எறும்புகள் குழுவின் மூலம் அறிமுகமாயிருந்த ஜெயராதா அம்பலம் இணைய இதழில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். e-கலப்பை உருவாக்கலில் இவருக்கும் பங்குண்டு.
அவரைப் போய்ப் பார்க்கும் போதும் என் மடிக்கணினியை கொண்டு போய் தமிழ் இடைமுகத்தைக் காட்டினேன். சுஜாதா சாரைப் பார்த்து இதைக் காட்டுங்கள், அவர் உதவியுடன் மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபடலாம் என்று சொன்னார்.
பல நாட்கள் கழித்து சுஜாதா அவர்களின் வீட்டுக்குப் போய் இது பற்றிப் பேசினோம். 'எதுக்கு வீண் வேலை, கணினி மொழியைத் தமிழில் ஆக்கி என்ன செய்யப் போகிறீர்கள்' என்று ஆரம்பித்த அவர், 'இடைமுகத்தைத்தான் மொழிமாற்றுகிறோம்' என்று விளக்கியதும் இந்தப் பணியில் வழிகாட்ட முன்வந்தார்.
ஏதாவது அரசுத் துறையில் திட்டப் பணி சமர்ப்பித்து நிதி உதவி கூட வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார். அப்போது டிஷ்நெட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த சாந்தகுமாரும் இந்தக் குழுவில் சேர்ந்து கொள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி ஒன்றை உருவாக்கும் முயற்சிக்குப் பண உதவி தர ஒப்புதல் பெற்றோம்.
ஓப்பன் ஆஃபிசை முதலில் தமிழில் மொழி மாற்றலாம் என்று, அதிலிருந்து பிரித்துக் கொடுத்த சொற்களை சுஜாதா மொழிபெயர்த்துக் கொடுத்து விட்டார். அவற்றை ஒன்று சேர்த்து தமிழ் இடைமுகத்தை ஓப்பன் ஆஃபிஸில் காட்ட சில வாரங்கள் முயற்சித்து என்று முழு நேரமாக குழுவில் சேர்ந்த ஹரிராம் வெற்றி கண்டு விட்டார். எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இன்னும் பிற குழுக்களின் முயற்சிகளையும் சேர்த்து ஓப்பன் ஆபிசு இப்போது தமிழிலேயே கிடைக்கிறது.
டிஷ்நெட் பின்னணியில் அவர்களது நுங்கம்பாக்கம் இணைய உலவும் மையத்தை பயன்படுத்த அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு மாரத்தான்கள் நடத்தினோம். ஆரம்பத்தில் சுஜாதா கற்றதும் பெற்றதும் மூலம் ஆனந்த விகடனில் அழைப்பு விட, தன்னார்வலர்கள் சேர்ந்து ஒரு ஞாயிற்றுக் கிழமை முதல் மாரத்தான் நடந்தது.
எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி இரண்டையும் தொடர்பு கொண்டு மாணவர்களை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்த ஜெயராதா களத்தில் இறங்கினார். ஒரே நேரத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார்கள். எல்லாக் கணினிகளிலும் poedit நிறுவி, பொதுவான சொல்லகராதி ஒன்றை வைத்துக் கொண்டு ஒருவொருக்கொருவர் விவாதித்துக் கொண்டு சுறுசுறுப்பாக பணி நடந்தது.
தொண்ணூறாயிரம் சொற்றொடர்கள் இருந்த கேடீயீ இடைமுகத்துக்கான பெரும்பாலான சொற்களை மொழிபெயர்த்து கேடியி திட்டக் கிடங்கில் சேர்த்து விட்டோம். தமிழ் முதல் ஐந்து மொழிகளில் ஒன்றாக பட்டியலில் வந்தது. ஒவ்வொன்றாக ரெட்ஹாட் கணினி மேலாண்மை கருவிகளின் மொழிபெயர்ப்புகளும் நடந்தது.
இதற்கிடையே மடற்குழுக்களில் வெங்கட் உடன் தேவையில்லாத ஒரு விவாதத்தில் இறங்கி பல இழப்புகளை உருவாக்கி விட்டேன் நான். சுஜாதாவை முன் நிறுத்துவது அவருக்குப் பிடிக்கவில்லை. அது வரை நடந்த பணிகளை இருட்டடித்து பேர் வாங்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களில் எங்கள் குழுவினரின் பெருமளவு ஆர்வம் வடிந்து கொண்டிருந்தது.
இது வரை நடந்த பணிகளை பொதுமக்களுக்குக் காட்ட லயோலா கல்லூரியில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினோம். சுஜாதா அவர்களின் அழைப்பைப் பார்த்து நூற்றுக் கணக்கான கணினி ஆர்வலர்கள் கூடியிருந்தார்கள். அதைக் குறித்த பத்ரியின் இடுகைகள் இதோ.
ழ கணினி அறிமுகம் - 1 , 2, 3, 4.
அப்புறம் ஓரிரு மாதம் வேலையைத் தொடர முயன்றோம். சாந்தகுமார் வெளியூருக்கு வேலை மாற்றிப் போனார். ஜெயராதா ரெட்ஹாட் இந்தியாவில் வேலை கிடைத்து பூனேவுக்குப் போனார். நானும், ஹரிராமும் எங்கள் தொழிலில் அதிகக் கவனம் செலுத்தப் போவதாக ஒதுங்கிக் கொள்ள அந்தத் திட்டம் அந்த நிலையிலேயே நின்று விட்டது.
அதன் பிறகு ஜெயராதா மட்டும் தன்னால் முடிந்த அளவில் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இப்போது கிடைத்த விபரங்களின் படி ராமதாஸ் என்பவர் கேடியி மொழியாக்கக் குழுவையும், என்பவர் ஜினோம் மொழிமாற்றக் குழுவையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்போதும் கேடியீ இடைமுக மொழிபெயர்ப்புகளில் தமிழில் பெருமளவு பணி முடிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மொழிகளிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது தமிழ்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக