வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

கமாண்ட் லைன் சுருக்கு முறைகள்

bash முனையத்தில் சில சுருக்க வழிகளை பயன்படுத்தலாம்

Alt+D - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லை வெட்டு

Alt+F - தற்போதைய இடத்திலிருந்து அடுத்த சொல்லுக்குச் செல்
Alt+B - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லுக்குச் செல்
Alt+T - தற்போதைய இடத்திலிருந்து முந்தைய சொல்லை தற்போதைய இடத்தைத் தாண்டி அனுப்பு

Alt+C - தற்போதைய இடத்தில் எழுத்தை பெரிய எழுத்தாக மாற்று (a -> A)
Alt+U - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களாக மாற்று (a->A)
Alt+L - தற்போதைய இடத்தில் சொல்லின் எல்லா எழுத்துக்களையும் சின்ன எழுத்துக்களாக மாற்று (A ->a)

Ctrl+U - தற்போதைய இடத்திலிருந்து ஆரம்பம் வரை வெட்டு
Ctrl+K - தற்போதைய இடத்திலிருந்து கடைசி வரை வெட்டு
Ctrl+Y - கடைசியாக சேமித்ததை (வெட்டுதல் மூலம்) ஒட்டு

Ctrl+T - தற்போதைய இடத்திற்கு முந்தைய எழுத்தை தற்போதை இடத்துக்கு அப்புறம் நகர்த்து

Ctrl+A - கட்டளைத் தொடரின் ஆரம்பத்துக்குப் போ
Ctrl+E - கட்டளைத் தொடரின் இறுதிக்குப் போ
Ctrl+B - ஒரு எழுத்து பின்னோக்கிப் போ

(2007ல் பாரதி சுப்ரமணியன் அனுப்பிய அஞ்சலிலிருந்து)

Ma Sivakumar
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
http://masivakumar.blogspot.com

மென் பொருள் துறையில் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் - சில எண்ணங்கள்

'அப்படி என்னதான் செய்யறீங்க? இத்தனை ஆயிரம் கோடி ஏற்றுமதி என்கிறாங்க, இத்தனை லட்சம் படிச்ச பசங்க வேலை பார்க்கிறாங்க. இன்னும் பல ஆண்டுகளுக்கு இது வளர்ந்து கொண்டே போகும் என்கிறாங்க. மென் பொருள்னா என்னங்க?'

'பொதுவா ஒரு பொருளை, சேவையை உருவாக்கி ஒருத்தருக்குக் கொடுத்து காசு சம்பாதிக்கிறோம். மென்பொருள் துறையில் என்ன நடக்குது, இவ்வளவு வளர்ச்சி என்று புரியவில்லை'

என்று நண்பர் ஒருவர் கேட்டார். வேதித் தொழில் நுட்பம் படித்து வளைகுடா நாடு ஒன்றில் பெரிய வேலையில் இருக்கிறார்.

நாமெல்லாம் கையால், விலங்குகளின்் ஆற்றலால் செய்து வந்த வேலைகளை இயந்திரங்களால் செய்ய ஆரம்பித்தது தொழில் புரட்சி போல, மனித மூளையில் நடந்து வந்த வேலைகளை கணினிகளால் செய்து கொள்வது தகவல் தொழில் நுட்பப் புரட்சி. நாம் இப்போது இருப்பது அந்தப் புரட்சியின் ஆரம்பக் கட்டங்களில்.
  • எங்கெல்லாம் திரும்பத் திரும்ப நடக்கும் கணக்குகள் போட வேண்டுமோ,
  • எங்கெல்லாம் தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு பின்னர் பயன்படுத்த வேண்டியிருக்கிறதோ,
  • எங்கெல்லாம் புதிய கருவிகளில் சிந்திக்கும் வேலை செய்ய வடிவமைக்க வேண்டுமோ
அங்கெல்லாம் மனித சிந்தனையை முழுமையாகவோ, பகுதியாகவோ மாற்றிக் கொள்ள கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. கணினிகளை இயக்க தேவைப் படும் உயிர்ப் பொருள்தான் மென்பொருள்.

அதுக்கு ஏன் இவ்வளவு மதிப்பு?

ஒரு நிறுவன மேலாண்மையை எடுத்துக்குவோம். சின்னக் கடை என்று வைத்துக் கொள்வோம். மொத்தமாக நொறுக்குத் தீனிகள் வாங்கி சின்ன அளவில் பொதிந்து கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி. வேலை செய்ய ஆறு பேர், தின்பண்டங்களை வழங்குபவர்கள் 10-15 இடங்கள், வாடிக்கையாளராக சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வினியோகிக்கும் பணி செய்பவர்கள் 10-12 பேர்.

இந்தத் தொழிலில் கையாள வேண்டிய விபரங்கள்,
  • யாரிடமிருந்து என்ன விலைக்கு, எந்தப் பொருளை வாங்குகிறோம்,
  • அவருக்குப் பணம் கொடுக்க வேண்டிய கொடுத்த தகவல்கள்,
  • வேலை பார்ப்பவர்கள் தினமும் வந்த விபரம், விடுமுறை எடுத்த விபரம்,
  • போட்ட பொதிகளின் எண்ணிக்கை அளவு வாரியாக,
  • யார் எத்தனை பொதிகள் எடுத்துச் சென்றார்கள், யார் எவ்வளவு பணம் தர வேண்டும்,
  • கைவசம் விற்காமல் சரக்கு எவ்வளவு மீதி இருக்கிறது
என்று வரவு செலவு கணக்கு போட வேண்டும்.
  • எந்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிய பொருளில் குறைபாடுகள் தென்பட்டன,
  • எந்த பொருளுக்கு விற்பனை அதிகரிக்கிறது, எதற்குக் குறைகிறது.
  • புதிதாக என்ன விற்க ஆரம்பிக்க வேண்டும்
என்று எதிர்காலத் திட்டமிடல்களும் வேண்டும்.

கணினி காலத்துக்கு முன்பு இத்தகைய தொழிலில் உரிமையாளர் ஒரு சின்ன நோட்டுப் புத்தகத்தில் விபரங்களைத் தனக்குப் புரியும் படிக் குறித்து வைத்துக் கொள்ளலாம், பணம் வர வேண்டிய விபரம், கையிருப்பு இரண்டையும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

இன்னும் நுணுக்கமாக தகவல் சேகரிக்க, குறித்து வைக்க அதை அலசிப் பார்க்க ஆரம்பித்தால் அவருக்கு அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும் அல்லது புதிதாக ஆள் போட வேண்டும். பெரிய நிறுவனங்களில் கணினிகள் வரும் முன்னரே இது போன்று தகவல் திரட்டுவதற்காக சிலரை வைத்திருப்பார்கள்.

ஆனாலும் மனித மூளையைப் பயன்படுத்தி சில வேலைகளை செய்வதில் அளவு இருக்கிறது. பெருவாரியான தகவல்களை சேமித்த வைத்தல், சிக்கலான கணக்குகளைப் போடுதல் போன்ற பணிகளுக்கு நமது மூளை அவ்வளவு திறமுடையது இல்லை. அந்த வேலைகளுக்கு மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதுதான் கணினித் துறை.

நீராவி எந்திரத்தை மனித ஆற்றலுக்கும், கால்நடைகளின் உழைப்புக்கும் மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அது வரை முடியாத பலப் பல சாத்தியங்கள் தோன்றின. தரையில் வேகமாகப் போக இயந்திரங்களை பயன்படுத்தும் போது, கிடைத்த கூடுதல் வேகத்தைப் பயன்படுத்தி பறக்கும் விமானங்களை உருவாக்க முடிந்தது. இதே போல நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான சிறிதும் பெரிதுமான கண்டுபிடிப்புகள் தோன்றி மனித வாழ்க்கையை மாற்றி அமைத்தன.

இவ்வளவு இருந்தாலும் 'இயந்திரம் என்ன வேலை செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும்' என்று திட்டமிட்டு, தீர்மானித்து அதை இயக்குவது மனிதக் கைகளால்தான் நடந்தது.

அதே போல நமது மூளையால், முடிந்த வரை செய்து வந்த வேலையைக் கணினிகளுக்கு தள்ளி விட்டு வேகமாக துல்லியமாக முடிக்கும் வசதி உருவானவுடன் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன.

எவ்வளவுதான் நடந்தாலும் கணினிகளைப் பயன்படுத்துவது, வடிவமைப்பது, இயக்குவது மனிதர்களாகத்தான் இருக்கிறது.

இப்படியாக வழக்கமான தொழில்களின் தகவல் திரட்டல், அலசுதல், பழைய கருவிகளை இயக்குதல், புதிய கண்டுபிடிப்புகளுக்கு உயிர் கொடுத்தல் என்று கணினிகள் பயன்படுத்தப்படும் எல்லா இடங்களிலும் மென்பொருட்கள் எனப்படும் கணினியின் உயிர்ப்பொருட்கள் பயன்படுகின்றன.

இத்தகைய மாற்றங்களில் பெரும் பகுதி அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் நடக்கின்றன.

நம்ம ஊரில் ரயில்வே துறையில் பயண முன்பதிவு, வங்கிகளில் கணினி மயமாக்கம், தொலை தொடர்பு நிறுவனங்களில் கணினி மயமாக்கம் என்று இருப்பது போல ஒவ்வொரு துறையிலும் கணினிகளைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்ட முன்னேறிய நாடுகளில்தான் மென்பொருள் தேவை பெரிய அளவில் இருக்கிறது.
  • மருத்துவர் ஒருவர் தான் பார்த்த நோயாளியைப் பற்றிய விபரங்களைச் சேமிக்க கணினிகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • தொழில் நிறுவனங்கள் தமது வாங்கல், விற்றல், சரக்கு கையிருப்பு, ஊழியர்களை கையாளுதல் போன்றவற்றுக்குக் கணினிப் பயன்பாடுகளைப் பயன்படுத்துகின்றன.
  • புதிது புதிதாகக் கண்டுபிடிப்புகள் தோன்றி அவற்றை இயக்க மென்பொருட்கள் தேவைப் படுகின்றன.
நாம் மென்பொருள் துறையில் வல்லரசு, இந்தியாவை நம்பித்தான் மேலை நாடுகள் இயங்குகின்றன, இந்தியா ஒளிருகிறது என்று பேசிக் கொள்வதில் முற்றிலும் உண்மை இல்லை.

மென் பொருள் பயன்படுத்துவது, அதன் மூலம் வாழ்க்கைத் தரம் உயர்வது, புதிய கண்டுபிடிப்புகள் நடப்பது எல்லாம் வேறு இடங்களில்தான். அதனால் அங்கு இருக்கும் வல்லுநர்கள் என்ன மென்பொருள் தேவை, அது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அதற்கு என்ன செலவு செய்யலாம் என்று திட்டமிட்டு அதை உருவாக்கும், பராமரிக்கும் பணியை நம் பக்கம் தள்ளி விடுகிறார்கள். அதைத்தான் நமது இளைஞர்கள் மாய்ந்து மாய்ந்து செய்கிறோம்.

இந்த நமது பணிக்கு ஆண்டுக்கு 50,000 கோடி வருமானம் கிடைக்கிறது என்றால் இந்தப் பணியைப் பயன்படுத்தும் சமூகங்களுக்கு அதை விட இரண்டு மடங்காவது நன்மை கிடைக்கும் அல்லவா?

மென்பொருள் என்பது ஒரு வீடு கட்டவது போல என்று வைத்துக் கொள்ளலாம்.

ஒருவருக்கு வசிக்க வீடு வேண்டும். அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர், யார் யார் என்ன செய்கிறார்கள், எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்று அலசி ஆராய்வது முதல் படி.

இரண்டாவதாக இந்தத் தேவையை எப்படி செயல் படுத்த முடியும் என்று படம் வரைவது, தொழில் நுட்பச் சாத்தியங்கள், செலவுகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டம் ஒன்றை உருவாக்குவது இரண்டாவது படி.

அதை வாடிக்கையாளர் ஏற்றுக் கொண்டால், திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என்று நடைமுறை வேலைகளைப் பார்ப்பது மூன்றாவது படி.

இந்த மூன்றாவது படி வேலைகளைத்தான் வெளிநாடுகளுக்கு மென்பொருள் சேவையை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் செய்கின்றன. ஜாவா, டாட் நெட் என்ற படித்து விட்டு வேலைக்குச் சேர்ந்தால் செய்யும் பணி கட்டிடம் கட்டும் வேலையில் செங்கல் அடுக்குவது, சாந்து குழைப்பது போன்ற வேலைகள்தான்.

அடுத்த படியில் உருவாக்கிய மென்பொருளைப் பராமரித்தல், பயன்படுத்தும் போது ஏற்படும் குறைகளை நிவர்த்தித்தல், பயனர் புதிதாகக் கேட்கும் மேம்பாடுகளை உருவாக்குதல் என்று முடிவில்லாமல் பணிகள் உள்ளன. வீட்டை தினமும் கூட்டிப் பெருக்க வைக்க நேரமும், ஆட்களும் இல்லாத நாடுகள் தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் சாத்தியங்களால் அந்த வேலைகளை வெளிநாடுகளில் செய்து வாங்கிக் கொள்ள முடிகிறது.

வேலை வாய்ப்பு என்று பரவலாகக் கிடைப்பது மேலே விளக்கியது போன்ற குறைந்த மதிப்பிலான பணிகள்தாம். அதனால் அவற்றைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. மென்பொருள் துறை இந்தியாவில் வளர்ந்ததால் பல்லாயிரக் கணக்கான பேருக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அந்தப் பணம் வரியாக அரசாங்கத்துக்குப் போய் நலப் பணிகளில் பயன்படுகிறது. மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களின் குடும்பங்களை தளைக்கின்றன. தொழில் வாய்ப்புகள் பெருகுகின்றன.

ஆனால், இவை எல்லாவற்றையும் விடப் பல மடங்கு மதிப்புள்ள சாத்தியங்கள் மென்பொருள் துறையில் உள்ளன. கணினிகளை நம் ஊர் பணிகளுக்கு செயல்படுத்தும் பெரும் பணி காத்திருக்கிறது. அதைச் செய்ய பெருமளவிலான முயற்சிகள் நடப்பதில்லை. பெரிய நிறுவனங்கள் கூட அமெரிக்க ஐரோப்பிய பணிகளை மட்டுமே எடுப்பது என்று கொள்கை முடிவுடன் இயங்குகின்றன.

வேலை வாய்ப்பு என்று சொன்னால், அத்தகைய நிறுவனங்களில் திறமையான, படித்த, பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைக்குப் பஞ்சமே இல்லை.

ஆனால் பெரும் புதையல் காத்திருப்பது உள்ளூர் பொருளாதாரத்தில். பேருந்தில் போகும் போது சீட்டு கொடுத்த பிறகு ஒரு சின்ன அட்டையில் கணக்குகளை எழுதிக் கொள்கிறார் நடத்துனர், பெங்களூரூவில் இருப்பது போல ஒரு குட்டிக் கணினியைக் கையில் வைத்துக் கொண்டு, அதில் விபரங்களை ஒத்தி சீட்டு அச்செடுத்துக் கொடுத்தால் விபரங்கள் தானாகவே பதிவாகி பணி முடிந்ததும் மையக் கணினியில் ஒப்படைத்து விடலாம். நடத்துனரின் பணி பல மடங்கு எளிதாகி விடும்.

எந்த தடத்தில் எந்த நேரத்தில் எந்த பருவத்தில் கூட்டம் அதிகமாக வருகிறது என்று ஆராய்ந்து பார்க்க, அதிக முயற்சி இல்லாமல், கணினியில் பதிக்கப்பட்ட விபரங்களைப் பயன்படுத்தி அறிக்கை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு சில நிமிடங்கள்தான் பிடிக்கும். அதைப் பொறுத்து முடிவுகளை எடுத்து பயணிகளுக்கு சேவையை மேம்படுத்தலாம்.

வளர்ந்த நாடுகளில் இந்த வேலைகளைச் செய்ய போதுமான பணியாளர்கள் கிடைக்காததால் அவை இந்தியா போன்ற நாடுகளில் செய்து பெறப்படுகின்றன.

காலக்கண்ணாடி

2008
  • தமிழகத்தில் மின்னணு கருவிகள் (electronic appliances) வாங்கினால் தமிழிலேயே நம் மக்களுக்கு எளிதாகப் புரியும் இடைமுகத்துடன் (interface) கிடைக்கின்றன.
  • கணினியில் பயன்படுத்தத் தேவைப்படும் மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மட்டும் தெரிந்த ஒருவர் கூட பயன்படுத்தும் வகையில் கிடைக்கின்றன.
  • தமிழ் மாணவர் எவரும் ஆங்கில அறிவுக் குறைவால் வாய்ப்பை இழக்கும் நிலை மாற ஆரம்பிக்கிறது.
2010
  • தமிழில் அறிவுக் கருவூலங்கள் (encyclopedia) பெருகி, யாரும் தமிழ் வழியே உலகின் அறிவுச் செல்வங்களை அணுகலாம் என்ற நிலைமை.
  • தமிழக அரசுப் பணிகள் யாவும் தமிழிலேயே நடைபெறுகின்றன. தகவல் இணைப்புகளால் அரசு அலுவல்களில் கால தாமதம், ஊழல் புரிவதற்கான வாய்ப்புகள் ஒழிந்து போகின்றன.
  • கடலுக்குப் போகும் மீனவர்களும், பயிர் போடும் விவசாயிகளும் தமக்கு வேண்டிய விபரங்களைத் திரட்டவும், தமது அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
  • வீட்டு செலவுக் கணக்குக்கும், கடைகளில் விற்பனைக் கணக்கும், செய்தித்தாள் போடுபவரின் கணக்கும், பால் கணக்கும் கணினிகளின் மூலம் செய்து கொள்ள முடிகிறது.
  • தமிழ் மருத்தவர்களும், தமிழ் பொறியாளர்களும், தமிழ் வணிகர்களும், வழக்கறிஞர்களும் தமது ஆவணங்களையும் (documents), குறிப்புகளையும் (records) முழுமையாகப் பதிவு செய்து தரமான சேவை வழங்க முடிகிறது.
  • படித்த இளைஞர்கள் யாவருக்கும் நமது சமூகத்திலேயே உலகத் தரத்திலான வேலை வாய்ப்புகளும், ஊதியமும் கிடைக்கிறது.
2020
  • ஆப்பிளின் iPod போல, மைக்ரோசாப்டின் விண்டோசு போல், லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு போல உலகையே மாற்றி அமைக்கும் கண்டுபிடிப்புகளுக்கு (inventions) தமிழகம் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறது.
  • மரபணு ஆராய்ச்சிகள், இயற்பியலின் முன்னணி பணிகள் தமிழகத்தின் பல்கலைக் கழகங்களில் தமிழிலேயே நடைபெறுகிறது.
  • உயர்தர திரைப்படங்கள், உலகே வியக்கும் கலைப் படைப்புகள் தமிழகத்தில் உருவாகின்றன.
  • தரமான சாலைகள், உயர்வான பொதுச் சேவைகள், எல்லோருக்கும் மருத்துவ வசதி, இயலாதவருக்கு சமூக ஆதரவு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுள்ள சமூகமாக தமிழகம் உலகுக்கே வழி காட்டுகிறது.
இதெல்லாம் நடக்க முடியுமா?
முடியும்.

யார் செய்வார்கள்?
நாம் எல்லோரும் சேர்ந்துதான்.

எப்படி?

தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்

வளர்தொழில் என்ற தொழில் பத்திரிகைக்கு அனுப்பிய கட்டுரை

தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்

இந்தியாவில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், தொழில்களுக்கான தொலைதூரச் சேவைகள் போன்ற துறைகள் பெருநகரங்களில் தளைத்து வளர்ந்துள்ளன. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளுக்கு தமது சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள், நம் ஊரின் ஆயிரக்கணக்கான இளம் பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தி, குறைந்த செலவில் தரமான சேவைகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன.

இதனால் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் அன்னியச் செலவாணி ஆண்டு தோறும் கிடைக்கின்றது. ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமையோ கணினித் துறையில் வல்லமையோ உள்ள இளம் பட்டதாரிகளுக்குத் தொடக்கத்திலேயே பத்தாயிரத்துக்கு மேல் சம்பளம் கொடுக்கும் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.

இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே! நாளிதழ்களிலும், தொழில் பத்திரிகைகளிலும் இது பற்றிய கட்டுரைகள், புள்ளி விபரங்கள், செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

அமெரிக்க ஐரோப்பியத் தொடர்புகள் இல்லாமல், ஆனால் தொழில் துறையில் திறமையுடைய தொழில் முனைவோருக்கு இந்தத் துறையில் என்ன வாய்ப்புகள் உள்ளன? ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாத, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் படித்த திறமையான பட்டதாரிகளுக்கும் மேற்சொன்ன தொழில் நுட்ப வளர்ச்சியில் பங்கு குறைவாகவே உள்ளது.

நம் ஊர் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, நம் ஊர்த் தொழில்களுக்கு உதவுமாறு தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, அவற்றை எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்.

முதலில் மென்பொருள் சேவைகளுக்கான இலக்குச் சந்தைகள் சில:
1. மத்திய மாநில அரசுகளின் கணினி மூலம் அரசாளும் திட்டங்களுக்கான மென் பொருட்கள்.
2. பெரிய தொழில் நிறுவனங்களில் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, அலசல் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.
3. பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, தேர்வுகள், கட்டணங்கள், பாடத்திட்டங்கள் பற்றிய தகவல்களை கையாளும் மென்பொருட்கள்.
4. ஆலயங்கள், மருத்துவமனைகள், தனி மருத்துவர்கள், கட்டிடம் கட்டித் தருபவர்கள் போன்ற சேவைத் துறைகளுக்கான மென்பொருட்கள்.
5. சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்கு மற்றும் கடிதப் போக்குவரத்து நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான மென்பொருட்கள்.
6. மளிகைக் கடை, மருந்துக் கடை, துணிக்கடை, காய்கறிக் கடைகளுக்கான மென்பொருட்கள்.
7. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாலான தோல் துறை, பிளாஸ்டிக் பொருட்கள் துறை, இயந்திரப் பாகங்கள் துறை, வாகனப் பாகங்கள் துறை போன்றவற்றில் தகவல் கையாளுதல் மற்றும் துறை தழுவிய தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.

இதுவரை யாரும் மென்பொருட்கள் செய்யவில்லையா? ஏன் அவை பிரபலமாகவில்லை? பெரிய பல்பொருள் அங்காடிகளிலும், வங்கிகளிலும், ரயில்வேயிலும், சில மருந்துக் கடைகளிலும், மென்பொருட்கள் பயன்படுவதைப் பார்த்திருக்கிறோம். இவை யாவும் பெரிய நிறுவனங்களைச் சார்ந்து மேற்கத்திய மேலாண்மை முறைகளைப் பின்பற்றுகின்றன. உண்மையிலேயே உள்நாட்டுத் தொழில்களின் மென்பொருள் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன:

1. பயன்பாட்டு மொழி
இப்போது கிடைக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அவற்றில் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலேயே சிந்தித்து தமிழ் மொழி பேசுபவர் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்ட மென் பொருட்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.
2. மென்பொருள் வடிவமைப்பு
ஏற்கனவே சொன்ன மாதிரி சந்தையில் கிடைக்கும் அனைத்து மென்பொருட்களும் மேல்நாட்டு பழக்கங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவை. நமது பழக்கத்துக்கு ஏற்றவாறு, நமது புரிதலுக்குச் சரியான வண்ணம் மென்பொருட்கள் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.

3. விலை
மென்பொருட்கள் மற்றும் கணினிகளின் விலை அமெரிக்கப் பொருளாதரத்துக்கு ஏற்றவாறே உள்ளன. ஒரு கணினியில் பயன்படுத்த ஆறாயிரம் ரூபாய் என்று தொடங்கும் விலைப் பட்டியல்கள் பல லட்சம் ரூபாய் விலைக்குக் கூட விற்கப்படுகின்றன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் மென்பொருட்கள் கிடைக்காததும் மென்பொருள் பயன்பாடு பரவலாகாமல் இருக்க ஒரு காரணமாகும்.

4. உரிமக் கட்டுப்பாடுகள்
வாங்கிய மென்பொருளை மற்றொரு கணினியில் நகல் செய்யக் கூடாது, அதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது, பழுது நீக்க வசதியாக மூலநிரல் கொடுக்க மாட்டோம், புதிய வசதிகளைச் செய்து கொள்ள மூல நிரல் கொடுக்க மாட்டோம் என்று மென்பொருள் விற்பனையாளர்கள் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிப்பதால், கணினியாக்கத்தின் பலன்களை நம் தொழில்கள் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.

5. துறை சார் நுணுக்கங்கள் இல்லாமை
மருந்துக் கடையில் சரக்குக் கையாளப் பயன்படும் மென்பொருள் மளிகைக்கடையில் அப்படியேப் பயன்படுத்த முடியாது. மளிகைத் துறையில் பல்லாண்டு செயல் முறை அனுபவம் உள்ள ஒருவர்தான் அந்தத் துறைக்குத் தேவையான நுணுக்கங்களை மென்பொருளில் வடிவமைக்க முடியும். கணினித் துறையில் மட்டுமே தேர்ந்த கணினி வல்லுநர்கள் செய்யும் மென்பொருட்கள் செயல்படுத்தப்பட முடியாமல் போய் விடுகின்றன.

இந்தக் குறைகளை எல்லாம் களைந்து குறைந்த விலையில், தமிழில், நமக்குப் வசதியான வடிவமைப்பில், பயன்படுத்துபவருக்கு எல்லா உரிமைகளையும் அளித்து துறை சார்ந்த நெளிவுசுளிவுகளையும் உள்ளடக்கி மென்பொருள் செய்து விற்று லாபம் ஈட்ட முடியுமா? இத்தகையத் தொழிலில் வேலை வாய்ப்புகளைப் பெருக்க முடியுமா?

சரக்கு விபரங்களைக் கையாளும் மென்பொருள் விற்பனையைப் பார்ப்போம். நம் ஊரில் சரக்குக் கையாளும் பொதுப் பழக்கங்களையும், கணக்கியல் விதிகளையும் நன்கு தெரிந்த ஒருவர், அனைத்துக்கும் பொருந்தும் வண்ணம் ஒரு மென்பொருள் வரைவு ஆவணத்தை உருவாக்குகிறார்.

அதை அறிவு சார் சொத்து என்று பூட்டி வைக்காமல், வெவ்வேறு துறைகளில் (மளிகை, காய்கறி, மருந்த்து வியாபாரம்) அனுபவம் நிறைந்தவர்களுக்கு குறைந்த விலையில் முழு உரிமைகளுடன் பயன்படுத்த விற்கிறார். அவர்கள் தமது துறைக்குத் தேவையான நெளிவுசுளுவுகளைச் சேர்த்து ஒரு மென்பொருளை உருவாக்கி, அந்தத் துறையில் மூல நிரலுடன் விற்கிறார்கள்.

ஒவ்வொரு கடையிலும் அவர்களுக்குத் தேவைப்படும் மாறுதல்களை செய்தல், கடைப் பணியாளர்களுக்கு மென்பொருளைப் பயன்படுத்தப் பயிற்சி அளித்தல் போன்றவற்றிற்குச் சேவை அடிப்படையில் தனிப்பயனாக்கத்துக்கு கட்டணம் வசூலித்து செய்து கொடுக்க ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் சிறு நிறுவனங்கள் உருவாகின்றன.

ஒருங்குறி எனப்படும் யூனிகோடு எழுத்துருக்களைப் பயன்படுத்தி எல்லா மென்பொருட்களும் தமிழிலேயே செய்யப்படுகின்றன.

இந்தச் சேவைகளை அளிக்க பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. கணினிகள் அவற்றில் வேலை செய்ய கணினிப் பட்டதாரிகள் இரண்டையும் சேர்த்து சேவையை வழங்க ஆரம்பித்து விடலாம்.