பரிநிரல் - FOSS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிநிரல் - FOSS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மென்பொருள் சுதந்திரதினம்

ஆகஸ்டு மாதம் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது என்று கேட்டால் இந்தியர் எல்லோருக்கும் விடை தெரியும் (தெரிந்திருக்க வேண்டும் என்று நம்பிக்கை :-) 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள்.

இந்தச் சுதந்திரத்தின் பிறகு நாம் ஏற்படுத்திக் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான உரிமைகளும் கடமைகளும் நமக்கு அரசியல், சமூக தளங்களில் கிடைத்திருக்கின்றன.

அதே போல, நம்முடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறதா?  20ம் நூற்றாண்டின்  தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்குப் பிறகான கணினி உலகில் நமது உரிமைகள் எப்படி இருக்கின்றன? என்னென்ன அடிமைத் தளைகள் இருக்கின்றன?

'நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் தொடர்பான நமது உரிமைகள் பறிக்கப்பட்டு வணிக நிறுவனங்களின் லாப நோக்கத்துக்காக நாம் கட்டுண்டிருக்கிறோம்' என்பது நம்மில் பலருக்குச் செய்தியாக இருக்கலாம்.

பயன்படுத்துபவர்கள், மாணவர்கள், மென்பொருள் துறையினரின் உரிமைகளைப் பறித்து தமது ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்ள முயலும் வணிக நிறுவனங்களுக்கு  (கிழக்கிந்திய கம்பெனி நினைவு வருகிறதா?) எதிராக போராட்டக் கொடி ஏற்றி, நமது உரிமைகளை மீட்டுத் தருவதற்காக 1980களிலிருந்தே உலகெங்கிலும் உள்ள சிந்தனையாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

மென்பொருள் துறையின் வல்லுனர்கள் பலர் கட்டற்ற, மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக் கூடிய வகையில் மென்பொருட்களை உருவாக்கி வெளியிட்டு, பராமரித்து, மேம்படுத்தி வருகிறார்கள். வணிக நிறுவனங்களின் கட்டுத்தளைகளுடனான மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டற்ற மென்பொருட்கள் ஆயிரக்கணக்கில் இலவசமாகவும், விற்பனைக்கும் கிடைக்கின்றன.

இந்தக் கட்டற்ற மென்பொருட்களை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் மென்பொருள் சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை கல்விக் கூடங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா இடத்திலும் பயன்படுத்துவதன் ஆதாயங்கள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

நோக்கம்
எல்லா மக்களும் சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், புதிய ஆக்கங்களை படைக்கவும், படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் ஏதுவான வெளிப்படையான எல்லோரையும் அணைத்துச் செல்லும் தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்குவது.

குறிக்கோள்கள்
  • மென்பொருள் சுதந்திரத்தையும் அதற்காக உழைப்பவர்களையும் கொண்டாடுவது
  • மென்பொருள் சுதந்திரம் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும், பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல்.
  • எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது
  • உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களை ஊக்குவித்தல்
  • இதே நோக்கத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களுடனும் தனிநபர்களுடனும் இணைந்து  செயல்படுதல். 
சென்னையில் மென்பொருள் சுதந்திரதினம்
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகெங்கிலும் கொண்டாடப்படும் இந்த நிகழ்வு இந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி நடக்கவுள்ளது.

இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை (http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil) பிரிவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதைச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.  சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றி விளக்கும் கண்காட்சியும் கலந்துரையாடல்களும் செப்டம்பர் 18ம் நாள் நடக்கும்.

1. இதில் கலந்து கொள்ள பொதுமக்களையும், மாணவர்களையும், பத்திரிகையாளர்களையும், அரசு ஊழியர்களையும், கணினி ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கிறோம். இது பற்றித் தெரிந்து கொள்ள  இந்த என்ற வலைப்பக்கத்தைப் பாருங்கள்.

2. சென்னைக்கு வெளியில் வசிக்கும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் தத்தமது பகுதியில் மென்பொருள் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யலாம். உங்கள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை  இந்தத் தளத்தில் பகிர்ந்து கொண்டால் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதைப் பார்வையிடுவார்கள்.

நமது கணினியில் இயங்கும் மென்பொருட்களை கட்டிப் போட்டுள்ள தளைகளை உடைத்து எறிவோம்.
எல்லோரும் பங்கேற்கக் கூடிய தகவல் தொழில் நுட்ப சமூகத்தை உருவாக்குவோம். 


மென்பொருள் வணிகக் கட்டுகளுக்குச் சாவுமணி

சனி, 14 ஆகஸ்ட், 2010

சென்னை பயனர் குழு - ஆகஸ்டு மாதக் கூட்டம்.

சென்னை லினக்சு குழுவின் மாதாந்திரக் கூட்டங்களில் பல ஆண்டுகளாகக் கலந்து கொண்டதில்லை. சனிக்கிழமை, நிறுவன வேலை நாளாக இருந்ததாலும், மற்ற பொறுப்புகளுக்கு இடையிலும் சனிக்கிழமை பிற்பகலில் கூட்டத்துக்குப் போவது நடக்காததாகவே போயிருந்தது. சமீபத்திய மாற்றங்களினால் இந்த அழுத்தங்கள் குறைந்து பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

கூட்டத்துக்குப் போய்ச் சேருவது:

பேருந்தில் ஏறி ஐஐடிக்கு முன்பு இறங்கிய பிறகு விண்வெளி பொறியியல் துறை (aerospace engineering) வரை போய்ச் சேருவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நுழைவாயிலிலிருந்து 'கஜேந்திரா சர்க்கிள இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் சார், அதோ நிற்கும் வேனில் ஏறினால் கொண்டு விட்டு விடுவார்கள்' என்று வாயிற் காவலர் வழி காட்டினார்.

வேன் வந்து புறப்படுவதற்குக் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்தே போக வேண்டும். வேனில் இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு யானை சிலைகள் வைக்கப்பட்ட ரவுண்டானாவில் இறங்க வேண்டும். அதுதான் கஜேந்திரா சர்க்கிள்.

(நினைவில் இருப்பது) வேன் வந்த பாதையைத் தவிர்த்து மூன்று சாலைகள் பிரிந்து போகின்றன. வலது புறம் திரும்ப வேண்டும். மின், மின்னணுவியல் (electrical department) துறை என்ற திசையில் நடந்து கொஞ்ச தூரத்துக்குப் பிறகு பயன்பாட்டு இயந்திரவியல் (applied mechanics) என்ற சாலையில் திரும்ப வேண்டும். பயன்பாட்டு இயந்திரவியல் கட்டிடத்துக்கு முன்பு இருக்கும் புதிய கட்டிடம் விண்வெளி பொறியியல் துறையுடையது. அந்தக் கட்டிடத்தின் முகப்பில் மட்டும்தான் பெயர் எழுதியிருந்தது பார்க்கக் கிடைத்தது.

போகும் போது 20 நிமிடங்கள் தாமதமாகி விட்டிருந்தது.

ராமன் லினக்சில் கோப்பு அனுமதிகள் குறித்து பேச ஆரம்பித்திருந்தார்.

-- பயனர்(u), குழு(g), பிறர்(o) என்று மூன்று பிரிவினருக்கு அனுமதிகள் மாற்றலாம்
-- படித்தல்(r), மாற்றுதல்(w), இயக்குதல்(x) என்று மூன்று வகை அனுமதிகளை கொடுக்கலாம் அல்லது நீக்கலாம்.

-- ls -l மூலம் ஒரு கோப்பின் அனுமதி விபரங்களை பார்க்கலாம்.
-- அனுமதி விபரங்கள் ஒவ்வொரு பிரிவினருக்கு மூன்று கட்டங்களாக ஒன்பது கட்டங்களில் காட்டப்படுகிறது (உதாரணம் : r-xrw-r--). முதல் மூன்று கட்டங்கள் பயனருக்கு உள்ள அனுமதிகள், அடுத்த மூன்று கட்டங்கள் குழுவிற்கான அனுமதிகள், கடைசி மூன்று கட்டங்கள் மற்றவர்களுக்கான அனுமதிகள்.

-- லினக்சில் எல்லாமே கோப்புகள்தான்
-- கோப்பு, அடைவு, கருவி என்று காட்டுவதற்கு அனுமதி விபரங்களுக்கு முந்தைய கட்டம் பயன்படுகிறது (- என்றால் சாதாரண கோப்பு, d என்றால் அடைவு, c என்றால் கேரக்டர் டிவைஸ், b என்றால் பிளாக் டிவைஸ், l என்றால் லிங்க்)

--chmod பயன்படுத்தி அனுமதிகளை மாற்றலாம். பயனர் பிரிவு (u, g, o), + (சேர்) / - (நீக்கு), அனுமதி வகை (rwx). (உதாரணம் : chmod u+rw கோப்பு)
--இன்னொரு முறையில் எண்கணக்கு மூலம் மாற்றலாம். r=4, w=2, x=1 என்ற கணக்கில் கூட்டி என்ன அனுமதிகள் என்று அமைக்கலாம். (உதாரணம் : chmod 666 கோப்பு)

ஸ்டிக்கி பிட்  மற்றும் இயக்கப்படும் கோப்பு உரிமையாளரின் (setuid) அனுமதிகளுடனேயே இயங்கும் உத்தி பற்றியும் விளக்கினார்.

என்னதான் மேனுவல் (man) பக்கங்களைப் படித்தாலும், எத்தனை புத்தகங்களை புரட்டினாலும், ஒருவர் உதாரணங்களுடன் விளக்கிச் சொல்லும் போது மனதில் இன்னும் ஆழமாக பதிந்து விடுகிறது. அந்த வகையில் மிகவும் பலனுள்ள அமர்வு.

சந்திரசேகர் பாபு - ரூபி கணிமொழி குறித்துப் பேசினார்.

பேர்ல், ஷெல் நிரல்கள், ஜாவா, பைதன் என்று பல மொழிகளில் பணி புரிந்த இவர் ரூபி மொழி, தான் அறிந்த மொழிகளில் இனிதானது என்று மிகச்சிறப்பாக விளக்கினார். 'பேர்ல், ஷெல் நிரல்களால் செய்யக் கூடிய பணிகளை ரூபியில் எப்படி சிறப்பாக செய்ய முடியும்' என்பது பேச்சின் குறிக்கோளாக இருந்தது.

மென்பொருள் இயல் பின்னணி இல்லாத என்னைப் போன்றவர்களுக்கும் புரியும்படி நிறைய எடுத்துக்காட்டுகள், அனுபவப் பகிர்வுகள், சரளமான பேச்சு, நட்பு தவளும் புன்னகை சேர்த்து நேரம் போவது தெரியாமல் விறுவிறுப்பாக இருந்தது இந்த அமர்வு.

  • ரூபி என்பது முழுக்க முழுக்க பொருள் சார்ந்த நிரல் மொழி (object oriented language). ரூபி மொழியில் எண்கள் (integer), சொற்றொடர்கள் (strings) கூட பொருட்களாகத்தான் கருதப்படுகின்றன.


  • நிரல் எழுதுவது அழகாக இருக்க வேண்டும், நிரலை பராமரிப்பது எளிமையாக இருக்க வேண்டும் என்பது ரூபியின் குறிக்கோள்.
  • ரூபியை வெறும் இணையப் பயன்பாட்டு நிரல்மொழியாக நினைக்க வேண்டாம். அது ஒரு பொதுப் பயன்பாட்டு நிரல்மொழி.

பேசும் போதே எடுத்துக்காட்டு செயலிகளாக ஷெல் நிரல், பேர்ல், ரூபி மூன்றிலும் எழுதி இயக்கிக் காட்டினார். இடையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக, தெளிவாக, எளிமையாக பதிலளித்தார். நேரம் கடந்து போனதை சுட்டிக் காட்டிய பிறகுதான் அவருக்கும் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் அவ்வளவு நேரம் ஓடிப் போனது உறைத்தது.

சுகி வெங்கட், அவரது நிறுவனத்தில் உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டுள்ள மல்டி ஃப்ளோ பற்றிப் பேசினார்.

ஃபயர்ஃபாக்சின் சூல் (xul) சட்டகத்தில், ஜாவாஸ்கிரிப்டில் உருவாக்கப்பட்ட இந்த தொகுப்பியில் பன்மொழி இடைமுகம், கணிதக் குறியீடுகள் சேர்ப்பது என்று வசதிகள் இருக்கின்றன. ஒருவர் இத்தகைய படைப்பை உருவாக்கி கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அவர் கேட்டுக் கொண்டது போல பயனர்களாகவும், நிரலாளர்களாகவும் மற்றவர்களும் பங்கேற்று இதை மேம்படுத்த முடிந்தால் சிறப்பான ஒரு மென்பொருளாக உருப்பெறும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதம் 18ம் தேதி நடத்த உத்தேசித்துள்ள மென்பொருள் சுதந்திர நாள் (software freedom day) முன் தயாரிப்புகளைக் குறித்து ஸ்ரீனி, தியாகராஜன், ராமன் அறிவித்தார்கள். 'யார் யார் எத்தனை கடைகள் அமைக்கப் போகிறார்கள், பணிகளைச் செய்வதற்கு தன்னார்வலர்கள்' என்று பட்டியல் தயாரித்தார்கள்.

'நிகழ்ச்சிக்கு முந்தைய மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் தொடர்பு வேலைகளைப்' பற்றிக் கேட்ட என்னிடம் அந்தப் பொறுப்பைத் தந்தார்கள். அருண் SAG, ஸ்ரீனிவாசன், சுரேஷ், நாகராஜன், சத்யநாராயணன், அகிலன் ஆகியோர் இதில் சேர்ந்து கொண்டோம்.
  • சென்னையில் வெளியாகும் தமிழ் நாளிதழ்கள் (தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன்),
  • ஆங்கில நாளிதழ்கள் (தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் குரோனிக்கிள், டைம்ஸ் ஆஃப் இந்தியா),
  • கணினி பத்திரிகைகள் (தமிழ் கம்ப்யூட்டர், லினக்சு ஃபார் யூ),
  • தமிழ் பத்திரிகைகள் (ஆனந்த விகடன், குமுதம், குங்குமம்),
  • பண்பலை வானொலிகள் (சூரியன், மிர்ச்சி, ஆஹா, பிக், ரேடியோ சிட்டி)
    போன்ற எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் தகவல்களை முன் கூட்டிய அனுப்பி வைப்பது

  • sfd2010.ilugc.in என்ற தளத்தில் நிகழ்வு பற்றிய விபரங்களை தொகுத்து அளித்தல்
  • டிவிட்டர், ஃபேஸ்புக், லிங்க்ட்இன் போன்ற இணைய தளங்களில் தகவலை பரப்புவது
  • வலைப்பதிவர்களில் விழிப்புணர்வு உருவாக்குவது
  • கல்லூரி, பள்ளிகளுக்கு விபரங்களை அனுப்புவது..
என்று பல வழிகளில் மென்பொருள் சுதந்திரம் குறித்த தகவலை பரப்பி நிகழ்ச்சிக்கு மக்களை வரவேற்க வேண்டும்.

இவற்றைத் தவிர
- தமிழக அரசின் எல்காட்
- c-dac
- nrcfoss
போன்ற மென்பொருள் தொடர்பான அரசு துறைகளை அதிகாரபூர்வமாக பங்கேற்க அழைக்கலாம்.

சிறப்பு விருந்தினர் என்று யாரையும் அழைக்காமல், கட்டற்ற மென்பொருளில் ஆர்வம் உடைய அதற்கான பணிகளை செய்த தலைவர்களையும் (இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு உமாசங்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்றவர்கள்) வருகை தர அழைக்கலாம்.

லினக்சு பயிற்சி நிறுவனங்கள், லினக்சு சேவை நிறுவனங்கள், கணினி விற்பனை நிறுவனங்கள் போன்றவற்றை அணுகி அவர்களின் பங்களிப்பையும் கேட்கலாம்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காலக்கண்ணாடி

2008
  • தமிழகத்தில் மின்னணு கருவிகள் (electronic appliances) வாங்கினால் தமிழிலேயே நம் மக்களுக்கு எளிதாகப் புரியும் இடைமுகத்துடன் (interface) கிடைக்கின்றன.
  • கணினியில் பயன்படுத்தத் தேவைப்படும் மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கூட பயன்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.
  • தமிழ் மாணவர் எவரும் ஆங்கில அறிவுக் குறைவால் வாய்ப்பை இழக்கும் நிலை மாற ஆரம்பிக்கிறது.
2010
  • தமிழில் அறிவுக் கருவூலங்கள் (encyclopedia) பெருகி, யாரும் தமிழ் வழியே உலகின் அறிவுச் செல்வங்களை அணுகலாம் என்ற நிலைமை.
  • தமிழக அரசுப் பணிகள் யாவும் தமிழிலேயே நடைபெறுகின்றன. தகவல் இணைப்புகளால் அரசு அலுவல்களில் கால தாமதம், ஊழல் புரிவதற்கான வாய்ப்புகள் ஒழிந்து போகின்றன.
  • கடலுக்குப் போகும் மீனவர்களும், பயிர் போடும் விவசாயிகளும் தமக்கு வேண்டிய விபரங்களைத் திரட்டவும், தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
  • வீட்டு செலவுக் கணக்குக்கும், கடைகளில் விற்பனைக் கணக்கும், செய்தித்தாள் போடுபவரின் கணக்கும், பால் கணக்கும் கணினிகளின் மூலம் செய்து கொள்ள முடிகிறது.
  • தமிழ் மருத்தவர்களும், தமிழ் பொறியாளர்களும், தமிழ் வணிகர்களும், வழக்கறிஞர்களும் தமது ஆவணங்களையும் (documents), குறிப்புகளையும் (records) முழுமையாகப் பதிவு செய்து தரமான சேவை வழங்க முடிகிறது.
  • படித்த இளைஞர்கள் யாவருக்கும் நமது சமூகத்திலேயே உலகத் தரத்திலான வேலை வாய்ப்புகளும், ஊதியமும் கிடைக்கிறது.
2020
  • ஆப்பிளின் iPod போல, மைக்ரோசாப்டின் விண்டோசு போல், லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகையே மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு (inventions) தமிழகம் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது.
  • மரபணு ஆராய்ச்சிகள், இயற்பியலின் முன்னணி பணிகள் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் தமிழிலேயே நடைபெறுகிறது.
  • உயர்தர திரைப்படங்கள், உலகே வியக்கும் கலைப் படைப்புகள் தமிழகத்தில் உருவாகின்றன.
  • தரமான சாலைகள், உயர்வான பொதுச் சேவைகள், எல்லோருக்கும் மருத்துவ வசதி, இயலாதவருக்கு சமூக ஆதரவு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுள்ள சமூகமாக தமிழகம் உலகுக்கே வழி காட்டுகிறது.
இதெல்லாம் நடக்க முடியுமா?
முடியும்.

யார் செய்வார்கள்?
நாம் எல்லோரும் சேர்ந்துதான்.

எப்படி?

மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி

English Version

சென்னை லினக்சு பயனர் குழு என்ற மடற்குழு ஒன்று இயங்கி வருகிறது. "ILUG-C" என்ற மின்னஞ்சலில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் குழுவில் நடக்கும் மடற்பரிமாற்றங்கள் நமக்கும் வந்து சேரும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடற்குழுவில் உரையாடல்கள் கொஞ்சம் தூங்கி வடிந்து கொண்டு இருக்கும். எப்போதாவது வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு நான்கைந்து முறை மடல்கள்பரிமாறிக் கொள்ளப்படும். மாதா மாதம் நேரடி சந்திப்பு ஏற்பாடு செய்வார்கள். அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் சிலர் ஆர்வமாகக் கலந்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

இன்றைக்கு மடற்குழுவில் ஒரு நாளைக்கு சராசரியாக 20முதல் 30 மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பல்வேறு கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு திட்டப்பணி, வேலை வாய்ப்புகள், தொழில் நுட்ப ஐயங்கள் குறித்து கேள்விகள் கேட்க பதில் சொல்லவும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்று கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு தளங்கள் எல்ல இடங்களிலும் லினக்சு, பிஎச்பி, மைஎஸ்கியூஎல் என்ற திறவூற்று மென்பொருட்கள் (open source software) வளமையான பெயர்களாகிப் போய் விட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருந்த இவை மைய நிலைக்கு வந்து விட்டதன் பின்னணி என்ன? என்னதான் நடந்தது? நடக்கிறது? இனிவரும் ஆண்டுகளில் என்னென்ன மாறப் போகிறது?

'தனிமனிதர்களால் என்ன சாதிக்க முடியும்? பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்கள் திட்டமிட்டு செயல்படும் போது தனி மனிதர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தவிர என்ன செய்து விட முடியும்' என்று சலித்து விடாமல் ஒரு தனிமனிதர் ஆரம்பித்த இயக்கத்தின் விளைவுதான் மென்பொருள் துறையில் நாம் பார்க்கும் இந்தப் புரட்சி.

கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில், ஒருவர் கற்றுக் கொண்டதை, ஒருவர் உருவாக்கியதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டால், இரண்டு பேருக்கும் நன்மை. அறிவுச் செல்வம் மட்டும் பகிர்ந்து கொள்வதால் குறைவதில்லை. இரண்டு பேர் தத்தமது கருத்துக்களை, ஆக்கங்களை பகிர்ந்து கொண்டால் இரண்டு பேருக்கும் இரண்டும் கிடைத்திருக்கும். புதிய கருத்துக்களை பெற்றவர் அதன் அடிப்படையில் சிந்தித்து அடுத்தடுத்த மேம்பாடுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.

பல நூற்றாண்டுகளாக அறிவியலில் முன்னேற்றங்கள் அப்படித்தான் ஏற்பட்டு வந்தன. ஒரு அறிவியலாளர் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை அலசி ஆராய்ந்து மற்றவர்கள் ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு அடுத்து வருபவர் அந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த மேம்பாடுகளை முயற்சிக்க முடியும். ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளை மூடி வைத்துக் கொண்டால் கடந்து நான்கு நூற்றாண்டுகளின் அறிவியல் முன்னேற்றம் சாத்தியமாகியிருக்காது.

கணினிகளின் தோற்றத்துடன் கணினிகளை இயக்கும் மென்பொருள் துறையும் உருவானது. மென்பொருள் நிரல் எழுதுவது மனிதர் படித்துப் புரிந்து கொள்ள முடியும் மொழியில், a முதல் z வரையிலான எழுத்துக்கள், 0 முதல் 9 வரையிலான எண்கள், சில குறியீடுகளைப் பயன்படுத்தி நடக்கிறது. C, C++, Java, C# என்று பல கணினி மொழிகளிலும் நிரலாளர் எழுதும் செயலிகளின் அடிப்படை வடிவம் source code அல்லது மூலநிரல் எனப்படும் இந்த உரை வடிவம்தான்.

கணினியில் இயக்கும் முன்பு இந்த மூலநிரலை கணினி புரிந்து கொள்ளும் இரும மொழிக்கு மாற்றி ஒரு binary அல்லது இருமம் உருவாக்க வேண்டும். இந்த இரும வடிவக் கோப்பில் இருக்கும் கட்டளைகளை கணினி மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாத ஒன்று இரும வடிவக் கோப்பு. செயலியில் ஏதாவது மாற்றம் அல்லது பிழை திருத்தம் செய்ய வேண்டுமானால் மூலநிரல் கோப்பில் மாற்றங்களை செய்து மீண்டும் தொகுத்து (compile) இரும வடிவ கோப்பை உருவாக்கி பயனருக்குக் கொடுக்க வேண்டும்.

நிரல் எழுதும் மென்பொருள் நிரலாளருக்கும் செயலியைப் பயன்படுத்தும் பயனருக்கும் நடுவில் இடைத்தரகராக ஒரு வணிக துறை உருவாக்கும் முயற்சி 1970களின் இறுதியில் ஆரம்பித்து 1980களில் பெருமளவு வெற்றி பெற்று விட்டிருந்தது. நிரலாளரிடமிருந்து மூலநிரலை எடுத்து, அதன் இரும வடிவை மட்டும் பயனருக்கு விற்கும் வணிக முறை நடைமுறைக்கு வந்தது. பயனர் கிடைத்த இருமத்தை இயக்கிப் பயன்படுத்தலாம், ஏதாவது மாற்றம் அல்லது திருத்தம் தேவைப்பட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. மூலநிரலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனம் மனம் வைத்தால் ஒழிய இவரது கதை கந்தல்தான்.

இந்தப் பின்னணியில், வணிக நிறுவனங்களின் கிடுக்கிப்பிடியில் சிறைபட்டுக் கிடந்த மென்பொருள் நிரல்களை விடுதலை செய்ய ஆரம்பித்த இயக்கம்தான் திறவூற்று மென்பொருள் இயக்கமும் அதன் விளைவான லினக்சு இயங்குதளம் சார்ந்த மென்பொருள்களும்.

1. ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்பவர் 1980களில் அமெரிக்காவின் எம்ஐடி கல்லூரியில் மென்பொருள் நிரலாளராக (software programmer) பணியாற்றி வந்தார். மேலே சொன்ன மென்பொருள் வணிகமயமாக்கலை அவர் தீவிரமாக எதிர்த்தார். அந்தக் காலத்தில் அடித்து வந்த அந்த ஆழிப்பேரலையில் அவரது குரல் எடுபடாமல் போய் விட்டது. ஆனால் அதற்காக ஓய்ந்து நின்று விடவில்லை.

1983ல் 70களில் பெரிதும் பயன்பட்டு வந்த யுனிக்சு இயங்குதளத்துக்கு முற்றிலும் திறவூற்று முறையில் ஒரு மாற்று இயங்குதளத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து GNU எனப்படும் குனு திட்டப்பணியை ஆரம்பித்தார், 1985ல் Free Software Foundation (பரிநிரல் அறக்கட்டளை) என்ற நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்.

'மென்பொருளை விடுதலை செய்வோம்' என்ற போர்க் குரலுடன் கடந்த 25 ஆண்டுகளாக தனது கொள்கையில் உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது நாம் பார்க்கும் திறவூற்று மென்பொருள் துறையின் அடித்தளத்தை ஏற்படுத்தி அதன் மூளையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட் ஸ்டால்மேன்.

2. GNU GPL என்ற உரிம ஆவணத்தின்படி தனது மென்பொருள் ஆக்கங்களை வெளியிட்டதோடு மற்றவர்களையும் அதே உரிமத்தைப் பயன்படுத்தும் படி பிரச்சாரம் செய்கிறார் ஸ்டால்மேன். இந்த உரிமத்தின் கீழ் கிடைக்கும் மென்பொருட்கள் இரும வடிவக் கோப்பாக மட்டுமில்லாமல் கூடவே மூல நிரல் கோப்பும் சேர்த்து வருகின்றன.

வாங்குபவர் அதை எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், தனக்குத் தேவையான படி, பிடித்தபடி மூலநிரலை மாற்றி செயலி உருவாக்கிக் கொள்ளலாம், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது விலைக்குக் கூட விற்கலாம். ஒரே ஒரு நிபந்தனை: அடுத்தவர்களுக்கு இந்த மென்பொருளைக் கொடுக்கும் போதும் தனக்குக் கிடைத்த இந்த எல்லா உரிமைகளையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

3. 1991ல் அப்போது 32 வயதான பின்லாந்து மென்பொருள் வல்லுனர் லினஸ் டோர்வால்ட்ஸ் என்பவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தனக்குப் புதிதாகக் கிடைத்த இன்டெல் 386 IBM பயனர் கணினியை இயக்குவதற்காக அவர் எழுதிப் பார்த்த இயங்குதளத்துக்கு செல்லமாக வைத்த பெயர் லினக்சு. அப்படி எழுதிய இயங்குதளத்தின் மூலநிரலை பூட்டி வைக்காமல் இணையத்தில் எல்லோரும் தகவிறக்கி பயன்படுத்தும் வண்ணம் வெளியிடும் போடும் பரிநிரல் அறக்கட்டளையின் GPL உரிமத்தின் கீழ் வெளியிட்டார்.

அதை யார் வேண்டுமானாலும் தகவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம், நகல் செய்து நண்பர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம், தமக்குத் தேவையான அல்லது விருப்பமான மாற்றங்களை செய்து பயன்படுத்தலாம், அல்லது மற்றவர்களுக்கு வினியோகிக்கலாம். தமக்குக் கிடைத்த உரிமைகளை மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி வினியோகிக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனை.

1991 ஆகஸ்டு 25ல் இதைக்குறித்து அவர் அனுப்பிய அறிவிப்பிற்குப் பிறகு மென்பொருள் துறையின் தலைவிதி மொத்தமாகவே திருப்பிப் போடப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அன்று முதல் இப்போது வரை லினக்சு இயங்குதளத்தின் kernel உருவாக்கத்தை வழிநடத்தி வருகிறார் லினஸ் தோர்வால்ட்ஸ்.

4. இந்த வரிசையில் அடுத்துக் குறிப்படப் பட வேண்டியது ரெட்ஹாட் என்னும் நிறுவனம்.

லினக்சு இயங்குதள kernel உடன், பரிநிரல் அறக்கட்டளையின் நிரல் தொகுப்புகளையும், மென்பொருள் கருவிகளையும் பொதிந்து பயனர்க்கு எளிதாக பயன்படும் வண்ணம் கொடுப்பவர்கள் லினக்சு தொகுப்பாளர்கள் (Linux distributions). மேலே சொன்ன எல்லா மென்பொருள் நிரலிகளின் உரிமத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். இன்றைக்கு நூற்றுக்கணக்கான அத்தகைய தொகுப்புகள் கிடைக்கின்றன.

லினக்சை வணிக ரீதியாக வெற்றிகரமாக நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு பெரு வெற்றி பெற்றவர்களில் முன்னோடி ரெட்ஹாட் நிறுவனம். 1994ல் ரெட்ஹாட் 1.0 என்று ஆரம்பித்த அவர்களது சேவை 15 ஆண்டுகளில் வேர் விட்டு தளைத்து வளர்ந்து கடந்த ஆண்டில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகம் வருமானம் பார்த்த தொழிலாக மாறியிருக்கிறது.

5. லினக்சு முதலான திறவூற்று மென்பொருள்கள் தளைத்து வளர்வதற்கு செழிப்பான சூழலை உருவாக்கித் தந்தது இணையம். ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலே இணையத்தின் மூலம் கூட்டாகப் பணியாற்றுவதுதான் திறவூற்று மென்பொருட்களின் வளர்ச்சிக்கு பணிமுறை. திறவூற்று மென்பொருளை பயன்படுத்த அதில் தமது வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த இணையத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூலநிரல் பட்டறை என்று பொருள்படும் இந்த இணையத் தளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான திறவூற்று மென்பொருள் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் மென்பொருள் நிரலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
கூட்டாகச் சேர்ந்து மென்பொருள் உருவாக்கத் தேவைப்படும் கருவிகளான மூலநிரல் மேலாண்மை, மடற்குழு, இணையத் தளத்துக்கான கட்டமைப்பு போன்றவற்றை இலவசமாக வழங்குகிறது sourceforge.net

திறவூற்று மென்பொருள் உலகத்தில் என்ன நடக்கிறது, இன்றைய சேதி என்ன, அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அலசி ஆராய்ந்து விவாதிப்பதற்காக உருவான தளம் இது. 1997ல் ராப் மால்டா என்ற அமெரிக்க மாணவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில் சூடான சுவையான கருத்துச் செறிந்த விவாதங்களை படிக்கலாம்.

இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை பிரிவு.

5. 1998 ஜனவரியில் மைக்ரோசாப்டின் போட்டியால் மோசமாக பாதிக்கப்பட்ட நெட்ஸ்கேப் நிறுவனம் வையவிரிவுவலையை சாதித்துக் காட்டிய தனது நெட்ஸ்கேப் உலாவியின் மூலநிரலை திறவூற்றாக வெளியிட்டது. அந்த சாம்பலிலிருந்து உருவான மோசில்லா திட்டமும் அதன் குழந்தையான பயர்பாக்சு உலாவியும் திறவூற்று மென்பொருள் இயக்கத்தின் முன்னணி செயலிகளாக விளங்குகின்றன.

6. 2001ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் திறவூற்று மென்பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக ஒரு ஆண்டில் 1 பில்லியன் டாலர் (நாலாயிரம் கோடி ரூபாய்) செலவழிப்பதாக அறிவித்து செய்து காட்டியது. சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்பி என்று மென்பொருள் துறையின் பெருந்தலைகளும் ஒவ்வொருவராக தமது திறவூற்று திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டி வந்தது.

7. இப்போது திறவூற்று மென்பொருளாக என்னென்ன கிடைக்கின்றன?

  • இயங்குதளங்கள் - லினக்சு, ஓப்பன் சோலாரிசு, பிஎஸ்டி பதிப்புகள் (Linux, Open Solaris, BSD variants)
  • அலுவலக கருவிகள் - ஓப்பன் ஆபிசு, அபிவேர்டு, Kஆபிசு (Open Office, Abiword, KOffice)
  • உலாவிகள் - மோசில்லா பயர்பாக்சு, கூகுள் குரோம் (Mozilla Firefox, Google Chrome)
  • தரவுத்தளங்கள் - போஸ்ப்கிரெஸ்கியூஎல், மைஎஸ்கியூஎல் (PostgreSQL, MySQL, SQLite)
  • இணைய வழங்கி - அப்பச்சே (apache httpd0
  • படங்கள் வரைய - ஜிம்ப் (GIMP)
8. இன்னும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செயலிகள் திறவூற்று முறையில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படவும், தொடர்ந்து மேம்படுத்தப்படவும் செய்யப்படுகின்றன. அப்படி என்னென்ன கிடைக்கின்றன என்பதற்கு சிரமப்பட்டுத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏதாவது ஒரு லினக்சு பொதிக் குவியலின் அடர்தகடு ஒன்றை வாங்கி கணினியில் நிறுவிக் கொண்டால் போதும்

லினக்சு பொதிதொகுப்புகள் (Linux Distributions)
1. Fedora Linux (RedHad)
2. Debian
3. Open SuSe (Novell Suse)
4. Ubuntu (Debian based)
5. Slackware
6. Mandriva
7. PCLinux OS
8. CentOS
இன்னும் பல.

9. தமிழும் திறவூற்று மென்பொருட்களும்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளையும் சேர்ந்த தன்னார்வலர்களால் இயக்கப்படும் திறவூற்று மென்பொருட்களில் பன்மொழி வசதிகள் இயல்பாகவே செய்யப்பட்டன. லினக்சின் மேசை சூழலான கேடிஈ நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. தமிழ் மொழி 1990களின் இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வெளியாலும் எல்லா லினக்சு தொகுப்பு சேவைகளிலும் செயல்படுத்தப்படும்படியாக கிடைக்கிறது.

உலகெங்கிலும் பரவியிருக்கும் ஈழம், தமிழ்நாடு, சிங்கப்பூர் முதலான பகுதிகளைச் சார்ந்த தமிழர்களின் பணிக்கொடைகளால் திறவூற்று மென்பொருட்களில் தமிழ்மொழியும் தனக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

10. கட்டமைப்புகள் (சாலைகள், துறைமுகங்கள், ரயில்பாதைகள்) பொதுச்சொத்தாக இருக்கும் போது, தனிமனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தி சமூகத்துக்குப் பலனளிக்கும் வணிகமுயற்சிகளை மேற்கொள்ள முடியும். கட்டமைப்புகளையே கட்டிப் போட்டு விடக் கூடாது என்ற உயரிய நோக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் புரட்சி தமிழ்நாட்டு மாணவர்களுக்கிடையேயும் இன்னும் பரவி வளமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும் என்று நம்பிக்கையுடன் முன்னுரைக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/File:Rms_ifi_large.jpg
http://en.wikipedia.org/wiki/File:Linus_Torvalds.jpeg

மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம் ? - 2

மைக்ரோசாப்டு யாஹூவை வாங்க முயற்சிப்பதை விட, SAP வாங்க முயற்சி செய்யலாம் என்று ஒரு கட்டுரை குறித்து ஸ்லாஷ் டாட்டில் விவாதம். 'கூகிள் மைக்ரோசாப்டுக்கு போட்டியே இல்லை. கூகிளின் பயன்பாடுகள் பெரிய நிறுவனங்களுக்குள் நுழையவே இல்லை. நிறுவன சந்தையில் மைக்ரோசாப்டின் பிடி இன்னும் உறுதியாக SAP உதவியாக இருக்கும்' என்று கருத்துக்கள்.

1990களின் ஆரம்பத்தில் மைக்ரோசாப்டு இன்றைய கூகிள் போலவும், ஐபிஎம் இன்றைய மைக்ரோசாப்டு போலவும் இருந்தன. மைக்ரோசாப்டுக்கு நிறுவனங்களுக்குள் பிடி கிடையாது. அவர்கள் தமது தொழிலை வளர்த்தது தனி பயனர்களுக்கு இயங்கு தளமும், அலுவலக பயன்பாடுகளையும் விற்பதன் மூலம்தான். அப்படி மனங்களைப் பிடித்து அதன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கான சந்தையில் நுழைந்து 1990களின் இறுதி ஆண்டுகளில் அந்தப் பிடியை இறுக்கிக் கொண்டார்கள்.

'கூகிளிடம் இணைய தேடு வசதியைத் தவிர பெரிதாக எதுவுமில்லை' என்கிறார்கள். 'கூகிள் பயன்பாடுகள் என்று இணையம் சார்ந்த பயன்பாடுகள் எதுவும் பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவதில்லை' என்கிறார்கள்.

ஆனால் கூகிள் பயன்பாடுகள் மூலம் தமது மின்னஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் இரண்டு நிறுவனங்கள் எனக்கே தெரியும். புதிதாக இணைய மின்னஞ்சல் ஆரம்பிப்பவர்களுக்கு ஜிமெயில்தான் இயல்பாகக் கிடைக்கிறது. வீட்டில் அப்பாவுக்கு இணைய இணைப்பு வந்ததும், கணினி சேவை அளிப்பவர் ஒரு ஜிமெயில் கணக்குதான் ஆரம்பித்துக் கொடுத்திருக்கிறார்.

ஜிமெயிலில் ஒரு இணைப்பு வந்தால், அதை 'கூகிள் ஆவணங்கள் பயன்பாட்டில் திறக்கவா' என்று கேட்கிறது. இன்றைக்கு அந்தப் பயன்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லா விட்டாலும், ஒரு நாளைக்கு ஒரு மேம்பாடு என்று நகர்ந்து கொண்டே இருந்தால் ஒவ்வொருவாராக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒரு நல்ல நாளில் அந்த எண்ணிக்கை தேவையான அளவைத் தாண்டி கிரிடிகல் மாஸ் பெற்று விடும்.

இதை மைக்ரோசாப்டு மேலாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இப்படியான ஒரு நிலவரத்தின் மூலம் பலன் பெற்று வளர்ந்தவர்கள். இது போன்ற நடைமுறைகளை நன்றாகவே அடையாளம் கண்டு கொள்ள முடியும். கூகிள் அப்படி வளர்ந்து விடக் கூடாதே என்றுதான் முயற்சிக்கிறார்கள்.

நிறுவனச் சந்தை தனிநபர் சந்தைக்கு சில ஆண்டுகள் பின்தங்கி வரும். நிறுவனங்களில் பணி புரிபவர்கள் முடிவெடுப்பவர்கள் எல்லோருமே முதலில் தனிநபர்கள்தான். அவர்களின் மனதைக் கவர்ந்து விட்டால், இன்று இல்லா விட்டால் ஒரு நாள் நிறுவனத்தின் முடிவுகள் நமக்குச் சாதகமாகத் திரும்பி விடும்.

அதுதான் மைக்ரோசாப்டின் வெற்றிப் பாதை, அதில் கூகிள் இப்போது நடை போடுகிறது.

மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம்?

மைக்ரோசாப்டு - யாஹூ பற்றிய செய்தி அலசல்களை மேலும் படித்துக் கொண்டிருந்தேன்.

எந்த கோணத்தில் பார்த்தாலும் மைக்ரோசாப்டின் கழுத்தில் கல்லைக் கட்டி தண்ணீரில் நீந்த விடுவது போலத்தான் படுகிறது. கல்லும், ஆளும் சேர்ந்து மூழ்குவதுதான் நடக்கும். மைக்ரோசாப்டு அப்படி மூழ்கிப் போகும் நேரத்தை இத்தனை ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும். யாஹூ என்ற நிறுவனமும் சேர்ந்து சீரழிவதுதான் வருத்தமாக இருக்கும்.

இந்த செலவு இல்லா விட்டால் வேறு ஏதாவது செய்து மைக்ரோசாப்டு தனக்குத் தானே குழி பறித்தலை வெற்றிகரமாகச் செய்து விடும் என்றுதான் தோன்றுகிறது. பில்கேட்ஸ் இருந்த வரை நிலவிய நடைமுறை புத்திசாலித்தனம் பால்மரின் கீழ் முற்றிலும் மறைந்து விட்டது. அல்லது இப்படிப்பட்ட சூழல்கள் தோன்றும் என்பதை உணர்ந்துதான் பில்கேட்ஸ் பாராசூட்டுடன் குதித்து விட்டாரோ? மைக்கேல் டெல் நிறுவனத்தை விட்டு விலகி சில ஆண்டுகளுக்குப் பிறகு திரும்ப வந்தது போல இவரும் மைக்ரோசாப்டை காப்பாற்றப் போவதாக ஓரிரு ஆண்டுகளில் திரும்பவும் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

மைக்ரோசாப்டு மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை என்று ஆறேழு ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறேன். புதிய கணினி வாங்கினால் இயங்குதளம் இல்லாமலேயே வாங்குவது, மென்பொருள் பயன்பாடுகள் அனைத்துமே திறமூல மென்பொருடகள் மூலம் பயன்படுத்துவது. நிறுவனத்திலும் முற்றிலும் மைக்ரோசாப்டு அல்லாத பயன்பாடுகளை மட்டுமே பயன்படுத்துவது என்று செய்ய முடிந்தது

2000, 2001 ஆண்டுகள் மைக்ரோசாப்டின் உச்சக் கட்ட பருவம். அப்போது மைக்ரோசாப்டு மென்பொருளை புறக்கணிப்பது பைத்தியக்காரத்தனம் என்று பலர் பேசிக் கொண்டார்கள். விபி மூலம் மென்பொருள் செய்வதுதான் புத்திசாலித்தனம், இணைய உலாவியை இடைமுகமாக வைத்து எப்படி நிறுவனத்தில் மென்பொருள் பயன்படுத்த முடியும் என்று பல கேள்விகள்.

ஐந்து ஆண்டுகளின் தெளிவுகள் நான் சேர்ந்து கொண்ட தரப்பிற்கு சாதகமாகவே ஏற்பட்டன. இயங்கு தளங்களில் லினக்சு, வலை உலாவிகளில் ஃபயர்பாக்சு, பயன்பாடுகளில் இணையம் மூலம் வழங்கப்படும் கூகிள், ஜிமெயில், யாஹூவின் சேவைகள் என்று மிகச் சாதகமான மாற்றங்கள்.

மைக்ரோசாப்டு இணைய உலகை கண்டு கொள்ளாமல் விட்ட ஆரம்ப காலங்களுக்குப் பரிகாரமாக ஹாட்மெயில் நிறுவனத்தை வாங்கிக் கொண்டார்கள். அத்தோடு ஹாட் மெயில் கணக்கை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டேன். அவர்களது சேவை போகப் போக நலிந்து கொண்டே போய் ஜிமெயிலும் யாஹூவும் பிரபலமாகிக் கொண்டிருந்தன.

2002ல் டாட் நெட் என்று பின்னொட்டுடன் பல சேவைகள், மைக்ரோசாப்டு பாஸ்போர்ட் என்று ஒரு சேவை, விண்டோஸ் லைவ் என்ற அண்மைய முயற்சி என்று பணத்தையும் முயற்சிகளையும் அள்ளி இறைத்து அறிமுகப்படுத்தியவை எதுவும் எதிர்பார்த்தபடி கூகிள், யாஹூவை எதிர்கொள்ள முடியவில்லை.

பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்டு முற்றுரிமை ஆதாயங்களினால் சேர்ந்து விட்ட பல்லாயிரம் கோடி டாலர்கள் கைவசம் இருந்தது கரைந்து கொண்டே போகிறது. இப்போது யாஹூவை வாங்குவதோடு அந்தப் பணம் முழுவதும் தீர்ந்து விடும்.

வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த ஹாட்மெயிலை வாங்கி சரிவர பயன்படுத்தத் தெரியாமல் அதன் வாடிக்கையாளர்களை இழந்து விட்ட மைக்ரோசாப்டு யாஹூவை வாங்குவதன் மூலம் எப்படி தம்மை மாற்றிக் கொள்ளப் போகிறார்கள்? இயங்கு தளத்தையும் அலுவலக மென்பொருட்களையும் விற்று சம்பாதிக்க வேண்டும் என்ற தொழில் முறையிலிருந்து இன்னும் மாறவில்லை அந்த நிறுவனம். இணைய வழிச் சேவை என்பதற்கு மாறுபட்ட மனநிலையும் குறிக்கோள்களும் இருக்க வேண்டும். அது அவ்வளவு பெரிய நிறுவனத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.

விண்டோசு எக்ஸ்பியிக்குப் பிறகு ஆரம்பித்த சரிவின் வேகம் இப்போது அதிகரித்திருக்கிறது. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று கையில் சேர்த்து வைத்துக் கொண்ட வளங்களைப் பயன்படுத்தி கட்டுகளை அறுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அடிப்படையில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தினால் ஒழிய, தலைமைப் பொறுப்பில் இருக்கும் குழுவை ஒட்டுமொத்தமாக மாற்றினால் ஒழிய மைக்ரோசாப்டு இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமல் போய் விடும்.

இயங்குதளம் மற்றும் அலுவலக மென்பொருள் சந்தைகளில் மைக்ரோசாப்டின் தொடர்ந்த வருமானங்கள் மேலே சொன்ன மாற்றங்களை செய்ய முடியாமல் ஆக்கி விடும். ஒவ்வொரு காலாண்டிலும் நல்ல ஆதாயம் காட்ட முடியும் வரை பங்குதாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள். அந்த ஆதாயங்களின் அடிப்படை 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிக்கத்தின் தொடர்ச்சி, அந்த ஆதிக்கம் சிறிது சிறிதாக அரிபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவு அடித்தளம் அரித்து விட்ட பிறகு ஒரு சில வாரங்களிலேயே வேர்கள் அரிக்கப்பட்ட மரம் போல சரிந்து போகும் போதுதான் விழித்துக் கொள்வார்கள். அதற்குள் காலம் கடந்திருக்கும்.

லினக்சு தமிழாக்கம்

  • நான் லினக்சு பயன்படுத்துவதில்லையே!
  • எனக்கு தொழில் நுட்பம் தெரியாதே!
  • இதற்கு சிறப்புக் கருவிகள் தேவைப்படுமோ?
  • பிற வேலைகளுக்கிடையே நேரம் இருக்காதே!

ஒருங்குறி (unicode) எழுத்துருக்கள் நிறுவப்பட்டு, தமிழில் தட்டச்சிட முடியும் கணினி பயன்படுத்துபவர் யாரும் இந்தப் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.

உங்கள் விருப்பப்படி வசதிப் படி, வாரத்துக்கு ஒரு மணி நேரம் செலவளித்தால் கூட போதும்.

உங்களுக்குப் பிடித்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி ஆர்வத்தைத் தெரிவித்தால், ஒரு உரைக்கோப்பு (text file) அனுப்பி வைப்பார்கள்.

அதை poedit என்ற உரைத் தொகுப்பியைப் (text editor) பயன்படுத்தி விண்டோசு கணினிகளிலும், KBabel என்ற மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி லினக்சு கணினிகளிலும் மொழி பெயர்க்கலாம்.

சாளரத்தின் மேற்பகுதியில் ஆங்கில சொல் வரும், கீழ் பகுதியில் தமிழ்ச் சொல்லை உள்ளிட்டால் வேலை முடிந்தது.

இது போல ஒவ்வொரு கோப்பிலும் நூற்றுக் கணக்கான சொற்றொடர்கள் இருக்கலாம். முடிந்தவற்றை மொழி மாற்றி கோப்பை சேமித்து ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி விட்டால்
  • உங்கள் பங்களிப்பு ஆரம்பித்து விட்டது
  • உங்களால் மொழி மாற்றம் செய்யப்பட்ட சொற்கள் பல்லாயிரக் கணக்கான கணினிகளுக்குப் போய்ச் சேர்ந்து பயன்படுத்தப்படும்.
  • மொழிபெயர்த்தவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் சேர்ந்து கொள்ளும்.
  • சில கோடி தமிழர்களுக்கு கணினி உலகிற்கான பலகணியைத் திறக்கும்முயற்சியில் உங்கள் கையும் சேர்ந்து விட்டது.
லினக்சு கணினி பயன்படுத்த வாய்ப்புக் கிடைத்தால் உங்கள் கைவண்ணத்தை நீங்களே பயன்படுத்தி மகிழலாம்.

யாரைத் தொடர்பு கொள்வது?

தமிழ்க் கணிமை - நிலைமை

சொன்னது போல பல முயற்சிகள் நடந்து வந்தாலும் கணினிகளும், அவற்றின் மூலம் கிடைக்கப் பெறும் இணைய உறவுகளும் பெரும்பான்மை தமிழருக்கு எட்டாக் கனிகளாகவே இருக்கின்றன.

ஆங்கிலம் தெரிந்த படித்த ஒருவர் கணினி வாங்கி, தனது தமிழ் பற்றைக் காட்ட, தமிழ் தாகத்தைத் தணித்துக் கொள்ள எழுத்துருக்களையும் (fonts), உள்ளீட்டு கருவிகளையும் (input tools), இடைமுகங்களையும் (interfaces) தனது கருவியில் நிறுவிக் கொண்டு மகிழ்வதற்கு இதுவரை செய்த தன்னார்வலர் பணிகள் வழி வகுத்திருக்கின்றன.

ஆங்கில புலமை இல்லாத தமிழ மட்டுமே பேச, எழுத, படிக்க முடியும் ஒருவர் தனது தொழிலுக்காக, வணிகத்துக்காக, பிற பணிகளுக்காக கணினி வாங்கத் துணியும் அளவுக்குக் கருவிகள் இல்லை.

கடைக்குப் போய் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து கணினி வாங்கினால்
  • நமக்குப் புரிந்த மொழியில் படிக்கலாம்
  • கருவிகளை இயக்கிப் பாட்டுக் கேட்கலாம்,
  • இணையத்தில் இணைந்து படம் பார்க்கலாம்,
  • உலகின் மூலைகளில் எல்லாம் உள்ள தமிழ் மக்களுடன் கருத்துப் பரிமாறலாம்,
  • பொருளாதாரப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம்

    என்று வருவதற்கு இன்னும் கொஞ்சம் வேலை மீதியிருக்கிறது.
அப்படி ஒரு பொருள் கடைகளில் கிடைத்தால் இன்றைக்கு பரவலாக செல் பேசிகள் பயன்படுத்தப்படுவது போலக் கணினிகளும் வாங்கப்படும் என்பதில் சந்தேகம் தேவையில்லை. பயன்படுத்த தோதுவாக, அதனால் பலன் விளைவதாக, அதனால் பிள்ளைகளுக்கு முன்னேற வழி உள்ளது என்று இருந்தால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் கணினி வாங்குவார்கள்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?
  1. மேசை இடைமுகங்கள் கேடீயி, ஜினோம், வலை உலாவி மோசில்லா, அலுவலக மென்பொருள் ஓப்பன் ஆபிசு, லினக்சு பொதிகள் ஃபெடோரா, சுசே, உபுண்டு போன்றவற்றின் இடைமுகங்களை தமிழுக்கு மாற்ற தொடர்ந்து பணி நடக்க வேண்டும்.
    ஏற்கனவே தேவையான திட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில தன்னார்வலர்களால் அவர்களால் முடிந்த வேலை நடந்து வருகிறது. இன்னும் பல கைகள் தேவை.

  2. கணினி பயன்படுத்துவது, அதன் பயன்பாடுகள் குறித்த தரமான, எளிதாகப் புரியும் வண்ணம் கையேடுகள், உதவிக் குறிப்புகள், புத்தகங்கள் மாணவர்களுக்குப் பாடப் புத்தகமாக இல்லாமல், பயனருக்கு என்று தமிழில் எழுதப்பட வேண்டும்.
    நல்ல எழுதும் திறமை படைத்தவர்கள், தொழில் நுட்பப் புலமையும் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய முடிகிற வேலை.

  3. இப்படி மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கும் லினக்சு பொதிகளைக் கணினியில் நிறுவி பரவலாக விற்பனை செய்து, விற்பனைக்குப் பிறகான சேவை வழங்க தொழில் முனைவர்கள். கச்சிதமான திட்டமிடலும், திறமான மேலாண்டமை திறமையும் கொண்டவர்களால் மட்டுமே முடிவது.
எனக்கு விருப்பம் இருக்கிறது. எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

தமிழ்க் கணிமை - சாத்தியங்கள்

கடைக்குப் போய்க் கணினி (computer) வாங்க வேண்டும். பையன் படிப்பதற்கு கணினி வாங்கிக் கொடுத்தால் அவன் வாழ்க்கையில் முன்னேறலாம்.
  • அம்மாவும், அப்பாவும் செய்யும் வேலைக்குக் கணினி பயன்படுமா?
மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து கணினியில் அமர்ந்து, இணையத்தில் இணைந்து தமிழில் வலைப்பதிவுகள் போடுகிறோம்.
  • கடலில் மீன் பிடிக்கப் போகும் தமிழகக் கடலோர மீனவர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உதவிகள் பெற முடியுமா?
பயணத்துக்கு, பணிக்குத் தேவையான விபரங்களை கூகிளாண்டவர் துணையுடன் தேடிப் பிடித்துக் கொள்கிறோம்.
  • பயிரிடும் விவசாயி ஒருவர் இணையத்தை (internet) அணுகி தனக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியுமா?

கணினியைப் பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவை தமிழர்களில் பெரும்பாலானோரை நவீன முன்னேற்றங்களின் சாத்தியங்களிலிருந்து ஒதுக்கி விட்டிருக்கிறது. வேறு காரணங்களும் இருந்தாலும், மொழி புரியாமல் இருப்பது முதன்மை தடையாக இருந்து வருகிறது.

நமது சமூகத்தின் சிறுபான்மையினர் மட்டுமே குழாய் சட்டை போட்டுக் கொண்டு, குளிரூட்டப்பட்ட அறைகளில், அமெரிக்கர்களுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருட்களைப் (software) பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலை மாறி, ஆறு கோடி தமிழர்களில் விருப்பம் உள்ள யாரும் எளிதாக தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் நிலைமை உருவாக வேண்டாமா?

இதற்கான விதை பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. இன்றைக்கு உலகின் எந்த சமூகமும் தனது மொழியில், தமது சூழலுக்கு பொருத்தமான வகையில் கணினி இடைமுகம் (user interface) உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் உள்ளன. அவற்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் இருக்கிறது.

பரிநிரல் (Free Software) முறையில் கடந்த இருபது ஆணடுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு வரும் பல மென்பொருட்களை நமது மொழிக்கு மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பு பல ஆண்டுகளாகவே இருக்கிறது.

1990களின் பிற்பகுதிகளில் ஆரம்பித்து பல நாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்களின் (volunteers) முயற்சியால் கேடீயீ, ஜினோம், ஓப்பன் ஆபிசு, மோசில்லா ஃபயர்ஃபாக்சு போன்ற மென்பொருள் பயன்பாடுகளைத் (software applications) தமிழில் மொழி பெயர்க்கும் வேலை நடந்து வருகிறது.

இந்த முயற்சிகளால் இன்றைக்கு வெளிவரும் லினக்சு பொதிகளில் எல்லாம் (Linux Distributions) தமிழ் இடைமுகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தமிழ் பெயர்களில், தலைப்புகளில் பயன்பாடுகளை ஓட்டிக் கொள்ள முடிகிறது. தமிழ் தட்டச்சுக் கருவிகளின் மூலம் தமிழில் எழுதவும் முடிகிறது.

ஆனால், இன்னும் வெகு தூரம் போக வேண்டியிருக்கிறது.

லினக்சின் ஆரம்பம்

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவின் மின்னணு நிறுவனங்களும் பல்கலை மின்னணுத் துறைகளும் இணைந்து மல்டிக்ஸ் என்று கணினி இயங்கு தளம் உருவாக்கும் திட்டத்தில் இறங்கினார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இது வேலைக்கு ஆகாது என்று கைவிட்டு குழுவில் இருந்தவர்கள் தத்தமது நிறுவனத்துக்குப் போய் விட்டார்கள்.

பெல் ஆய்வகத்தில் வேலை பார்த்த டென்னிஸ் ரிச்சியும் கென் தாம்சனும் அவரது நண்பரும், மல்டிக்சை கிண்டல் செய்யும் விதம் யுனிக்சு என்று பெயர் சூட்டி தமது படைப்பை வெளியிட்டார்கள்.

யூனிக்ஸ் எதிர்பாராத விதமாக பிரபலமடைந்து வணிக உலகிலும் நுழைந்தது. பெரிய கணினிகள் செய்து விற்கும் நிறுவனங்கள் யுனிக்ஸ் உரிமம் பெற்றுக் கொண்டு தமது கணினியுடன் இயங்குதளத்தை வழங்க ஆரம்பித்தன. பல ஆயிரம் டாலர்கள் கொடுத்து கணினி வாங்கினால் கூடவே இயங்கு தள உரிமமும், அதன் மூல நிரலும் சேர்ந்தே கிடைக்கும்.

பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களும் பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணினி வல்லுநர்களும் மட்டும்தான் இத்தகைய கணினிகளையும் கூட வரும் மென்பொருளையும் பயன்படுத்த முடிந்தது. சின்னக் கணினிகளில் பயன்படுத்த இயங்கு தளம் இல்லை.

1980களின் தொடக்கத்தில் ஐபிஎம்மின் தனிப் பயனர் கணினி வெளியானதும், அதற்கு இயங்கு தளம் எழுதி வழங்கிய மைக்ரோசாப்டு வளர்ந்து ஆதிக்க சக்தியாக உருவானதும் இன்னொரு கதை.
  • தனிப் பயனர் கணினிகளுக்கான எம்எஸ் தாஸ் இயங்குதள மென்பொருள் மூலநிரல் இல்லாமல் விற்கப்பட்டது.
  • வாங்குபவர்கள் கணினியை இயக்க மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதை மாற்றி அமைக்க முடியாது.
  • உரிமத்தின் மூலம் அதை நகல் செய்வது, பிறரிடம் பகிர்ந்து கொள்வது போன்ற உரிமைகள் கட்டுப்படுத்தப் பட்டன.
  • பள்ளி கல்லூரி மாணவர்கள் மென்பொருளைப் பற்றிக் கற்றுக் கொள்ள மூலநிரலைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது.
  • கணினியைப் பயன்படுத்தும் நிறுவனம் பழுது நீக்கவோ புது வசதிகளைச் செய்யவோ மென்பொருளை மாற்றியமைக்க முடியாது.
  • ஒரே நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் எல்லோரது தலைவிதியும்.
இது சரியான போக்கு இல்லை என்று ரிச்சர்டு ஸ்டால்மேன் என்ற பேராசிரியர்,
  • யூனிக்சு போன்று மூல நிரலுடன்
  • ஆனால் உரிமவிலை கொடுக்கத் தேவையில்லாது
  • எல்லோருக்கும் கிடைக்கும்
    கணினி மென்பொருள் தொகுப்பை உருவாக்க வேணடும் என்று திட்டமிட்டார்.
அதற்குத் தேவையான மென்பொருள் அடித்தளக் கருவிகளையும் கட்டமைப்புக் கருவிகளையும் எழுதும் பணியை ஆரம்பித்தார்.

அத்தகைய மென்பொருளை பிறருக்குக் கொடுக்கும் போது ஒரு புதுமையான உரிமத்தைப் பயன்படுத்தினார்.
  • 'இந்த மென்பொருள் மூல நிரலுடன் உங்களுக்குக் கிடைக்கிறது. இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மூல நிரலை மாற்றிக் கொள்ளலாம். எத்தனை கணினியில் வேண்டுமானாலும் நகல் செய்து கொள்ளலாம், எந்தத் தடையும் இல்லை'

  • 'இன்னும், உங்கள் நண்பர்களுக்கு, அல்லது வணிக முறையில் இதே மென்பொருளை அல்லது மேம்படுத்திய மென்பொருளை பகிர்ந்து கொள்ளலாம்.

  • ஒரே ஒரு நிபந்தனை. மற்றவர்களிடம் இந்த மென்பொருளையோ இதை மேம்படுத்தி உருவாக்கிய மென்பொருளையோ வினியோகிக்கும் போது, உங்களுக்கு என்னென்ன உரிமைகள் கிடைத்தனவோ அதே உரிமைகள் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்'.

    'அதாவது, அவர்களுக்கும் மூல நிரலும் அதை மாற்றி அமைக்கும் உரிமையும் கொடுக்கப்பட வேண்டும். கூடுதலாக எந்த நிபந்தனையும் விதிக்கக் கூடாது'
ஜெனரல் பப்ளிக் லைசன்சு - GPL (பொது மக்கள் உரிமம்) என்று அழைக்கப்படும் இந்த உரிமத்தின் மூலம் தனது படைப்பு பிறருக்குப் பயன்பட வெளியிட்டதோடு, பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டுக்குப் புத்துயிர் கொடுத்தார், ரிச்சர்ட் ஸ்டால்மான்.

1991ல் தனக்குப் பரிசாகக் கிடைத்த இன்டெல் 386 வகைக் கணினியில் பயன்படுத்த இயங்கு தள மென்பொருளை தானே எழுதிக் கொண்டார், அப்போது ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தில் முது கலை கணினிவியல் பயின்று கொண்டிருந்த லினஸ் டோர்வால்ட்ஸ்.

அதற்கு லினக்சு என்று பெயர் சூட்டி GPL உரிமத்துடன் இணையத்தில் வெளியிட்டார். அந்த உரிமம் கொடுத்த உரிமைகள், கடமைகளுடன் உலகின் பல பகுதிகளிலிருந்து கலந்து கொள்ளும் பல்லாயிரக் கணக்கான கணினி வல்லுநர்களின் கூட்டு முயற்சியால் லினக்சு பதினைந்து ஆண்டுகளில் பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.