வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

மென்பொருள் வணிகத்துக்கு சாவு மணி

English Version

சென்னை லினக்சு பயனர் குழு என்ற மடற்குழு ஒன்று இயங்கி வருகிறது. "ILUG-C" என்ற மின்னஞ்சலில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் குழுவில் நடக்கும் மடற்பரிமாற்றங்கள் நமக்கும் வந்து சேரும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடற்குழுவில் உரையாடல்கள் கொஞ்சம் தூங்கி வடிந்து கொண்டு இருக்கும். எப்போதாவது வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு நான்கைந்து முறை மடல்கள்பரிமாறிக் கொள்ளப்படும். மாதா மாதம் நேரடி சந்திப்பு ஏற்பாடு செய்வார்கள். அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையில் சிலர் ஆர்வமாகக் கலந்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

இன்றைக்கு மடற்குழுவில் ஒரு நாளைக்கு சராசரியாக 20முதல் 30 மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பல்வேறு கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு திட்டப்பணி, வேலை வாய்ப்புகள், தொழில் நுட்ப ஐயங்கள் குறித்து கேள்விகள் கேட்க பதில் சொல்லவும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இன்று கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், வேலைவாய்ப்பு தளங்கள் எல்ல இடங்களிலும் லினக்சு, பிஎச்பி, மைஎஸ்கியூஎல் என்ற திறவூற்று மென்பொருட்கள் (open source software) வளமையான பெயர்களாகிப் போய் விட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் கூட விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருந்த இவை மைய நிலைக்கு வந்து விட்டதன் பின்னணி என்ன? என்னதான் நடந்தது? நடக்கிறது? இனிவரும் ஆண்டுகளில் என்னென்ன மாறப் போகிறது?

'தனிமனிதர்களால் என்ன சாதிக்க முடியும்? பெரிய நிறுவனங்கள், அரசாங்கங்கள் திட்டமிட்டு செயல்படும் போது தனி மனிதர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தவிர என்ன செய்து விட முடியும்' என்று சலித்து விடாமல் ஒரு தனிமனிதர் ஆரம்பித்த இயக்கத்தின் விளைவுதான் மென்பொருள் துறையில் நாம் பார்க்கும் இந்தப் புரட்சி.

கல்லூரியில், வேலை பார்க்கும் இடத்தில், ஒருவர் கற்றுக் கொண்டதை, ஒருவர் உருவாக்கியதை மற்றவருடன் பகிர்ந்து கொண்டால், இரண்டு பேருக்கும் நன்மை. அறிவுச் செல்வம் மட்டும் பகிர்ந்து கொள்வதால் குறைவதில்லை. இரண்டு பேர் தத்தமது கருத்துக்களை, ஆக்கங்களை பகிர்ந்து கொண்டால் இரண்டு பேருக்கும் இரண்டும் கிடைத்திருக்கும். புதிய கருத்துக்களை பெற்றவர் அதன் அடிப்படையில் சிந்தித்து அடுத்தடுத்த மேம்பாடுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.

பல நூற்றாண்டுகளாக அறிவியலில் முன்னேற்றங்கள் அப்படித்தான் ஏற்பட்டு வந்தன. ஒரு அறிவியலாளர் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை அலசி ஆராய்ந்து மற்றவர்கள் ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு அடுத்து வருபவர் அந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த மேம்பாடுகளை முயற்சிக்க முடியும். ஒவ்வொருவரும் தத்தமது கருத்துக்களை, ஆராய்ச்சி முடிவுகளை மூடி வைத்துக் கொண்டால் கடந்து நான்கு நூற்றாண்டுகளின் அறிவியல் முன்னேற்றம் சாத்தியமாகியிருக்காது.

கணினிகளின் தோற்றத்துடன் கணினிகளை இயக்கும் மென்பொருள் துறையும் உருவானது. மென்பொருள் நிரல் எழுதுவது மனிதர் படித்துப் புரிந்து கொள்ள முடியும் மொழியில், a முதல் z வரையிலான எழுத்துக்கள், 0 முதல் 9 வரையிலான எண்கள், சில குறியீடுகளைப் பயன்படுத்தி நடக்கிறது. C, C++, Java, C# என்று பல கணினி மொழிகளிலும் நிரலாளர் எழுதும் செயலிகளின் அடிப்படை வடிவம் source code அல்லது மூலநிரல் எனப்படும் இந்த உரை வடிவம்தான்.

கணினியில் இயக்கும் முன்பு இந்த மூலநிரலை கணினி புரிந்து கொள்ளும் இரும மொழிக்கு மாற்றி ஒரு binary அல்லது இருமம் உருவாக்க வேண்டும். இந்த இரும வடிவக் கோப்பில் இருக்கும் கட்டளைகளை கணினி மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும். மனிதர்கள் படித்துப் புரிந்து கொள்ள முடியாத ஒன்று இரும வடிவக் கோப்பு. செயலியில் ஏதாவது மாற்றம் அல்லது பிழை திருத்தம் செய்ய வேண்டுமானால் மூலநிரல் கோப்பில் மாற்றங்களை செய்து மீண்டும் தொகுத்து (compile) இரும வடிவ கோப்பை உருவாக்கி பயனருக்குக் கொடுக்க வேண்டும்.

நிரல் எழுதும் மென்பொருள் நிரலாளருக்கும் செயலியைப் பயன்படுத்தும் பயனருக்கும் நடுவில் இடைத்தரகராக ஒரு வணிக துறை உருவாக்கும் முயற்சி 1970களின் இறுதியில் ஆரம்பித்து 1980களில் பெருமளவு வெற்றி பெற்று விட்டிருந்தது. நிரலாளரிடமிருந்து மூலநிரலை எடுத்து, அதன் இரும வடிவை மட்டும் பயனருக்கு விற்கும் வணிக முறை நடைமுறைக்கு வந்தது. பயனர் கிடைத்த இருமத்தை இயக்கிப் பயன்படுத்தலாம், ஏதாவது மாற்றம் அல்லது திருத்தம் தேவைப்பட்டால் அவரால் எதுவும் செய்ய முடியாது. மூலநிரலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிறுவனம் மனம் வைத்தால் ஒழிய இவரது கதை கந்தல்தான்.

இந்தப் பின்னணியில், வணிக நிறுவனங்களின் கிடுக்கிப்பிடியில் சிறைபட்டுக் கிடந்த மென்பொருள் நிரல்களை விடுதலை செய்ய ஆரம்பித்த இயக்கம்தான் திறவூற்று மென்பொருள் இயக்கமும் அதன் விளைவான லினக்சு இயங்குதளம் சார்ந்த மென்பொருள்களும்.

1. ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்பவர் 1980களில் அமெரிக்காவின் எம்ஐடி கல்லூரியில் மென்பொருள் நிரலாளராக (software programmer) பணியாற்றி வந்தார். மேலே சொன்ன மென்பொருள் வணிகமயமாக்கலை அவர் தீவிரமாக எதிர்த்தார். அந்தக் காலத்தில் அடித்து வந்த அந்த ஆழிப்பேரலையில் அவரது குரல் எடுபடாமல் போய் விட்டது. ஆனால் அதற்காக ஓய்ந்து நின்று விடவில்லை.

1983ல் 70களில் பெரிதும் பயன்பட்டு வந்த யுனிக்சு இயங்குதளத்துக்கு முற்றிலும் திறவூற்று முறையில் ஒரு மாற்று இயங்குதளத்தை உருவாக்குவோம் என்று சூளுரைத்து GNU எனப்படும் குனு திட்டப்பணியை ஆரம்பித்தார், 1985ல் Free Software Foundation (பரிநிரல் அறக்கட்டளை) என்ற நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்.

'மென்பொருளை விடுதலை செய்வோம்' என்ற போர்க் குரலுடன் கடந்த 25 ஆண்டுகளாக தனது கொள்கையில் உறுதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது நாம் பார்க்கும் திறவூற்று மென்பொருள் துறையின் அடித்தளத்தை ஏற்படுத்தி அதன் மூளையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட் ஸ்டால்மேன்.

2. GNU GPL என்ற உரிம ஆவணத்தின்படி தனது மென்பொருள் ஆக்கங்களை வெளியிட்டதோடு மற்றவர்களையும் அதே உரிமத்தைப் பயன்படுத்தும் படி பிரச்சாரம் செய்கிறார் ஸ்டால்மேன். இந்த உரிமத்தின் கீழ் கிடைக்கும் மென்பொருட்கள் இரும வடிவக் கோப்பாக மட்டுமில்லாமல் கூடவே மூல நிரல் கோப்பும் சேர்த்து வருகின்றன.

வாங்குபவர் அதை எத்தனை நகல்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், தனக்குத் தேவையான படி, பிடித்தபடி மூலநிரலை மாற்றி செயலி உருவாக்கிக் கொள்ளலாம், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், அல்லது விலைக்குக் கூட விற்கலாம். ஒரே ஒரு நிபந்தனை: அடுத்தவர்களுக்கு இந்த மென்பொருளைக் கொடுக்கும் போதும் தனக்குக் கிடைத்த இந்த எல்லா உரிமைகளையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

3. 1991ல் அப்போது 32 வயதான பின்லாந்து மென்பொருள் வல்லுனர் லினஸ் டோர்வால்ட்ஸ் என்பவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். தனக்குப் புதிதாகக் கிடைத்த இன்டெல் 386 IBM பயனர் கணினியை இயக்குவதற்காக அவர் எழுதிப் பார்த்த இயங்குதளத்துக்கு செல்லமாக வைத்த பெயர் லினக்சு. அப்படி எழுதிய இயங்குதளத்தின் மூலநிரலை பூட்டி வைக்காமல் இணையத்தில் எல்லோரும் தகவிறக்கி பயன்படுத்தும் வண்ணம் வெளியிடும் போடும் பரிநிரல் அறக்கட்டளையின் GPL உரிமத்தின் கீழ் வெளியிட்டார்.

அதை யார் வேண்டுமானாலும் தகவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம், நகல் செய்து நண்பர்களுடம் பகிர்ந்து கொள்ளலாம், தமக்குத் தேவையான அல்லது விருப்பமான மாற்றங்களை செய்து பயன்படுத்தலாம், அல்லது மற்றவர்களுக்கு வினியோகிக்கலாம். தமக்குக் கிடைத்த உரிமைகளை மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி வினியோகிக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே நிபந்தனை.

1991 ஆகஸ்டு 25ல் இதைக்குறித்து அவர் அனுப்பிய அறிவிப்பிற்குப் பிறகு மென்பொருள் துறையின் தலைவிதி மொத்தமாகவே திருப்பிப் போடப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அன்று முதல் இப்போது வரை லினக்சு இயங்குதளத்தின் kernel உருவாக்கத்தை வழிநடத்தி வருகிறார் லினஸ் தோர்வால்ட்ஸ்.

4. இந்த வரிசையில் அடுத்துக் குறிப்படப் பட வேண்டியது ரெட்ஹாட் என்னும் நிறுவனம்.

லினக்சு இயங்குதள kernel உடன், பரிநிரல் அறக்கட்டளையின் நிரல் தொகுப்புகளையும், மென்பொருள் கருவிகளையும் பொதிந்து பயனர்க்கு எளிதாக பயன்படும் வண்ணம் கொடுப்பவர்கள் லினக்சு தொகுப்பாளர்கள் (Linux distributions). மேலே சொன்ன எல்லா மென்பொருள் நிரலிகளின் உரிமத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். இன்றைக்கு நூற்றுக்கணக்கான அத்தகைய தொகுப்புகள் கிடைக்கின்றன.

லினக்சை வணிக ரீதியாக வெற்றிகரமாக நிறுவனங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஈடுபட்டு பெரு வெற்றி பெற்றவர்களில் முன்னோடி ரெட்ஹாட் நிறுவனம். 1994ல் ரெட்ஹாட் 1.0 என்று ஆரம்பித்த அவர்களது சேவை 15 ஆண்டுகளில் வேர் விட்டு தளைத்து வளர்ந்து கடந்த ஆண்டில் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகம் வருமானம் பார்த்த தொழிலாக மாறியிருக்கிறது.

5. லினக்சு முதலான திறவூற்று மென்பொருள்கள் தளைத்து வளர்வதற்கு செழிப்பான சூழலை உருவாக்கித் தந்தது இணையம். ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலே இணையத்தின் மூலம் கூட்டாகப் பணியாற்றுவதுதான் திறவூற்று மென்பொருட்களின் வளர்ச்சிக்கு பணிமுறை. திறவூற்று மென்பொருளை பயன்படுத்த அதில் தமது வேலைவாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த இணையத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூலநிரல் பட்டறை என்று பொருள்படும் இந்த இணையத் தளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான திறவூற்று மென்பொருள் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20 லட்சம் மென்பொருள் நிரலாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.
கூட்டாகச் சேர்ந்து மென்பொருள் உருவாக்கத் தேவைப்படும் கருவிகளான மூலநிரல் மேலாண்மை, மடற்குழு, இணையத் தளத்துக்கான கட்டமைப்பு போன்றவற்றை இலவசமாக வழங்குகிறது sourceforge.net

திறவூற்று மென்பொருள் உலகத்தில் என்ன நடக்கிறது, இன்றைய சேதி என்ன, அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அலசி ஆராய்ந்து விவாதிப்பதற்காக உருவான தளம் இது. 1997ல் ராப் மால்டா என்ற அமெரிக்க மாணவரால் உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில் சூடான சுவையான கருத்துச் செறிந்த விவாதங்களை படிக்கலாம்.

இந்திய லினக்சு பயனர் குழுவின் சென்னை பிரிவு.

5. 1998 ஜனவரியில் மைக்ரோசாப்டின் போட்டியால் மோசமாக பாதிக்கப்பட்ட நெட்ஸ்கேப் நிறுவனம் வையவிரிவுவலையை சாதித்துக் காட்டிய தனது நெட்ஸ்கேப் உலாவியின் மூலநிரலை திறவூற்றாக வெளியிட்டது. அந்த சாம்பலிலிருந்து உருவான மோசில்லா திட்டமும் அதன் குழந்தையான பயர்பாக்சு உலாவியும் திறவூற்று மென்பொருள் இயக்கத்தின் முன்னணி செயலிகளாக விளங்குகின்றன.

6. 2001ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் திறவூற்று மென்பொருட்களை பிரபலப்படுத்துவதற்காக ஒரு ஆண்டில் 1 பில்லியன் டாலர் (நாலாயிரம் கோடி ரூபாய்) செலவழிப்பதாக அறிவித்து செய்து காட்டியது. சன் மைக்ரோசிஸ்டம்ஸ், எச்பி என்று மென்பொருள் துறையின் பெருந்தலைகளும் ஒவ்வொருவராக தமது திறவூற்று திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த வேண்டி வந்தது.

7. இப்போது திறவூற்று மென்பொருளாக என்னென்ன கிடைக்கின்றன?

  • இயங்குதளங்கள் - லினக்சு, ஓப்பன் சோலாரிசு, பிஎஸ்டி பதிப்புகள் (Linux, Open Solaris, BSD variants)
  • அலுவலக கருவிகள் - ஓப்பன் ஆபிசு, அபிவேர்டு, Kஆபிசு (Open Office, Abiword, KOffice)
  • உலாவிகள் - மோசில்லா பயர்பாக்சு, கூகுள் குரோம் (Mozilla Firefox, Google Chrome)
  • தரவுத்தளங்கள் - போஸ்ப்கிரெஸ்கியூஎல், மைஎஸ்கியூஎல் (PostgreSQL, MySQL, SQLite)
  • இணைய வழங்கி - அப்பச்சே (apache httpd0
  • படங்கள் வரைய - ஜிம்ப் (GIMP)
8. இன்னும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான செயலிகள் திறவூற்று முறையில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படவும், தொடர்ந்து மேம்படுத்தப்படவும் செய்யப்படுகின்றன. அப்படி என்னென்ன கிடைக்கின்றன என்பதற்கு சிரமப்பட்டுத் தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏதாவது ஒரு லினக்சு பொதிக் குவியலின் அடர்தகடு ஒன்றை வாங்கி கணினியில் நிறுவிக் கொண்டால் போதும்

லினக்சு பொதிதொகுப்புகள் (Linux Distributions)
1. Fedora Linux (RedHad)
2. Debian
3. Open SuSe (Novell Suse)
4. Ubuntu (Debian based)
5. Slackware
6. Mandriva
7. PCLinux OS
8. CentOS
இன்னும் பல.

9. தமிழும் திறவூற்று மென்பொருட்களும்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளையும் சேர்ந்த தன்னார்வலர்களால் இயக்கப்படும் திறவூற்று மென்பொருட்களில் பன்மொழி வசதிகள் இயல்பாகவே செய்யப்பட்டன. லினக்சின் மேசை சூழலான கேடிஈ நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது. தமிழ் மொழி 1990களின் இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வெளியாலும் எல்லா லினக்சு தொகுப்பு சேவைகளிலும் செயல்படுத்தப்படும்படியாக கிடைக்கிறது.

உலகெங்கிலும் பரவியிருக்கும் ஈழம், தமிழ்நாடு, சிங்கப்பூர் முதலான பகுதிகளைச் சார்ந்த தமிழர்களின் பணிக்கொடைகளால் திறவூற்று மென்பொருட்களில் தமிழ்மொழியும் தனக்குரிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

10. கட்டமைப்புகள் (சாலைகள், துறைமுகங்கள், ரயில்பாதைகள்) பொதுச்சொத்தாக இருக்கும் போது, தனிமனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தி சமூகத்துக்குப் பலனளிக்கும் வணிகமுயற்சிகளை மேற்கொள்ள முடியும். கட்டமைப்புகளையே கட்டிப் போட்டு விடக் கூடாது என்ற உயரிய நோக்கில் நடந்து கொண்டிருக்கும் இந்தப் புரட்சி தமிழ்நாட்டு மாணவர்களுக்கிடையேயும் இன்னும் பரவி வளமான எதிர்காலத்துக்கு வழி வகுக்கும் என்று நம்பிக்கையுடன் முன்னுரைக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/File:Rms_ifi_large.jpg
http://en.wikipedia.org/wiki/File:Linus_Torvalds.jpeg

2 கருத்துரைகள்:

karthi kesan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
karthi kesan சொன்னது…

Excellent, that it clearly explains the fundamentals of both marketing and technical aspects of software industries. People from developing countries like India and from poor countries, were intelligent enough to understand and work with Information Technology. But they lack practical knowledge of marketing tricks, mostly unethical. That’s how microsoft stands successful, with more than 50% profit, clearly unethical. Microsoft should have reduced its product price.

கருத்துரையிடுக