கல்லூரி மாணவர்களுக்கு இயங்குதளம் பற்றிக் கற்றுக் கொடுக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் பாடப் புத்தகத்தை எழுதியவர் ஆண்ட்ரூ தானன்பவும் என்ற பேராசிரியர். லினஸ் தோர்வால்ட்ஸ் படித்துக் கொண்டிருந்த 1991லேயே அவரது புத்தகம்தான் பிரபலம். புத்தகத்துக்கு கூடவே மினிக்ஸ் என்று பொம்மை இயங்குதளத்தையும் மூல நிரலோடு மாணவர்களுக்கு வினியோகித்தார்கள்.
மினிக்ஸ் எளிதாக மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கூடுதல் வசதிகள் சேர்ப்பதை மறுத்து வந்தார் தானன்பவும். லினக்சுக்குக் கிடைத்த 386 கணினியை சரிவரப் பயன்படுத்த மினிக்ஸ் தோதுவாக இல்லை. எம்எஸ் தாஸ் போன்ற இயங்குதளங்களை காசு கொடுத்து வாங்கினாலும், மூலநிரல் கிடைக்காது என்பதால் லினஸ் போன்ற மாணவர்களுக்குப் பலன் இல்லை.
தனது கணினியில் பயன்படுத்துவதற்காக ஹெல்சிங்கியின் குளிர்கால இரவு நாட்களில் எழுதிய இயங்கு தள நிரலின் முதல் பதிப்பை இணையத்தில் வெளியிட்டார் லினஸ். பொது மக்கள் உரிமத்தின் கீழ் கிடைத்த அந்த நிரலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்றி அமைக்கலாம், கூடுதல் வசதிகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
உலகின் பல மூலைகளிலிருந்த கணினி வல்லுனர்கள், பயனர்கள், மாணவர்கள் லினஸ் தோர்வால்ட்சின் லினக்சு இயங்குதளத்தை தத்தமது கணினிகளில் நிறுவிப் பார்த்தார்கள். தமக்குத் தென்பட்ட குறைகளை சரி செய்தார்கள், தமக்குத் தேவையான பகுதிகளை தாமே எழுதிக் கொண்டார்கள். இந்த சரி செய்தல்கள், புது பகுதிகளும் பொது மக்கள் உரிமத்தின் விதிப்படி எல்லோருக்கும் மூல நிரலோடு கிடைத்தன.
அதை லினக்சுடனே சேர்த்து லினக்சு வளர ஆரம்பித்தது. இன்றைக்கும் லினக்ஸ் தோர்வால்ட்சின் மென்மையான தலைமையின்/வழிகாட்டலின் கீழ் சில நூறு கணினி வல்லுனர்கள் எழுதும் நிரல்கள்தான் லினக்சை வளர்த்து வருகின்றன. இவர்களில் பலர் ஒருவரை ஒருவர் சந்தித்தே இருக்க மாட்டார்கள். பின்னர் நிகழ்ந்த வணிக முயற்சிகளால் சிலர் பல்வேறு நிறுவனங்களின் சார்பாக முழு நேரமும் இதில் ஈடுபடுகிறார்கள். ஆனால், எல்லோருமே தன்னார்வலர்கள்தாம்.
இன்று லினக்சு என்று அறியப்படும் நிரல் இயங்குதளம் என்று அழைக்கப்படும் கணினி இயக்கத்தின் உட்கருதான். இன்றைக்கு இயங்குதளம் என்று அதற்கு மேல் சேர்க்கப்பட்ட மேல் வசதிகளையும் சேர்த்து அறியப்பட்டாலும், கணினிவியலைப் பொறுத்த வரை இந்த உட்கருதான் இயங்குதளம். அதைச் சுற்றி பல அடுக்குகளாக பிற கூறுகள் சேர்க்கப்படலாம்.
லினக்சு உருவாகத் தேவையான தொகுப்பி, நிரல் தொகுப்புகள் GNU மூலம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. லினக்சில் சாளர அமைப்பிலான இடைமுகம் வழங்குவதற்கு X வழங்கி, சாளர மேலாளர்கள், அவற்றுக்கு மேல் மேசைத்தள சூழல்கள் (கேடியீ, ஜினோம்) என்று தனித்தனி திட்டப் பணிகளாக நடந்து வருகின்றன. ஒவ்வொரு திட்டத்துக்குத் தேவையான கூறுகள் பிற திட்டங்களிலிருந்து கிடைக்கின்றன.
இயங்கு தள மூலக்கருவிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு அடுக்கிலும் தனக்குப் பிடித்த தேர்வை சேர்த்து பல வகையிலான மென்பொருள் தொகுப்பை ஒருவர் உருவாக்கிக் கொள்ள முடியும். லினக்சு, XFree86, கேடியி, Kஆபிசு, கான்கொரர் என்று ஒருவர் போனால், பிஎஸ்டி, X.org, ஜினோம், ஃபயர்ஃபாக்சு, ஓப்பன் ஆபிசு என்று இன்னொருவர் அமைத்துக் கொள்ளலாம். எந்த அடுக்கிலும் கிடைக்கும் பலவகையான தேர்வுகளில் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒவ்வொருவரும் இப்படி உட்கார்ந்து தனித்தனிக் கூறுகளைப் பொறுமையாகப் பொறுக்கி எடுத்து ஒருங்கிணைத்து மென்பொருள் தொகுப்பை உருவாக்கிக் கொள்வது நடக்காத ஒன்று. அதற்குத் தேவையான தொழில் நுட்ப அறிவு சிலருக்கே இருக்கும். பரவலாக இந்தத் தொகுப்புகளைப் பயன்படுத்த உருவானவை லினக்சு பொதி சேவைகள் (linux distributions).
ரெட்ஹாட், மாண்ட்ரிவா, டெபியன், உபுண்டு, சூசே, லின்ஸ்பைர் என்று பல நிறுவனங்கள் தேவைப்படும் எல்லா அடுக்குகளையும் ஒன்று சேர்த்து தமது பெயர் பொறித்து தொகுப்பாக குறுவட்டு அல்லது அடர்வட்டில் வெளியிடுகின்றனர். இவற்றின் மூலம் யார் வேண்டுமானாலும் லினக்சை பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது.
இப்படி பரவலான பங்களிப்பின் மூலம் உருவாவதால் பல்வேறு நாட்டினரின், பல்வேறு மொழி பேசுபவர்களின் தேவைகளுக்கேற்ப பரிநிரல் மென்பொருட்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பயனர் இடைமுகம் மட்டும் தமிழில் வேண்டும் என்றால், கேடியியில் பயன்படும் சொற்றொடர்களை மொழிபெயர்த்து சேர்த்து விட்டால் தமிழ் மேசைச் சூழல் கிடைத்து விடும்.
தமிழர் பயன்படுத்தும்படி முற்றிலும் மாறுபட்ட ஒரு பயனர் இடைமுகம் வடிவமைக்க வேண்டும் என்று ஒருவர் முன்வந்தால் அதற்குத் தேவையான கூறுகளாக ஏற்கனவே இருப்பவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேசைத்தளம் என்பது உயர்தட்டு மக்களுக்குப் பழக்கமானது. விவசாயியும், மீனவரும் மேசையைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கான இடைமுகம் ஏன் மேசைத்தளமாக இருக்க வேண்டும். மாட்டு வண்டியாகவோ, வயற்காடாகவோ, கடற்பரப்பாகவோ இடைமுகம் வடிவமைக்கப்படலாம். ஏற்கனவே கிடைக்கும் இடைமுகங்களை தமிழ் படுத்துவது முதல் முயற்சியாக இருந்தாலும் நமக்குத் தேவையான, நமக்குப் பழகிய வடிவமைப்பை உருவாக்குவது இறுதி நோக்கமாக இருக்க வேண்டும்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக