வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தமிழ்நெட் 99 உள்ளீட்டு முறை

தமிழ்நாட்டின் அன்றைய வளமைப்படி பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிந்து முடிவுகளுக்குக் காத்திருக்கும் நீண்ட மூன்று மாத கால இடைவெளியில் கையில் சுருட்டிய தாளுடன் டைப் படிக்கக் கிளம்பினோம். தட்டச்சில் லோயர் தேர்வில் சான்றிதழ் பெறும் வரை பயிற்சி தொடர்ந்தது. (இரண்டு ஆண்டுகள் என்று நினைவு).

எப்படிப் போனோம், யார் யார் போனோம், யார் யாரைப் பார்த்தோம் என்ற கிளைக் கதைகளை விடுத்து தட்டச்சிடுவது குறித்துப் புரிந்து கொண்ட சில அடிப்படைகள் இன்றைக்கும் நினைவில் இருப்பதைச் சொல்கிறேன்.

ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்தும் qwerty என்று முதல் வரிசையில் எழுத்துக்கள் அமைக்கப்பட்டிருக்கும் உள்ளீட்டு முறையின் சாதகங்களை இப்படிப் பட்டியலிடுவார்கள்: (பிற்பாடு கணினி பயன்படுத்த ஆரம்பித்த பிறகு இணையத்தில் படித்ததில், Dvorak முறையில்தான் இந்த எல்லா பண்புகளும் இருப்பதாகத் தெரிந்தது. qwerty முறையில், தட்டச்சு கருவியின் கம்பிகள் ஒன்றுக்கொன்று சிக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் முதன்மை நோக்கமாக இருந்திருக்கிறது.)
  1. அதிகமாகப் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் வலிமையான விரல்களால் அடிக்கப்பட வேண்டும். தட்டச்சுப்பலகையின் மையத்தில் dfghjk ertiuy xcvmnb என்ற எழுத்துக்களை வைத்திருப்பார்கள். நான்கு விரல்களால் ஒவ்வொரு எழுத்துக்கும் உரிய விரலால் அடிக்க வேண்டும் என்ற முறையில் இந்த எழுத்துக்கள் ஆள்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் போய்ச் சேரும்.
  2. ஆங்கிலச் சொற்களை அலசி எந்தெந்த எழுத்துக்கள் அருகருகே வருகின்றனவோ அந்த எழுத்துக்கள் தட்டச்சு முறையிலும் அருகருகே இருக்க வேண்டும் என்று அமைத்திருப்பார்கள். iou mnb போன்றவற்றை இவற்றுக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
  3. shift விசையை அழுத்த சுண்டு விரலைப் பயன்படுத்த வேண்டும். அதனால் விரல் சீக்கிரம் களைத்து விடும் சாத்தியங்கள் உண்டு.
1987ல் ஆரம்பித்த தட்டச்சுப் பழக்கம் கல்லூரியில் படிக்கும் போது முற்றிலும் பயன்படாமலேயே போனது. மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது மோட்டர் வண்டி ஓட்டும் போது கை கொடுப்பது போல, வேலையில் சேர்ந்து கணினி பயன்படுத்த ஆரம்பித்த போது தட்டச்சு பழக்கம் பின்னணியிலிருந்து தாங்கிப் பிடித்தது.

1997ல் சீனாவுக்கு வேலைக்குப் போய் தனிக்கணினி வாங்கிய பிறகு தட்டச்சுவதை ஒரு மனப்பயிற்சி போல கூட செய்து வந்தேன். அந்த நேரத்தில் அறிமுகமானது முரசு அஞ்சல், அதனுடன் வந்தது 'ammaa என்று அடித்தால் அம்மா என்று வந்து விடுமாம்' என்று வாயைப் பிளக்க வைக்கும் அஞ்சல் தட்டச்சு முறை. இன்றைக்கு தமிங்கில தட்டச்சு முறை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஏற்கனவே ஆங்கிலத் தட்டச்சு தெரிந்ததால், தமிழுக்கும் அதையே பயன்படுத்த ஆரம்பித்தேன். 'தமிழில் தட்டச்சுவதற்குப் போய் புதிய முறையைக் கற்றுக் கொள்வதாவது' என்ற அலட்சிய மனப்பான்மையும் இருந்திருக்கலாம்.

1999ல் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்நெட்99 தட்டச்சு முறை தமிழ் இணையத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே தமிழ்த் தட்டச்சு பயின்று அதைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே, தமிங்கில முறையின் மாயப்பிடிக்கு மயங்காதவர்கள். புதிதாக தமிழில் எழுத ஆரம்பிக்கும் யாருக்கும் தமிங்கில முறைதான் பொருத்தமானது என்று பொதுக்கருத்து உருவாகியிருந்தது.

தமிழ் மடற்குழுக்களில் அவ்வப்போது எழுதுவதைத் தவிர அதிகமாக எழுத்துப் பழக்கம் வந்து விடவில்லை. சென்னைக்கு வந்து 2005 வாக்கில் தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகமாயின. 2006ல் எழுத ஆரம்பித்த பிறகு தமிழ் தட்டச்சுவது தினசரி வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக ஆனது. ஒரு மணி நேரம் எழுதி முடித்த பிறகு கைகள் உளைச்சல் எடுக்கும். இயல்புதானே என்று ஓய்வெடுத்துக் கொள்வேன். ஆங்கிலத்தில் இதே ஒரு மணி நேரம் அடித்து ஒப்பிட்டுப் பார்த்ததில்லை.

போன மே மாதம் கோவையில் செல்லா ஏற்பாடு செய்திருந்த பதிவர் பட்டறையில் பேசிய முகுந்த் 'தான் இப்போது தமிழ்99 முறையையே பயன்படுத்துவதாகச்' சொன்னார். எல்லோரும் அதற்கு மாறுவது பலனுள்ளதாக இருக்கும் என்றும் சொன்னார். முயற்சித்துப் பார்க்கலாமே என்று அந்த மாத இறுதியிலிருந்து ஆரம்பித்து விட்டேன்.

ஆறு மாதங்கள் ஓடி விட்டன. 20 ஆண்டுகளாக பழகியிருந்த ஆங்கில தட்டச்சு முறைக்குக் கூடுதலாக, கற்றுக் கொண்ட தமிழ்த் தட்டச்சு முறை இப்போது தன்னிச்சையாகி விட்டது. எண்ணம் போகும் வேகத்தில் தட்டச்சிட முடிகிறது.

ஆரம்பத்தில் சொன்ன 'அதிகமாகப் பயன்படும் எழுத்துக்கள் வலுவான விரல்களுக்கு அருகில், அருகருகே வரும் எழுத்துக்கள் அருகருகே' என்று பல தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் கூடி விவாதித்து உருவான முறை தமிழ்99 என்று தமிழ்99 முறையை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்த நண்பர் செந்தில்நாதன் சொன்னார். சிந்தாநதியும் ரவிசங்கரும் தமிழ்99 முறையை பரவலாக்க முயற்சிகளில் இறங்கி இருந்தார்கள்.

சராசரியாக நிமிடத்துக்கு 20 சொற்களுக்கு மேல் உள்ளிட முடிகிறது. இது நானாக எழுதும் கட்டுரைகளுக்கு. எதையாவது பார்த்து நகல் செய்தால் 30 சொற்களை எளிதாகத் தொட்டு விட முடிகிறது. ஒரு மணி நேரம் தட்டச்சிட்டால் 1200 சொற்கள் சுலபமாக உருவாகி விடுகின்றன.

எண்ணிக்கையை விட கை விரல்களுக்குக் கிடைக்கும் ஓய்வு முக்கியமானது. தமிழ் 99 முறையில் தட்டச்சிட்டால் தமிங்கில முறையுடன் ஒப்பிடும் போது கை விரல்களுக்கு வேலை மிகவும் குறைவு. மேலே சொன்ன புள்ளிவிபர வடிவமைப்புடன், 'எந்த ஒரு தமிழ் எழுத்தையும் shift விசை அழுத்தாமலேயே உள்ளிட முடியும். இரண்டு விசைகளை அழுத்தி எல்லா எழுத்துக்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்.' என்ற வசதிகள் தமிழில் எழுதுவதை ஆங்கிலத்தில் தட்டச்சிடுவதற்கு இணையாக எளிதாக்குகிறது தமிழ்99 தட்டச்சு முறை.

தமிங்கில முறையில் அடிக்கும் போது நமது மனம் சிந்தனைகளைத் தொகுக்கும் வேலையுடன். தமிழ் சொற்களை ஆங்கில எழுத்துக்களாக மாற்றும் வேலையையும் கூடவே செய்ய வேண்டியிருக்கும். அதனால் மூளையின் processing திறன் பிளவு பட்டு விடும். தமிழ்99 முறையில் தமிழில் சிந்தித்து இடைத் தரகு மொழி இல்லாமல் நேரடியாக தமிழிலேயே உள்ளிட்டு தமிழ்ப் படைப்புகளை உருவாக்கலாம்.

இப்போது தமிழ்க்கணிமை ஆங்கிலத் தட்டச்சு தெரிந்த, ஆங்கிலத்தில் ஏற்கனவே நன்கு பழகி விட்ட மக்களைத் தாண்டி, மாணவர்களிடம், தமிழகத்து பொதுமக்களிடம் போய்ச் சேர ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் தமிழில் தட்டச்சும் எல்லோருமே தமிழ்99 முறையையே பின்பற்றும் படி கற்றுக் கொடுப்பது அவர்களது எதிர்காலத்துக்கும் தமிழின் வளத்துக்கும் தேவையான ஒன்று.

தமிங்கில முறையில் எத்தனை ஆண்டுகள் தட்டச்சினாலும், அது நமது ஆங்கிலப் புலமையைத்தான் அதிகமாக்கும். சொல்லப் போனால், ஆங்கில எழுத்துக்களை தமிழ்99 முறையில் அடிக்கப் பழகிக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கலாம்.
  • ஏற்கனவே ஆங்கிலத் தட்டச்சு முறையாகக் கற்றுக் கொண்டவர்கள், அப்
  • படிக் கற்றுக் கொள்ளாமல் வேகமாக அடிப்பவர்கள்,
  • தமிங்கில முறையில் தமிழில் எழுதுபவர்கள்
  • எல்லோருமே சில வாரங்கள் முயன்று தமிழ்99 முறையைப் பழகிக் கொண்டால் மேலே சொன்ன எல்லா பலன்களையும் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக