வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள்

வளர்தொழில் என்ற தொழில் பத்திரிகைக்கு அனுப்பிய கட்டுரை

தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள்

இந்தியாவில் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், தொழில்களுக்கான தொலைதூரச் சேவைகள் போன்ற துறைகள் பெருநகரங்களில் தளைத்து வளர்ந்துள்ளன. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளுக்கு தமது சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள், நம் ஊரின் ஆயிரக்கணக்கான இளம் பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தி, குறைந்த செலவில் தரமான சேவைகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன.

இதனால் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் அன்னியச் செலவாணி ஆண்டு தோறும் கிடைக்கின்றது. ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமையோ கணினித் துறையில் வல்லமையோ உள்ள இளம் பட்டதாரிகளுக்குத் தொடக்கத்திலேயே பத்தாயிரத்துக்கு மேல் சம்பளம் கொடுக்கும் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன.

இது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததே! நாளிதழ்களிலும், தொழில் பத்திரிகைகளிலும் இது பற்றிய கட்டுரைகள், புள்ளி விபரங்கள், செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

அமெரிக்க ஐரோப்பியத் தொடர்புகள் இல்லாமல், ஆனால் தொழில் துறையில் திறமையுடைய தொழில் முனைவோருக்கு இந்தத் துறையில் என்ன வாய்ப்புகள் உள்ளன? ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாத, சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் படித்த திறமையான பட்டதாரிகளுக்கும் மேற்சொன்ன தொழில் நுட்ப வளர்ச்சியில் பங்கு குறைவாகவே உள்ளது.

நம் ஊர் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு, நம் ஊர்த் தொழில்களுக்கு உதவுமாறு தகவல் தொழில் நுட்பத் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, அவற்றை எப்படி அணுகலாம் என்று பார்ப்போம்.

முதலில் மென்பொருள் சேவைகளுக்கான இலக்குச் சந்தைகள் சில:
1. மத்திய மாநில அரசுகளின் கணினி மூலம் அரசாளும் திட்டங்களுக்கான மென் பொருட்கள்.
2. பெரிய தொழில் நிறுவனங்களில் தகவல் சேகரிப்பு, சேமிப்பு, அலசல் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.
3. பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, தேர்வுகள், கட்டணங்கள், பாடத்திட்டங்கள் பற்றிய தகவல்களை கையாளும் மென்பொருட்கள்.
4. ஆலயங்கள், மருத்துவமனைகள், தனி மருத்துவர்கள், கட்டிடம் கட்டித் தருபவர்கள் போன்ற சேவைத் துறைகளுக்கான மென்பொருட்கள்.
5. சாலைப் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்கு மற்றும் கடிதப் போக்குவரத்து நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான மென்பொருட்கள்.
6. மளிகைக் கடை, மருந்துக் கடை, துணிக்கடை, காய்கறிக் கடைகளுக்கான மென்பொருட்கள்.
7. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களாலான தோல் துறை, பிளாஸ்டிக் பொருட்கள் துறை, இயந்திரப் பாகங்கள் துறை, வாகனப் பாகங்கள் துறை போன்றவற்றில் தகவல் கையாளுதல் மற்றும் துறை தழுவிய தகவல் பரிமாற்றங்களுக்கான மென்பொருட்கள்.

இதுவரை யாரும் மென்பொருட்கள் செய்யவில்லையா? ஏன் அவை பிரபலமாகவில்லை? பெரிய பல்பொருள் அங்காடிகளிலும், வங்கிகளிலும், ரயில்வேயிலும், சில மருந்துக் கடைகளிலும், மென்பொருட்கள் பயன்படுவதைப் பார்த்திருக்கிறோம். இவை யாவும் பெரிய நிறுவனங்களைச் சார்ந்து மேற்கத்திய மேலாண்மை முறைகளைப் பின்பற்றுகின்றன. உண்மையிலேயே உள்நாட்டுத் தொழில்களின் மென்பொருள் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன:

1. பயன்பாட்டு மொழி
இப்போது கிடைக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அவற்றில் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலேயே சிந்தித்து தமிழ் மொழி பேசுபவர் பயன்படுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்ட மென் பொருட்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.
2. மென்பொருள் வடிவமைப்பு
ஏற்கனவே சொன்ன மாதிரி சந்தையில் கிடைக்கும் அனைத்து மென்பொருட்களும் மேல்நாட்டு பழக்கங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டவை. நமது பழக்கத்துக்கு ஏற்றவாறு, நமது புரிதலுக்குச் சரியான வண்ணம் மென்பொருட்கள் கிடைக்காதது ஒரு குறையாகவே உள்ளது.

3. விலை
மென்பொருட்கள் மற்றும் கணினிகளின் விலை அமெரிக்கப் பொருளாதரத்துக்கு ஏற்றவாறே உள்ளன. ஒரு கணினியில் பயன்படுத்த ஆறாயிரம் ரூபாய் என்று தொடங்கும் விலைப் பட்டியல்கள் பல லட்சம் ரூபாய் விலைக்குக் கூட விற்கப்படுகின்றன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் மென்பொருட்கள் கிடைக்காததும் மென்பொருள் பயன்பாடு பரவலாகாமல் இருக்க ஒரு காரணமாகும்.

4. உரிமக் கட்டுப்பாடுகள்
வாங்கிய மென்பொருளை மற்றொரு கணினியில் நகல் செய்யக் கூடாது, அதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது, பழுது நீக்க வசதியாக மூலநிரல் கொடுக்க மாட்டோம், புதிய வசதிகளைச் செய்து கொள்ள மூல நிரல் கொடுக்க மாட்டோம் என்று மென்பொருள் விற்பனையாளர்கள் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிப்பதால், கணினியாக்கத்தின் பலன்களை நம் தொழில்கள் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது.

5. துறை சார் நுணுக்கங்கள் இல்லாமை
மருந்துக் கடையில் சரக்குக் கையாளப் பயன்படும் மென்பொருள் மளிகைக்கடையில் அப்படியேப் பயன்படுத்த முடியாது. மளிகைத் துறையில் பல்லாண்டு செயல் முறை அனுபவம் உள்ள ஒருவர்தான் அந்தத் துறைக்குத் தேவையான நுணுக்கங்களை மென்பொருளில் வடிவமைக்க முடியும். கணினித் துறையில் மட்டுமே தேர்ந்த கணினி வல்லுநர்கள் செய்யும் மென்பொருட்கள் செயல்படுத்தப்பட முடியாமல் போய் விடுகின்றன.

இந்தக் குறைகளை எல்லாம் களைந்து குறைந்த விலையில், தமிழில், நமக்குப் வசதியான வடிவமைப்பில், பயன்படுத்துபவருக்கு எல்லா உரிமைகளையும் அளித்து துறை சார்ந்த நெளிவுசுளிவுகளையும் உள்ளடக்கி மென்பொருள் செய்து விற்று லாபம் ஈட்ட முடியுமா? இத்தகையத் தொழிலில் வேலை வாய்ப்புகளைப் பெருக்க முடியுமா?

சரக்கு விபரங்களைக் கையாளும் மென்பொருள் விற்பனையைப் பார்ப்போம். நம் ஊரில் சரக்குக் கையாளும் பொதுப் பழக்கங்களையும், கணக்கியல் விதிகளையும் நன்கு தெரிந்த ஒருவர், அனைத்துக்கும் பொருந்தும் வண்ணம் ஒரு மென்பொருள் வரைவு ஆவணத்தை உருவாக்குகிறார்.

அதை அறிவு சார் சொத்து என்று பூட்டி வைக்காமல், வெவ்வேறு துறைகளில் (மளிகை, காய்கறி, மருந்த்து வியாபாரம்) அனுபவம் நிறைந்தவர்களுக்கு குறைந்த விலையில் முழு உரிமைகளுடன் பயன்படுத்த விற்கிறார். அவர்கள் தமது துறைக்குத் தேவையான நெளிவுசுளுவுகளைச் சேர்த்து ஒரு மென்பொருளை உருவாக்கி, அந்தத் துறையில் மூல நிரலுடன் விற்கிறார்கள்.

ஒவ்வொரு கடையிலும் அவர்களுக்குத் தேவைப்படும் மாறுதல்களை செய்தல், கடைப் பணியாளர்களுக்கு மென்பொருளைப் பயன்படுத்தப் பயிற்சி அளித்தல் போன்றவற்றிற்குச் சேவை அடிப்படையில் தனிப்பயனாக்கத்துக்கு கட்டணம் வசூலித்து செய்து கொடுக்க ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் சிறு நிறுவனங்கள் உருவாகின்றன.

ஒருங்குறி எனப்படும் யூனிகோடு எழுத்துருக்களைப் பயன்படுத்தி எல்லா மென்பொருட்களும் தமிழிலேயே செய்யப்படுகின்றன.

இந்தச் சேவைகளை அளிக்க பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. கணினிகள் அவற்றில் வேலை செய்ய கணினிப் பட்டதாரிகள் இரண்டையும் சேர்த்து சேவையை வழங்க ஆரம்பித்து விடலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக