சனி, 23 ஜூன், 2012

கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் இணையதளங்களின் மீதான இந்திய தடை நீங்குகிறது


பைரட்பே உள்ளிட்ட பல பிரபல இணையவழி   கோப்பு பகிர்ந்து கொள்ளும் சேவைகள்  இந்தியாவில் சென்ற மாதம் தடை செய்யப்பட்டன.  இப்போது  சென்னை உயர்நீதி மன்றம் தனது முந்தைய தீர்ப்பை மாற்றியிருக்கிறது


"முந்தைய நீதிமன்ற உத்தரவு, பதிப்புரிமை வைத்திருப்பவர் குறிப்பிட்ட இணைய தளம் அல்லது இணைய சேவை நிறுவனத்தை மட்டும் குறிப்பிடாமல்,  பரவலான தடையை கோரும் படி அனுமதித்தது. பயனர்களும், 'முகமிலி' குழுக்களும் விரும்பா விட்டாலும், நீதி மன்ற ஆணையை நடைமுறைப் படுத்துவதைத் தவிர இணைய சேவை நிறுவனங்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தது." 


இப்போதைய ஆணையின்படி, ஒரு கோப்பு பகிர்ந்து கொள்ளப்படுவதை தடுக்க குறிப்பிட்ட சுட்டியை  மட்டும் தடுத்தால் போதுமானது. "இணைய சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு பதிவு செய்த மேல் முறையீட்டை தொடர்ந்து இந்த புதிய ஆணை வழங்கப்பட்டது."


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக விவாதங்கள்  நடக்கின்றன). 

வெள்ளி, 22 ஜூன், 2012

என்வீடியாவும் லினக்சும்


லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பராமரிக்கும் லினஸ் தோர்வால்ட்ஸ் லினக்ஸில் அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் என்வீடியாவின் பங்களிப்பை குறை கூறி தாக்கினார்

"லினக்ஸ் இயங்கு தளத்தில் அவரது பங்களிப்புக்காக வழங்கப்பட்ட ஆயிரமாண்டு பரிசை பெற்றுக் கொள்வதற்காக பின்லாந்து போயிருந்த லினஸ் தோர்வால்ட்ஸூடன் ஆல்டோ பல்கலைக் கழகம் ஒரு உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 

கேள்வி நேரத்தின் போது ஒருவர் லினக்சில் 'என்வீடியா ஏன் சரியாக வேலை செய்வதில்லை' என்று கேட்டார். 'லினக்ஸ் உருவாக்கத்தில் பங்குபெறும் நிறுவனங்களில் மிக மோசமானவற்றில் ஒன்று என்வீடியா' என்று லினஸ் கருத்து சொன்னார். ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு (அவற்றின் உள்ளே இருப்பது லினக்ஸ்தான்) என்வீடியா பெரும் எண்ணிக்கையிலான சிப்புகளை வழங்குவது நிலவரத்தை இன்னும் மோசமாக்குகிறது. 


லினக்சில் என்வீடியா இயக்கிகளைப் பற்றி உங்கள் அனுபவம் என்ன?"


இப்படி ஒரு செய்தி ஜூன் 17ம் தேதி ஸ்லாஷ்டாட்டில் விவாதிக்கப்பட்டது


ஜூன் 20ம் தேதி என்வீடியா நிறுவனம் லினஸ் டோர்வால்ட்சுக்கு பதில் சொல்கிறது. 

"என்வீடியாவின் மக்கள் தொடர்பு பிரிவு லினஸ் டோர்வால்ட்சின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தான் சேர்ந்து பணியாற்றிய நிறுவனங்களிலேயே மோசமானது என்றும், லினக்சில் ஆப்டிமசை பயன்படுத்த உதவ மறுப்பதற்காகவும், மற்ற விஷயங்களுக்காகவும் லினஸ் என்வீடியாவை  தாக்கியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின் அறிக்கை சுருக்கமாக, அவர்களது தனிவுரிமை இயக்கியை லினக்ஸ் பயன்படுத்துவதை எப்போதும் ஆதரிப்பதாகவும், அந்த இயக்கி பல்வேறு இயங்குதளங்களுக்கும் ஒரே மாதிரியானது என்பதால்,  உடனுக்குடன் முழுமையான ஓப்பன் ஜிஎல் செயல்படுத்தலுடன் லினக்ஸில் ஆதரவு அளிப்பதை அது உறுதி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளது. டேக்ராவுக்கு ஏஆர்ம் லினக்சில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும், லினக்சில் பல வகையான கணினிகளில் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் சொல்கிறார்கள். லினக்சில் ஆப்டிமஸ் பயன்பாட்டுக்கு இன்னும் சிறப்பான உதவி தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காததோடு, நோவோ குழுவினருக்கு தொழில் நுட்ப உதவி வழங்குவதையும் குறிப்பிடாவிட்டாலும், 'எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பலவகையான இயங்குதளங்களிலும் ஒரே மாதிரியான ஜிபியு அனுபவத்தை வழங்குவதுதான் எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது' என்று நமக்கு உறுதி அளிக்கிறது என்வீடியா. 


இது தொடர்பான விவாதம்.

(இந்தச் செய்திகள் ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது).

ஆரக்கிளின் காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் $0 கொடுக்க வேண்டும்


"ஆரக்கிளின் காப்புரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கூகுள் $0 கொடுக்க வேண்டும்  என்று அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பு அளித்தது. வழக்கு செலவுகளை ஆரக்கிளிடமிருந்து வாங்குவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய (போலியான வழக்குகளில் செய்வதைப் போல) கூகுளுக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 


இருந்தாலும், கூகுளுக்கு 'இனி எல்லாம் சுகமே' என்று ஆகி விடவில்லை, இந்தத் தீர்ப்பை மேல் முறையீட்டுக்கு எடுத்து செல்ல ஆரக்கிள் திட்டமிட்டுள்ளது. 

(இந்தச் செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன)

நல்ல ஊழியர்களுக்கு ஏன் மோசமான வேலைகள் கிடைக்கின்றன (அல்லது வேலையே கிடைப்பதில்லை)


"நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்கள் ஏன் கிடைப்பதில்லை" என்ற கட்டுரை வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கடந்த அக்டோபரில் (2011) வெளியானது. மூன்று தலைமுறைகளில் பார்த்திராத பொருளாதார நெருக்கடியின் காரணமாக கோடிக்கணக்கான படித்த, அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வேலை இல்லாமல் இருக்கும் சூழலிலும் நிறுவனங்கள் திறமை படைத்த ஊழியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக சொல்கின்றன. 

பொருத்தமான கல்வியை வழங்காத கல்வி நிலையங்களையும், புலம் பெயரும் ஊழியர்களை போதுமான அளவு அனுமதிக்காத அரசாங்கத்தையும் பழிப்பதோடு மட்டுமில்லாமல் நல்ல சம்பளத்துடனான நல்ல வேலைகளில் சேர மறுக்கும் ஊழியர்களையும் குறை சொல்கின்றன நிறுவனங்கள்.

அந்தக் கட்டுரையை எழுதியவர் வேலை வாய்ப்பு மற்றும் மேலாண்மை துறைகளில் நிபுணரான பீட்டர் கேப்பல்லி. 'நிறுவனங்கள் அனைத்தும் திறமைக் குறைவு பற்றி ஒத்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் அதற்கான ஆதாரங்கள்  இல்லை' என்று முடித்திருந்தார்.  


'உண்மையில் குறை சொல்லப்பட வேண்டியவை வேலை கொடுக்கும் நிறுவனங்கள்தான்' என்பது அவரது முடிவு. 

அவருடனான ஒரு நேர்முகத்தை இங்கு படிக்கலாம்.  திறமை குறைவுகள் என்று சொல்லப்படுவதைப் பற்றிய ஒரு புத்தகத்தை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  


(இந்த செய்தி ஸ்லாஷ்டாட் என்ற தகவல் தொழில் நுட்பம் தொடர்பான செய்திகளை விவாதிக்கும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அந்தத் தளத்தில் இது தொடர்பாக சூடான விவாதங்கள்  நடக்கின்றன).