வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தோல் துறை தகவல் பரிமாற்றம்

2000ம் ஆண்டில் நான் இங்கிலாந்தின் பிஎல்சி தோல் தொழில்நுட்ப மையத்தின் ஷாங்காய் கிளையில் பணி புரிந்து கொண்டிருந்தேன். அப்போது தாய்வானில் இருந்த ஒரு தோல் நிறுவனத்துக்குப் போயிருந்தேன். அந்த நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி தோல் பதனிடும் நிறுவனம் மற்றும் தாய்வானின் காலணி உருவாக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாக உருவானது.

அவர்களது தலைமை அலுவலகம் தாய்வானின் வடக்கு நகரமான தாய்பெயில் இருந்தது. தோல் பதனிடும் தொழிற்சாலையின் மைய தொழிற்சாலை தாய்வானின் மத்திய நகரமான தாய்சுங்கில் இருந்தது. நிறுவனத்தில் தலைமை மேலாளர் மற்றும் அவரது உதவியாளர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது புதிய பெரிய தோல் தொழிற்சாலை சீனாவில் இருந்தது. சீன தோல் தொழிற்சாலையில் இங்கிலாந்து, தாய்வான் மற்றும் உள்ளூர் மேலாளர்களும், பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களும் வேலை செய்து வந்தார்கள்.

ஹாங்காங் நகரத்தில் அவர்களுக்கு ஒரு வணிக அலுவலகம் செயல்பட்டது. அதன் மூலம் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை கையாண்டு வந்தார்கள்.

நிறுவனம் பதப்படுத்தப் போகும் தோல்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அமெரிக்க கூட்டாளியின் முதன்மை நோக்கம் அவர்கள் அமெரிக்காவில் உற்பத்தி செய்யும் இடைநிலை தோல்கள் விற்பது. தோல்களை பதப்படுத்தி வரும் இறுதித் தோல் சீனா மற்றும் தாய்வானில் இருக்கும் காலணித் தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டது. செய்யப்பட்ட காலணி அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி விமானப் போக்குவரத்து கிடையாது. தாய்வானிலிருந்து சீனா வருபவர்கள் ஹாங்காங் போய்த்தான் வர வேண்டும்.

தலைமை அலுவலகம், இரண்டு தோல் பதனிடும் தொழிற்சாலைகள், காலணி வாங்கும் நிறுவனங்கள், ஹாங்காங் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், காலணித் தொழிற்சாலை இவர்களுக்கிடையே தினமும் தொலைபேசி மூலம், துரித அஞ்சல் சேவை மூலம், மின்னஞ்சல் மூலம், நேரடி சந்திப்புகள் மூலம் தொடர்புகள் இருந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான தகவல் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தகவலும் அடுத்தவருக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் அவர் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். கால தாமதங்கள் பெரிய இழப்புகளை கொடுத்து விடும்.

2000ம் ஆண்டில் அதை பார்த்த எனக்கு மலைப்பாக இருந்தது. இவ்வளவையும் எப்படி சமாளித்து செல்கிறார்கள்! தகவல் சேகரிப்பு, அறிக்கை தயாரிப்பு, தகவல் பரிமாற்றம் மூன்றையும் ஒருமுகப்படுத்த முடியுமா என்று சிந்தனைகள் ஓட ஆரம்பித்தன.

அந்த நேரத்தில் டாட்காம் பூம் உச்சத்தில் இருந்த நேரம். எனது மற்ற தொடர்புகள் மூலம் இணையத்தையும் அதன் பயன்பாடுகளையும் உணர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் தோல் துறையில் இருக்கும் எல்லா நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் மென்பொருள் பயன்பாடு ஒன்று உருவாக்கி சேவை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்தேன்.

சிறிய, நடுத்தர, அல்லது பெரிய நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் மேலே சொன்ன பல நாட்டு வாடிக்கையாளர்கள், பல நாட்டு இடுபொருட்கள் வாங்கித்தான் தோல் துறையில் தொழில் நடத்துகிறோம். தரவு சேகரித்தலும், அதை தகவலாக மாற்றுவதும், மாற்றியதை பகிர்ந்து கொள்வதும் தொழிலின் அடிப்படைத் தேவைகள்.

எந்த ஒரு வேலையை செய்தாலும் அதன் விபரங்களை பதிவு செய்து வைத்து கொள்கிறோம். நிறுவனத்துக்கு வேதிப் பொருட்கள் வந்தால் அதை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்கிறோம். தோல் வாடிக்கையாளருக்குப் போகும் போது அதற்காக ஒரு சீட்டு தயாரித்து அனுப்புவதோடு குறிப்பேட்டிலும் குறித்துக் கொள்கிறோம்.

தேவையான பொழுது குறிக்கப்பட்ட தரவுகளிலிருந்து அறிக்கைகளை தயாரித்துக் கொள்கிறோம். விற்பனை அறிக்கை, சரக்கு கையிருப்பு, பணம் கொடுக்க வேண்டிய விபரங்கள், வாங்கிய அறிக்கை என்று கைவசம் இருக்கும் தகவல்களை வைத்து தயாரித்துக் கொள்ளலாம்.

பல நேரங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அல்லது விற்பனையாளர்களுக்கு அனுப்பி வைக்கிறோம். 'இன்ன தேதியில் இன்ன பொருள் அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கான விற்பனை ஆவணம் இதோ' என்று அனுப்பினால்தான் வாடிக்கையாளரிடம் பணம் பெற முடியும். மாதிரி பொருட்கள் குறித்த வாடிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளிக்கிறோம்.

தகவல் கையாளுவதைப் பொறுத்த வரை
  • தகவலை சரிவர சேகரித்தல்
  • சேகரித்த தகவலை பாதுகாப்பாக பதிவு செய்தல்
  • பதிவு செய்த தகவலிருந்து அறிக்கைகள் தயாரித்தல்,
  • தகவல்களை பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்

    இந்த நான்குமே அடிப்படையான காரணிகள்.
இந்த நான்கையும் திட்டமிட்டு வடிவமைத்து ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்பாடுகளை புகுத்தி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, எளிதாக அறிக்கைகள் தயாரிப்பது, சுலபமாக தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது, தேவையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நிலைகளை புகுத்துவது என்று பல படிகளில் செயல்படுவது நிறுவன மேலாண்மை மென்பொருட்கள். பல கோடி ரூபாய் செலவு பிடிக்கும் எஸ்ஏபி முதல் சில லட்சத்துக்குக் குறையாத சேவைகள் வரை பல நிலைகளில் அவை கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, நிறுவனத்தில் செயல்படுத்தினால் மேலே சொன்ன பல பயன்கள் கிடைத்து நிறுவனம் முதலீட்டில் பல மடங்கு ஆதாயம் ஈட்டிக் கொள்ளலாம்.

பொதுவாக அவ்வளவு பெரிய முதலீடு செய்வதற்கு பெரிய நிறுவனங்களுக்கு சாத்தியமிருக்கிறது. நடுத்தர நிறுவனங்களுக்கு அந்த அளவு பணம் போட்டு நிறுவனம் முழுவதும் மாற்றங்களை புகுத்தி நிறுவன மேலாண்மை மென்பொருள் ஒன்றை அமல்படுத்துவதற்கு நிறைய தயக்கம் இருக்கிறது.

ஆரம்பத்தில் நாங்கள் விற்ற மென்பொருளின் விலை மற்றும் சேவை முறை சில ஆயிரங்களுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். எங்களது அடிப்படை நோக்கம் அறிக்கை உருவாக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம். தகவலை பதிவு செய்தல், கட்டுப்பாடு நடவடிக்கைகள் இவற்றில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

50 பேருக்கு உட்பட்ட அளவில் பணியாளர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் தகவலை பதிவு செய்வதும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் நிறுவன உரிமையாளரின் நேரடிக் கண்காணிப்பில் நடந்து விடும். பதிவு செய்த தகவல்களிலிருந்து அறிக்கை எடுப்பதும் தகவல் பரிமாற்றம் செய்வதும் சிக்கலான வேலையாக இருக்கும்.

படிப்படியாக பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் பதிவு செய்தல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் என்ற நிறுவன மேலாண்மை மென்பொருட்களை தயாரித்தாலும், அவற்றுடன் கூடவே தேவைப்படும் பல அறிக்கைகள் உருவாக்குதல், தகவல் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற கூறுகளை உறுதியாக தயாரித்துக் கொண்டிருந்தோம்.

விற்பனை தகவல்கள் இருந்தால் அதிலிருந்து ஆயிரக்கணக்கான வெவ்வேறு அறிக்கைகளை தயாரிக்க முடியும். தகவல்களை யாருக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அப்படி வடிவமைத்து, யாருடன் எந்த அளவில் எந்த வழியில் பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கிறோம்.

நிறுவன மேலாண்மை மென்பொருளைப் பயன்படுத்தும் நிறுவனம் தமது இன்வாய்சுகளை அஞ்சலிலோ மின்னஞ்சலிலோ அனுப்பத் தேவையில்லை. விபரங்களை மென்பொருளில் உள்ளிட்டு விட்டால், வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க ஒரு இணைப்பு அனுப்பப்பட்டு விடும். அதிலிருந்து அவர் அச்செடுத்துக் கொள்ளலாம். விற்பனை விபரங்களிலிருந்து அந்த மாதத்துக்கான விற்பனை அறிக்கை கூடுதல் முயற்சி இல்லாமலேயே கிடைத்து விடும். வாடிக்கையாளரிடமிருந்து பணம் வர வேண்டியிருக்கிறது என்ற அறிக்கையும் உடனடியாக கிடைக்கும். பொருளுடன் அனுப்புவதற்காக ஆவணங்கள் அச்சு வடிவில் கிடைத்து விடும். சரக்கு கையிருப்பில் பொருட்களின் அளவு குறைந்து விடும்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இப்போது டேலி போன்ற கணக்கியல் மென்பொருட்கள் அல்லது எக்செல் போன்ற விரிதாள் மென்பொருட்களில் தகவலை பதிந்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி பதியப்பட்ட தகவல்களிலிருந்து நூற்றுக்கணக்கான அறிக்கைகள் தயாரிக்கவும், தேவைப்படும் நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டிய விபரங்களை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கும் தேவையான மென்பொருள் ஒன்றை நிறுவன மேலாண்மை மென்பொருளிலிருந்து பிரித்து எடுத்து தனியாக வழங்குகிறோம். அதுதான் குளோவியூ.

தகவலை மின்னஞ்சல் அல்லது அச்சுப் பிரதி அல்லது கையால் எழுதி அனுப்பினால் அனுப்புபவர் அதை தயாரிப்பதற்கு ஒரு முறை பெறுபவர் விபரங்களை தனது பக்கத்தில் பதிவு செய்து கொள்வதற்கு கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். பதிவு செய்யப்பட்ட தகவல்களிலிருந்து அறிக்கைகள் தயாரிப்பதற்கு மணிக்கணக்கில் வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்த முறையில் தகவலை மின்னணு வடிவில் பொதிந்து அனுப்பிக் கொள்ளலாம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக