கிடைத்தால் இன்றைக்கு பரவலாக செல் பேசிகள் பயன்படுத்தப்படுவது போலக் கணினிகளும் வாங்கப்படும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. பயன்படுத்த தோதுவாக, அதனால் பலன் விளைவதாக, அதனால் பிள்ளைகளுக்கு முன்னேற வழி உள்ளது என்று இருந்தால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் கணினி வாங்குவார்கள்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?
  1. மேசை இடைமுகங்கள் கேடீயி, ஜினோம், வலை உலாவி மோசில்லா, அலுவலக மென்பொருள் ஓப்பன் ஆபிசு, லினக்சு பொதிகள் ஃபெடோரா, சுசே, உபுண்டு போன்றவற்றின் இடைமுகங்களை தமிழுக்கு மாற்ற தொடர்ந்து பணி நடக்க வேண்டும்.
    ஏற்கனவே தேவையான திட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில தன்னார்வலர்களால் அவர்களால் முடிந்த வேலை நடந்து வருகிறது. இன்னும் பல கைகள் தேவை.

  2. கணினி பயன்படுத்துவது, அதன் பயன்பாடுகள் குறித்த தரமான, எளிதாகப் புரியும் வண்ணம் கையேடுகள், உதவிக் குறிப்புகள், புத்தகங்கள் மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாக இல்லாமல், பயனருக்கு என்று தமிழில் எழுதப்பட வேண்டும்.
    நல்ல எழுதும் திறமை படைத்தவர்கள், தொழில் நுட்பப் புலமையும் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடிகிற வேலை.

  3. இப்படி மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கும் லினக்சு பொதிகளைக் கணினியில் நிறுவி பரவலாக விற்பனை செய்து, விற்பனைக்குப் பிறகான சேவை வழங்க தொழில் முனைவர்கள். கச்சிதமான திட்டமிடலும், திறமான மேலாண்டமை திறமையும் கொண்டவர்களால் மட்டுமே முடிவது.
எனக்கு விருப்பம் இருக்கிறது. எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

சென்னையில் தமிழில் உரையாடலாம் இனி....

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் விவாதங்கள், பிறண்டல்கள், குத்தல்களுக்குப் பிறகு இந்திய லினக்சு பயனர் குழுவின் - சென்னை அமைப்பில் தமிழில் எழுதிக் கொள்ள தனி மடற்குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

லினக்சு, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள, அது தொடர்பான பணிகளில் ஈடுபட ஆர்வம் உள்ளவர்கள், இந்த மடற்குழுவில் சேர்ந்து கொள்ளலாம். மடல்கள் எல்லாமே தமிழில் இருக்கும்.
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil

ஆமாச்சு என்று அழைக்கப்படும் ஸ்ரீராமதாஸ் தமிழ்நாட்டில், தமிழில் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படும் உரிமைக்காக பல இடங்களில் போராடி வந்திருக்கிறார். அவர் கட்டற்ற தமிழ்க கணிமை தொடர்பான பணிகளில் இறங்கி, சென்னை லினக்சு பயனர் மடற்குழுவில் பங்கேற்கும் போது தமிழில் அஞ்சல் அனுப்ப ஆரம்பித்தார்.
  • ஆங்கில மடற்குழுவில் தமிழா!!!
  • தமிழ் தெரியாத உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்????
  • வேண்டுமானால், தமிழ் [Tamil] என்று ஒரு முத்திரை குத்தி தமிழ் மடல்களை அனுப்புங்கள்
  • தமிழில் எழுதினால் கூடவே ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்க வேண்டும்.
இப்படி பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றுக்கும் தகுந்த பதில்கள் சொல்லி தனது தமிழ் அஞ்சல்களைத் தொடர்ந்து அனுப்பியபடி இருந்தார்.
  • தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயங்கும் மடற்குழுவில் தமிழில் பேசுவது இயல்பானது, அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்
  • 'ஆங்கிலத்தில் எழுதத் தயங்கும் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்' என்று ஆங்கில மடல்களை தடுக்க முடியுமா? தமிழ் தெரியாதவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • முத்திரை எல்லாம் குத்த முடியாது.
  • ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது கூடுதல் பணிச்சுமையாகி விடும்.
மூன்று ஆண்டுகளில் ஏற்கனவே இரண்டு மூன்று முறை நீண்ட விவாதங்கள் ஏற்பட்டு ஓய்ந்தன.

இது தொடர்பான இன்னொரு குழாயடிச் சண்டை சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்தது.
  • [Tamil] என்று முத்திரை குத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாக சமாதானத்துக்கு வந்த தமிழ் தரப்புக்கு அப்போதும் தீர்வு கிடைக்கவில்லை.
  • 'தமிழுக்கு என்று தனியாக ஒரு மடல் குழு ஏற்படுத்திக் கொள்வோம்' என்பதும் நிராகரிக்கப்பட்டது.

  • 'தமிழில் எழுதினாலும் மடலின் தலைப்பு ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும், தமிழில் எழுதியவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பையும் சேர்த்தே அனுப்ப வேண்டும்' என்று விதி முறை ஏற்படுத்தினார்கள்.
  • "தமிழ் பேசுபவர்கள் மட்டும்தானா சென்னையில், மலையாளம், இந்தி, தெலுங்கு, மராட்டி பேசுபவர்களும் இருக்கிறோம். எல்லோரும் அவரவர் மொழியில் மடல் அனுப்ப ஆரம்பித்தால் நிலைமை என்ன ஆகும்?"

  • "நீங்கள் தமிழில் அனுப்பும் தகவல்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம், அவற்றை எப்படி விட்டுக் கொடுப்பது"
இப்படி ஆரம்பித்து,
  • "இந்தியாவில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. உலகத்தில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மடற்குழுவில் அனுமதி அளித்தால் நிலைமை என்ன ஆகும்?"
என்று வாதித்து
  • அப்படி அவருக்கே தெரியாத மொழிகளில் தொடர்பே இல்லாத உரைத் தொகுப்பு ஒன்றை கூகுள் மொழிமாற்றியில் தயாரித்து, வரிசையாக பல மடல்களை குழுவுக்கு அனுப்பி அடாவடி செய்தார் ஒருவர்.
மடற்குழுவை நடத்த இடம் அளித்து, நிர்வகித்து வந்த பேராசிரியர் இந்தக் கட்டத்தில் தலையிட்டு, 'எந்தெந்த மொழியில் மடற்குழு வேண்டும் என்று கேட்கப்படுகிறதோ அந்தந்த மொழிகளில் தனி மடற்குழு அமைத்துத் தருகிறேன்' என்று அறிவித்தார்.

அதன்படி ilugc.tamil என்ற மடற்குழு ஏற்படுத்தப்பட்டு இன்று முதல் செயல்பட ஆரம்பித்து விட்டது.

ஆங்கிலத்தில் செயல்படும் மடற்குழுவின் 2300 உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிகமான பேர் தமிழ் குழுவில் பங்கேற்று பலன் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
  • தமிழ் நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சில லட்சங்களுக்குக் குறையாதது.
  • தமிழ் பேசும் கணினி பணியாளர்களின் எண்ணிக்கை இன்னும் பல லட்சங்கள்.
  • கணினியில் கட்டற்ற மென்பொருட்கள் பயன்படுத்த விரும்பும் தமிழ் ஆர்வலர்கள்
என்ற பல்வேறு தரப்பினருக்கும் பேருதவியாக இருக்கக் கூடிய இந்த மடற்குழு சிறப்பாக செயல்பட்டால், முதல் ஆண்டில் 50,000 உறுப்பினர்கள் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.